Friday 14 August 2009

குறும்பன்: எழுபத்தொரு சொர்க்கங்கள்

நான் நல்ல ஆரோக்கியசாலி, என் கைகள் முற்றிலும் என் வசத்தில் இருக்கின்றன. கால்கள் நான் சொன்னபடிக் கேட்கின்றன. கண்கள் என் சித்தத்துக்குக் கீழ்ப்படிகின்றன. விருப்பம் இல்லாவிட்டால் அவலட்சணங்களை நான் பார்ப்பதில்லை. என் தாடைகளும் பற்களும் அரைவை இயந்திம் போன்றவை. எதையும் மென்று துவையலாக்கிவிடும. ஆனாலும் என் உடம்பில் எனக்கு வசப்படாத ஓர் அங்கம் இருக்கிறது. அதைப் பணிய வைக்க என்னால் எவ்வகையிலும் முடியவில்லை. என் அதிகாரம் அதன் மேல் செல்லுவதில்லை. சில வேளைகளில் அது என் ஆட்சியிடத்துக்குள் கொள்ளைக்காரர் கூட்டம் போல அட்டூழியம் செய்கிறது. நான் இயன்ற வரையில் அதைச் சமாதானப்படுத்துகிறேன். நல்ல எண்ணங்களின் பட்டாளங்களை அனுப்புகிறேன். ஆனால் அவை இலக்கை அடைவதற்கு முன்பே சிதறி ஓடிவிடுகின்றன. பாழாய்ப் போன அந்தக் கலகக்கார உறுப்போ, திறை செலுத்துமபடித் துடுக்காகக் கோருகிறது. என்னிடம் இருக்கிறதோ இல்லையே, அதற்குக் கொட்டி அளக்க வேண்டியிருக்கிறது!

இந்தக் கலகக்கார உறுப்பு தான் வயிறு.

உங்களுக்கு இது தெரியாதா? அப்படியானால் நினைவில் இருத்திக் கொண்டு எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால் வயிறு விஷயத்தில் வேடிக்கை கெடுதல். அது முரண்டத் தொடங்கி, கோருவதைப் பெறாவிட்டால், உங்கள் மேலதிகாரத்தைக் கவிழ்த்துவிடும். அப்புறம் அரசு முழுவதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும். ஒழுங்கு, நிம்மதி, மரியாதைவிதிகள் எல்லாம் அத்துடன் தொலைந்தன என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்புறம் அதிகாரம் செலுத்துவது நீங்கள் அல்ல, அதுதான். எல்லா அங்கங்களும் அதன் உத்தரவுகளுக்கே கீழ்ப்படியும், உங்கள் உத்தரவுகளுக்கு அல்ல. இஸ்லாம் மத விதிகளால் அனுமதிக்கப்படாத பொருள்களைக் கண்கள் நோக்கத் தொடங்கும். நேர்மையற்ற வழியில் பெற்ற வஸ்துக்களை எடுக்கக் கைகள் பேராசையுடன் நீளும். கால்கள் முற்றிலும் எதிர்பாரா இடங்களுக்கு இட்டுச் செல்லும். தலை, கயவர்களுக்கு முன் வணங்கும்...

நான் வசந்தகால மேகம் போலக் கண்ணீர் மாரி பொழிந்தவாறு, எதோ ஒரு பாட்டை, அர்த்தமற்ற ஏதோ கஜலைப் பாடுகிறேன். இந்தப் பாட்டை எவன்தான் புனைந்தானோ, எவன்தான் முதல் முறை பாடினானோ, ஆண்டவனே அறிவான்...

