Thursday 6 March 2008

வலைஞனும் மீனும்

வெகு காலத்துக்கு முன்னால் ஒரு வயதான வலைஞனும், அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ரொம்ப ஏழைகள். ஒரு குடிசை வீடும், உடைந்த மரத் தொட்டியும் மட்டுமே அவர்களிடம் இருந்தன. ரொம்பக் கஷ்டப்பட்டு நாட்களைக் கடத்தி வந்தார்கள்.
ஒரு நாள் வலைஞன் வழக்கம் போல மீன் பிடிக்கக் கடலுக்குப் போனான். வலையைக் கடலில் விரித்துவிட்டு ஏதாவது மீன் சிக்காதா என்று ஏக்கத்துடன் காத்திருந்தான். பசி வலைஞனின் வயிற்றைக் கிள்ளியது. மீன் பிடித்துச்சென்று அதை விற்றுத்தான் சாப்பிட வேண்டும்.
ரொம்ப நேரம் கழிந்தபின் திடீரென்று வலை வேகமாக ஆடத்தொடங்கியது. கிழவன், 'இப்பவாச்சும் ஏதோ மீன் அகப்பட்டிருக்கிறதே' என்று எண்ணிக்கொண்டபடி வலையச் சிரமப்பட்டக் கரைக்கு இழுத்தான். வலையில் சிக்கியிருந்த மீனைப் பார்த்தபோது அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! வலையில் சிக்கியிருந்தது சாதாரண மீன் அல்ல; அது ஒரு தங்க மீன்! அதன் செதில்கள் சூரிய ஒளி பட்டு தகதகவென்று மின்னின. வலைஞனுக்குக் கண் கூசியது. அப்படி ஒரு மீனை இதுவரை அவன் பார்த்ததேயில்லை.
அப்பொழுது அவனது ஆச்சரியத்தை அதிகரிக்கும் படி அந்தப் பொன் மீன் பேச ஆரம்பித்தது. அது கூறியது: 'வலைஞனே, வலைஞனே, தயவு செய்து என்னை விட்டுவிடு. நான் மீன்களின் அரசி. நான் இல்லாவிட்டால் கடல் ராஜ்ஜியத்தில் எல்லா மீன்களும் கஷ்டப்படும். நீ மட்டும் என்னைப் போகவிட்டால், நீ கேட்டதைத் தருவேன்' என்று தத்தளித்த படிக் கெஞ்சியது.
வலைஞனுக்குப் பாவமாக இருந்தது. பொன்மீனை விடுவித்து, கடலில் விட்டான். 'ரொம்ப நன்றி. இதற்குப் பதிலாக உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்' என்று கூறியது. வலைஞனுக்கு எதுவும் கேட்கவேண்டும் போலத்தோன்றவில்லை. அப்படியே மீனிடம் சொன்னான். 'அப்படியானால் சரி. ஏதாவது தேவைப்படும்போது தயங்காமல் என்னிடம் கேட்களாம். கரையில் நின்றுகொண்டு மீனரசி என்று நீ அழைத்தால் போதும். உடனே வருவேன். என்னை விடுவித்ததற்கு மீண்டும் வந்தனம்' என்று சொல்லிவிட்டுக் கடலினுள் மறைந்தது.
அதற்குள் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. இனி மீன் எதுவும் கிடைக்காது. வலையைத் தோளில் சுமந்தபடி வீட்டுக்குத் திரும்பினான் வலைஞன். அவனுக்காகக் காத்திருந்த அவன் மனைவி, வலைஞன் வெறும் கையுடன் வந்ததைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள். 'ஏன், ஒரு மீன் கூடக் கிடைக்கலையா' என்று சிடுசிடுத்தாள்.

நடந்த அனைத்தையும் அவளிடம் விவரித்தான் வலைஞன். அதைக்கேட்ட கிழவிக்குக் கோபம் பொங்கியது. 'உன்னைப் போல ஒரு முட்டாள் உலகத்தில் இருப்பார்களா? அந்தப் பொன்மீனிடம் ஒன்றும் கேட்காமல் கையை வீசிக்கொண்டு வந்திருக்கிறாயே! போ, இப்போதே திரும்பப் போய், நம் உடைந்த தொட்டிக்குப் பதிலாக நல்ல தொட்டி வேண்டும் என்று கேள்.' என்று விரட்டினாள்.

கிழவனுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. இருந்தாலும் கிழவியின் பேச்சைத் தட்டமுடியாமல் மீண்டும் கடலுக்குச்சென்றான். அமைதியாக இருந்த கடலின் கரையில் நின்றபடி, 'மீனரசி, மீனரசி' என்று தயக்கத்துடன் கூப்பிட்டான்.அவன் கூப்பிட்டு முடித்ததுதான் தாமதம்; பொன்மீன் சடுதியில் அவன் முன் தோன்றியது. 'என்ன வேண்டும், சொல்லுங்கள் வலைஞரே' என்று அன்பாகக் கேட்டது.