“பொங்குது அந்தோ, இக் கரிய விழிகளில்
புகலற்ற சோக நீர் ஊற்று..
மங்கலாய்க் காணும் உலகை அவை, கண்ணீர்
மல்கும் இமைகளின் ஊடாய்,

ஆயுள் முழுதும் அலைந்து களைத்திட்டேன்
ஆனந்தத்தை எதிர்பார்த்து,
பாய் தரை, ஒடு தலையணையாகப்
படுத்திருப்பேன் காலைவரையில்

ஏங்கியது போதும் என் உளமே, உன்றன்
இருள் நீங்கும், பாடு விடியும்.
ஈங்கொளி சேர் மணி மண்ணில் புதைந்தே
என்றும் மறைந்திருக்காது.

ஆனால் இப்போதென்றன் தலைமேல் கூழலுது
அழுத்திடும் அரைவைத்திரிகை.
நானும் உணவுக்காய் அரைவைத் திரிகைபோல்
நாளும் சழன்றிட வேண்டும். ”


“போதும், இந்தத் துயர எண்ணங்களைக் கட்டி வை. ஆற்றுக்குப் போய்க்குளி. கோலத்தை ஓரளவு சீர்படுத்திக்கொள்” என்று சொல்லிக் கொண்டேன். இந்த நட்பார்ந்த யோசனையை நிறைவேற்றினேன். ஆற்றுக்குப் போய், தனியான இடத்தைத் தேடிக் கண்டு உடைகளைக் களைந்தேன்... சராய், சட்டை, இடுப்புக் குட்டை, எல்லாவற்றையும் காரப் பூண்டால் சத்தப்படுத்தி நன்றாகத் துவைக்க வேண்டும்—ஒரு தரம் துவைத்து அலசினால் போதாது! பின்னர் மரக்கிளைகளில் காயப்போட வேண்டும். அப்புறம் நீரில் இறங்கி நீந்தி எல்லா அழுக்கையும் தேய்த்துக் கழுவிப்போக்க வேண்டும். அதோடு கூடவே எல்லாக் கெட்ட நினைவுகளையும், சென்ற சில நாட்களில் எனக்கு நேர்ந்த எல்லாத் துன்பங்களையும் (அவற்றின் எண்ணிக்கை நாட்களின் தொகையைக் காட்டிலும் எவ்வளவோ அதிகம். பெருக்கிய கண்ணீரைக் காட்டிலும் அதிகம். ஒரு துளி கண்ணீருக்கு ஒரு துன்பம் வீதம் என்று சொல்லலாம்) ஆற்றோடு போக்கிவிட வேண்டும்.

இவை எல்லாம் செய்து முடிப்பதற்குப் புலவு தயாரிப்பதற்கு ஆகும் அவ்வளவு நேரம் பிடித்து. அதற்குள் பசி கடுமையாக மூண்டது. துவைத்துக் காயப் போட்ட உடைகளை அணிந்துகொண்டு கையால் தேய்த்துச் சுருக்கங்களைப் பிரித்து, ஓரளவு பாங்காகத் தோற்றம் அளிக்க முயன்றேன். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும் ஒரு சிறு நன்மை அடைந்திருப்பதை நினைவு படுத்திக்கொண்டேன். வேற்றார் சமையல் அறையிலிருந்த காதலன் அவ்வளவு விருப்பத்துடன் எனக்குத் தந்த பணம் நினைவுக்கு வந்தது. இல்லை, அது கெட்டுப்போகவில்லை, நல்ல வேளையாக. சில வெள்ளி நாணயங்கள், சில செப்புக்காசுகள், எல்லாமாகக் கொஞ்சம் குறைய இரண்டு தன்காக்கள் இருந்தன. அப்புறம் என்ன, தொடங்குவதற்கு இது சொற்ப முதல் அல்லவே. எத்தனையோ பெயர் இதைவிடக் குறைவான முதலை வைத்துக்கொண்டு தொடங்கியிருக்கிறார்களே. அவர்கள் அத்துடனேயே இருந்துவிட்டார்கள் என்பது உண்மைதான், அது அவர்கள் பாடு. சந்தைக்குப்போய் ஆசைதீரச் சாப்பிடலாம், ஏதேனும் வாங்குவதென்றால் பிசுகு பேரம் பண்ணலாம். குறைந்த விலைக்கு வாங்கலாம். ஏய்க்காவிட்டால் பிழைக்க முடியாது.

அன்று சந்தை நாள் அல்ல என்றாலும் சந்தைத் திடலில் விற்பதும் வாங்குவதும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஆடுகள் கத்தின, குதிரைகள் கனைத்தன. ஒட்டங்கள் முழங்கின. வியாபாரிகள் திட்டினார்கள், தரகர்களின் கைகள் தோன்றித் தோன்றி மறைந்தன. “என்ன, கையடித்துப பேரத்தை முடிப்போமா!” என்ற தங்கள் பல்லவியை அவர்கள் விடாது பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த இரைச்சலுக்கும் நெரிசலுக்கும் இடையே, மழை நீரில் அடித்துச் செல்லப்படும எறும்புபோலத் தன் வசமின்றித் திரிந்து அலைந்தேன் நான். வலப்புறம், இடப்புறம், பின்புறம், எங்கிருந்தாவது யாரேனும் உதைப்பார்களோ என்று சமீப அனுபவத்தின் காரணமாக ஓயாமல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று சந்தையில் விந்தையான பரபரப்பு ஏற்பட்டது. ஆட்கள் கும்பல் கும்பலாக ஒரு புறம் விரைந்தார்கள். நகரத்திலிருந்து சந்தைக்கு வந்துகொண்டிருந்து ஓர் ஊர்வலம். வெவ்வேறு நிறத் துணித் துண்டுகளை இணைத்துத் தைத்த “முகம்மதீ” சட்டைகள் அணிந்த ஏழு பக்கிரிகள் ஒருவர் பின் ஒருவராகப் பவனி வந்தார்கள். “அகமதீ” எனப்படும் தொப்பிகள் அவர்கள் தலைகளை மூடியிருந்தன. கரிய அல்லது நரைத்த சடைக்கற்றைகள் அவர்களுடைய இடுப்புகள் வரை தொங்கின. தோட்களின்மேல் அவர்கள் “முஸ்தஃபா” சால்வைகள் போர்த்திருந்தார்கள். கொளுத்தும் வெயிலில் ஆவேசம் கொண்டவர்கள் போலப் பாடிக் கொண்டே வந்தார்கள். வெறி கொண்ட ஒட்டகங்கள் போல அவர்கள் உதடுகள் நுரை கக்கின. அவர்கள் பாடினார்கள்.

“ஓ-ஓ-ஓ!
ஆட்கள் இரையும் சந்தையிலே
கேட்குது அகதிகளின் அழுகை,
அல்லாவே, ஓ அல்லாவே,
எல்லாமே மண் அல்லாவே,
பெற்றோர் இல்லா மதலைகளுக்கு
உற்றிடு துயரைக் கேட்டறிவாய்,
அல்லாவே, ஓ அல்லாவே,
எல்லாமே மண் அல்லாவே.
ஓ-ஓ-ஓ!"