வலைஞன் தன் மனைவி கூறியதைச் சொன்னான்: 'எங்கள் வீட்டு மரத்தொட்டி உடைந்துபோய் உள்ளது. அதற்குப்பதில் ஒரு நல்ல தொட்டி இருந்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும்'
'அப்படியே ஆகட்டும்' என்று கூறி, பொன்மீன் மீண்டும் கடலினுள் மறைந்தது. வலைஞன் வீட்டுக்கு வந்தான். அங்கே அவனுக்குப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவர்களது உடைந்த தொட்டி இருக்குமிடத்தில் ஒரு புத்தம் புதுத் தொட்டி காணப்பட்டது!
கொஞ்ச காலம் சென்றது. வலைஞனின் மனைவிக்கு, தான் பெரியதாக ஏதையாவது கேட்காமல், போயும் போயும் ஒரு மரத்தொட்டியைக் கேட்டோமே என்று வருத்தம் ஏற்படலாயிற்று. மீண்டும் பொன்மீனிடம் சென்று, தங்களுக்கு நல்ல உடைகள், புதிய பாத்திரபண்டங்கள், இன்னும் பல சாமான்கள் கேட்கும்படி வலைஞனை நச்சரிக்கத்தொடங்கினாள். வலைஞன் முடியவே முடியாது என்று மறுத்தான். கிழவி விடவில்லை. 'நீ மீனுக்கு உயிர்ப்பிச்சை அளித்துள்ளாய். அதற்கு இந்தத் தொட்டி எப்படி ஈடாகும்? போ இப்போதே!' என்று விரட்டினாள்.


பாவம், அந்தக் கிழவனுக்கு வேறு வழி இல்லை.
இம்முறை அவன் கடலுக்குச்சென்ற போது அது சற்றே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. கரையில் நின்று கொண்டு 'மீனரசி, மீனரசி' என்று அழைத்தான். உடனே வந்த பொன்மீன், வலைஞனுக்கு என்ன வேண்டும் என்று அன்போடு கேட்டது. தயக்கத்தோடு தன் மனைவியின் விருப்பத்தைச் சொன்னான். 'இவ்வளவு தானே. அப்படியே ஆகட்டும்' என்று கூறிய மீனரசி கடலுக்குள் மறைந்தது.

அடுத்த விநாடி, தான் புத்தம் புது ஆடைகள் அணிந்திருப்பதைக் கண்டான் வலைஞன். அவன் வீடு வந்தபோது வீட்டில் எல்லாமே மாறியிருந்தன. புதுத் துணிமனிகளும் தட்டுமுட்டுச் சாமான்களும் வீடெங்கும் நிறைந்திருந்தன. அவன் மனைவிக்கு மிக்க மகிழ்ச்சி. 'இப்பொழுது திருப்தியா உனக்கு?' என்று அவளைக் கேட்டான்.

ஊஹும்...அவளது திருப்தி விரைவில் மறைந்துவிட்டது. 'எல்லாம் இருந்து என்ன பயன்? வீடு அதே பழைய குடிசைதானே. நமக்கு மட்டும் வசிக்க ஒரு மாளிகை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைத்தாள். கிழவனை மீண்டும் மீனரசியிடம் செல்லும்படி வற்புறுத்தினாள். கடைசியில் அவளது தொல்லை தாங்கமுடியாமல், வலைஞன் திரும்பவும் பொன்மீனைத் தேடிச் சென்றான்.

கடல் பெரும் ஆர்பாட்டத்துடன் இருந்தது. வலைஞனுக்கு அது அச்சத்தைத் தந்தது. பயந்தவாறே 'மீனரசி, மீனரசி' என்று அவன் அழைக்க, அடுத்த நொடி பொன்மீன் அவன் முன்னே தோன்றியது. 'எங்களுக்கு வசிப்பதற்கு ஒரு மாளிகை வேண்டும் என்று கிழவி கேட்டுவரச் சொன்னாள்' , பயந்தவாறே கூறினான் வலைஞன். 'அப்படியே' என்றபடி கடலுக்குள் பாய்ந்து சென்றது மீன்.

வீட்டுக்கு வந்த வலைஞனால் தன் வீட்டை அடையாளமே காணமுடியவில்லை. அப்படி ஒரு புத்தம்புதிய மாளிகை அங்கே வீற்றிருந்தது. இப்பொழுதாவது அவளுக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும்' என்று நினைத்துக் கொண்டான் வலைஞன்.
ஆனால் எங்கே? கிழவியின் பேராசை மேலும் அதிகரித்தது. 'மிகப் பெரிய அரண்மனை. அதில் நான் அரசியாக வீற்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி, மீனரசி இங்கு வந்து என்னிடம் பணிப்பெண்ணாக வேலை செய்ய வேண்டும். போய் இதைக்கேட்டுவா. சீக்கிரம் ஆகட்டும்' என்று வலைஞனை ஏவினாள். வலைஞன் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தான். அவள் வலைஞனை ஏசினாள். விரட்டு விரட்டென்று விரட்டினாள். கடைசியில் அவளுக்கே வெற்றி.