மண்வெட்டி அலகு போன்ற அகன்ற தாடியும் நேர்த்தியான தோற்றப்பொலிவும் உள்ள ஒரு பக்கிரி முன்னே வந்தார். அவர் தாம் தலைமைப் பக்கிரி அவர் தோளில் தொங்கியது செப்புப் பாத்திரம். தூரப் பார்வைக்கு அது பளபளக்கும் பிரமாண்டமான கருவண்டு போல் காணப்பட்டது. வலிய மரத்தடி ஒன்று அவர் கையில் இலங்கியது. அதன் மேல் பல நிறத் துணித் துண்டுகள் தொங்கின. கொஞ்சம் நெருங்கி விசாரித்ததில் வியப்பூட்டும் ஒரு சேதி தெரியவந்தது. இந்தத் தடி நபிகள் நாயகம் முகம்மது அவர்களுடைய கைத்தடிக்கு ஒன்றுவிட்ட சகோதரி உறவாம்! சுற்றிலும் இருந்த மதபக்தர்களுக்கு இந்தச் சேதி வெகு காலமாகவே தெரியும் போலிக்கிறது. கண்களில் நீர் மல்க அவர்கள் அந்தத் தடி அருகே போய் அதை முத்தமிட்டார்கள். அதில் புதிய வண்ணத் துணிகளை நம்பிக்கையுடன் கடடினார்கள். தடியை ஏந்தி வந்த தலைமைப் பக்கிரிக்குக் காணிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவர் தோளில் தொங்கிய கருஞ் செப்புப் பாத்திரம் இந்தக் காணிக்கைகளை ஏற்பதற்காகவே இருந்தது. ஜனங்கள் அதில் பணம் போட்டார்கள். ரொட்டிகள் போன்ற பிற பொருள்களைப் பின்னால் வந்த பக்கிரிகள் வாங்கிக்கொண்டார்கள். அப்பப்பா, காணிக்கை இருக்கிறதே, இது நுட்பமான விஷயம், இதிலே அசதி மறதியாக இருந்தோமோ, வந்தது ஆபத்து. தலைமைப் பக்கிரி புனித பஹாவுத்தீனின் பிரதிநிதியாக விளங்கும் போது அவருக்க ஏழு ரொட்டிகள் காணிக்கை வழங்க வேண்டும். அவரே புனித ஹாவ்ஸுல்ஹஸனின் பிரதிநிதியாக வந்தால் ஏழு அல்ல. பதினோரு ரொட்டிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஹாவ்ஸுல்ஹஸனைத் தவறாக பஹாவுத்தீன் என்று நினைத்துவிட்டோமோ – ஆண்டவனே காப்பாற்று—அந்தப் புனிதர் கோபங் கொண்டுவிடுவார். செலவெல்லாம் வீணாகிவிடும். விண்ணுலகில் விலைகள் எல்லாம் சந்தையைவிடக் கறாரானவை.

புனிதர்களின் உதவியோ மன்னிப்போ ஒருவனுக்குத் தேவைப்பட்டால் அவன் அதற்கு ஏற்றபடித் தாராளமாக விலை செலுத்த வேண்டும். கோழி, வெள்ளாடு, செம்மறிக் கடா அல்லது ஒட்டகங்கூடக் காணிக்கையாகச் செலுத்தப்படும். இதை எதிர்பார்த்தே பக்கிரிகளின் பின்னே வருவார்கள் யாலாவ்கஷ் எனப்படும் பணியாட்கள். அவர்கள் காணிக்கைகளைச் சேகரித்து, பிரம்புக்கூடு அமைந்த வண்டியில் வைப்பார்கள். அல்லது பின்னால் கட்டுவார்கள். சில வேளைகளில் பல் வகைப் பிராணிகளின் மந்தையே பக்கிரிகளின் பின்னே சேர்ந்துவிடும்—இயங்கும் மிருகக் காட்சி சாலை பேல...

இன்று சந்தையில் இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது காரணம் இல்லாமல் அல்ல. இந்தப் பக்கிரிகள், இறைச்சி உண்ணாத மிகமிகப் புனிதரான ஒரு மௌல்லியின் மடத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மடத்துக்கு ஜிப்ரீல் என்னும் தேவதூதர் அல்லாவிடமிருந்து கட்டளைகளை எடுத்துக்கொண்டு இரவில் வருவது உண்டாம். ஆகவே மௌல்வி ஆண்டவனுக்கு இணையாக வேலை செய்தார். அவருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் பாதி ஆண்டவனுக்குச் சேர்ந்தன! இவ்வளவ வசதியாக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் எப்படி இருப்பது? கொடுக்கப்படும காணிக்கை பிற்பாடு பத்து மடங்காக, ஒருவேளை இன்னும் அதிகமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு போது சிறு காணிக்கையை அல்லாவுக்குச் செலுத்தாமல் எப்படி இருப்பது? முதல்தரமான பேரம் ஆயிற்றே இது! எனவே தருணத்தை நழுவ விடாதிருக்க எல்லோரும் விரைந்தார்கள். பலத்தை எல்லாம் கொண்டு மற்றவர்களை இடித்துப் புகுந்து கொண்டு முன்னேறினர்கள். சவுக்கை வீசி ஆட்களை விலக்கி வழி செய்து கொண்டு பக்கிரிகளுக்கு முன்னே சென்ற போலீஸ்காரன் கொழுத்தவன். தன் குதிரையை விடப் பருமனாய் இருந்தான். நாய் பற்களால் கல்விக் கொண்டிருக்கும் கயிறு போன்ற துருத்திய மீசை வைத்திருந்தான். இடையில் தொங்கியது பிரமாண்டமான உடைவாள். அது அனேகமாகத் தரையைத் தொட்டுக்கொண்டு தொங்கி ஆடியது. அது குதிரையின் விலாவில் கட்டப்பட்டிருக்கிறதா அல்லது போலீஸ்காரனின் இடையிலா என்று சட்டென விளங்கக்கூட இல்லை.

இவை எல்லாவற்றையும், இவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தைக் கண்ட பின்பும் பேரத்தில் பங்கு கொள்ள மிகமிக அற்பமான பரிசுப் பொருள் கூட, புனிதத் தடியில் தொங்கவிடுவதற்குப் பாங்கான துணித் துண்டு கூட இல்லாமையால் எனக்கு உண்டான மன வருத்தத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!... ஏமாற்றக் கண்ணீர் என் ஆன்மாவில் திடீரென ஒளி வீசியது போல் இருந்தது. வெப்ப மூட்டப் பெற்ற மெழுகு போல் துவண்ட என் மேனி முழுவதிலும் நடுக்க அலை பரவிற்று. நான் கூட்டத்தில் பாய்ந்து ஆவேசத்துடன் இடித்துப் புகுந்து தலைமைப் பக்கிரியை நோக்கிச் சென்றேன். பெரியவர்களின் ஊடாக நழுவி எவருடைய கைக்கு அடியிலோ நுழைந்து எப்படியோ ஒரு விதமாகப் புனிதத் தடியை நெருங்கிவிட்டேன். அதைப் பிடித்திருந்த கையைப் பற்றிக் கொண்டு முழந்தாள் படியிட்டு உரக்க அழத் தொடங்கினேன். தலைமைப் பக்கிரி நின்று, என்னைத் தூக்கி நிறுத்தி, தலையை வருடினார்.

‘’என்ன வேண்டும், என் குழந்தாய்? சொல்லு, நான் அல்லாவிடம் கேட்கிறேன்’’ என்று கனிவுடன் மொழிந்தார்.