மிகுந்த துயரத்துடன் வலைஞன் இம்முறையும் மீனரசியிடம் செல்ல வேண்டியதாயிற்று.
இப்பொழுது கடல் பேரோசையுடன் கொந்தளித்துக்கொண்டிருந்தது. வானம் கருத்து பெரும் சூறைக்காற்று வீசிற்று. வலைஞன் அஞ்சி நடுங்கினான். 'நடப்பது நடக்கட்டும்' என்று எண்ணிக்கொண்டு 'மீனரசி, மீனரசி' என்று நடுங்கிய குரலில் கூப்பிட்டான். வழக்கம் போலப் பொன்மீனும் வந்தது. வலைஞன் அதனிடம், 'கிழவியின் ஆசை அளவு கடந்து போய்விட்டது...அவள் பெரிய அரண்மனையில் அரசியாக வீற்றிருக்க வேண்டுமாம். அது மட்டுமின்றி நீ அவளுக்கு பணிப்பெண்ணாக இருக்க வேண்டுமாம்.' என்றான். அதனைக்கேட்ட மீனரசிக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. வாலைச் சுழற்றித் தண்ணீரில் ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டு, பதிலே சொல்லாமல் போய்விட்டது.

உடனே வலைஞன் தான் பழையபடிக் கிழிந்த உடைகள் அணிந்திருக்கக் கண்டான். மிகுந்த துயரத்துடன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் வீட்டை அடைந்தபோது, அது அவர்களது பழைய குடிசை வீடாக மாறி இருந்தது. வாசலில் கிழவி தன் நைந்து போன ஆடைகளுடன் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் பழைய உடைந்த மரத்தொட்டி இருந்தது.

[ FOREIGN LANGUAGES PUBLISHING HOUSE, மாஸ்கோ வெளிட்ட நூல் இங்கு நினைவிலிருந்து எழுதப்பட்டுள்ளது. கதை: அலெக்ஸாண்டர் புஷ்கின்; ஆங்கிலத்தில மொழிபெயர்ப்பு: லூயி ஜெலிக்காஃப்; தமிழ் மொழிபெயர்ப்பு: பூ. சோமசுந்தரம்]

பின் குறிப்பு: மூல நூலின் சுவையில் சித்திரங்களுக்கும், சோமசுந்தரத்தின் மொழிபெயர்ப்புக்கும் முக்கிய இடம் உண்டு. வலைஞன் என்ற வார்த்தை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 'மீனவன்' என்றுதான் மற்றவர்கள் மொழிபெயர்த்திருப்பார்கள். மீனரசி, கிழவன், கிழவி என்ற சொற்களும் அவர் உபயோகித்தவை. சடுதி என்ற சொல்லை அவர் அடிக்கடி கையாள்வது உண்டு. மீனரசி, வலைஞனை என்ன சொல்லி அழைத்தது என்பது மறந்துவிட்டது.

இந்நூல் இணையத்தில் http://home.freeuk.com/russica4/books/goldfish/gfish.html என்ற தளத்தில் ஆங்கிலத்தில் கிடைப்பது தெரியவந்துள்ளது. அதை விரைவில் மொழிபெயர்த்து படங்களுடன் வெளியிட உள்ளேன்.





3 comments:

Anonymous said...

if u like rajnikants 'baba', then u must read this 'ezhu nira poo' . saravannan, u have done a wonderful job! im so excited! i have tried to recollect this story ezhu nira poo many times, in particular, when rajnikants movie 'Baba' released.its the same story, right?

aaha, how nice ! took me to my child hood days.arumaiyana pattu! even though my children have lots of good books, i always feel ,that something is missing in their collection.yes, the soviet union stories! but its past, now my children can taste ezhu nira poo , valaizhanum meenum , etc .especially when we read in tamil - aha, no words to say.
saravanan, me and my children are waiting for more stories, do u remember 'meesha samaitha pongal' and 'kulandhaigale kulipeer, suththamaga iruppeer' ?
sorry dont have tamil font, but it doesnt stop my excitement to share my happiness.

சரவணன் said...

நன்றி அனானி. மீக்ஷா சமத்த பொங்கல் ஏற்கனவே draft ஆக இருக்கிறது. இன்னும் சில மணிகளில் வலை ஏறிவிடும்.

குழந்தைகளே குளிப்பீர்...கதையை யார் மறக்க முடியும்:-)

Anonymous said...

oh valaignanum meenum story hav made me to go into my wonderful childhood days... in those days i want my mom to tel dis story while eating... i m very happy