அப்போது நான் நாக்குழற என் தாழ்மையான விண்ணப்பத்தைச் செய்து கொண்டேன். இந்தத் தெய்விகச் சங்கிலியில் என்னையும் ஒரு வளையமாக்கும் படி—புனிதத் துறவிகளின் சீடனக என்னை ஏற்றுக்கொள்ளும் படி—வேண்டிக் கொண்டேன். அவ்வளவு தான். சுற்றியிருந்த கூட்டத்தில் கிளம்பிய ஆரவாரத்தையும் கூப்பாடுகளையும் அழுகையையும் வருணித்து மாளாது. தலைமைப் பக்கிரி நின்றதுமே சுற்றிலும் அமைதி குடி கொண்டது. எனவே என் வேண்டுகோள் பலருக்குக் கேட்டது. அவர்கள்தாம் இப்படி ஆரவாரித்தார்கள். தலைமைப் பக்கிரி இரண்டு கைகளையும் உயர்த்தி என்னை ஆசீர்வதித்த போது உழவர்களும் மாதர்களும் எப்படிப் புலம்புனர்கள்! அதை எழுத்தில் விவரிக்க முடியாது. அப்புறம் நானே! அந்த நிமிஷம் முதல் நான் சாதாரண மானிடன் அல்ல, பழக்கமான உலகத் துன்பங்களை உழலும் அற்ப மனிதன் அல்ல, அல்லாவின் உயர்பெரும் நீதிமன்றத்தில் ஒரு பதவியில் அமர்த்தப்பட்டவன்! பொறுப்பு கழிக்க இந்தப் பதவியில் நான் இன்னும் வேலை தொடங்கவில்லைதான். ஆனாலும் இந்த வேலை என் மனதுக்குப் பிடித்தது என்பதை அதற்குள்ளாகவே உணர்ந்தேன். சாப்பிடவும் பருகவும் இனி வேண்டிய அளவு கிடைக்கும் என்பதைக் கண்டேன். நான் செய்ய வேண்டியது எல்லாம் ‘’அல்லாவே, ஒ அல்லாவே’’ பாட்டை நன்றக மனப்பாடம் செய்துகொள்வதும் வாயில் நுரை ததும்பப் பாடப் பழகிக்கொள்வதும் தான். பாட்டு உணவூட்டும் என்று ஜனங்கள் சொல்வது சரிதான். களி மிகுதியால் நான் அறிவு இழப்பதை உணர்ந்தேன். பக்கிரிகளுக்கு ஒரு பத்து அடி முன்னால் வெறுந்தலையுடன் நடந்தவாறு, என்அற்பச் சக்கிக்கு இயன்ற அளவு உரக்க மூக்கால் பாடினேன்;

‘’ஒ-ஒ-ஒ!
குளம்புகள் ஒலிக்க வரும் குதிரை,
அல்லாவே, ஒ அல்லாவே.
கிளம்புவீர் மக்காள், காண்பீரே,
அல்லாவே, ஒ அல்லாவே.
யார் என் காதலி எனக் கேட்டால்,
அல்லாவே, ஒ அல்லாவே.
பேரழகி ஜெபிஹோன் என்பேன்,
அல்லாவே, ஒ அல்லாவே,
எல்லாமே மண், அல்லாவே.’’


உலக வாழ்க்கைய—துயரும் களியும் நிறைந்த, பலவிதச் சூழ்ச்சிகளும் துன்பங்களும் விபத்துக்களும் உள்ள வாழ்க்கையை—எல்லார் முன்னிலையிலும் துறந்துவிட்ட, கடவுள் பித்துக்கொண்ட சிறுவனான என்னைக் கண்டு சந்தை மக்களின் உள்ளங்களில் அல்லாவின் மீதும் அவரது தொண்டர்கள் மீதும் பத்தி பரவசம் மீண்டும் அலையடித்துப் பொங்கியது. காணிக்கைகள் ஆலங்கட்டி மழைபோலப் பொழியலாயின...

சந்தைக்கு வைக்கோல் ஏற்றிவந்து விற்றுவிட்டுத் திரும்பிய ஒட்டகக்காரர்களின் ஒட்டகங்கள்மேல் இரண்டு இரண்டு பேராக உட்கார்ந்துகொண்டு மாலையில் இஷான்பஜார் என்னும் இடத்துக்கு, மகாபுனிதரான மௌல்வியின் மடத்துக்குப் புறப்பட்டோம். அதை நெருங்க நெருங்கச் சூழ்நிலையின் புனிதத் தன்மை அதிகரித்தது. தேவதூதர்களின் கேளாத கானம் காற்றில் நிறைந்தது போன்று உணர்ந்தேன். இது இயல்பே. ஏனென்றல் தாஷ்கந்த், சீம்கந்த், ஸைராம் பிரதேசங்களுக்கு இந்த மடம் அனேகமாக மெக்காவிலுள்ள காபா என்னும் திருக்கோயில் போன்றது. இந்த நகரங்கள் எல்லாம் விண்ணிலிருந்து வரும் கிரணங்களால் ஒளியுறுத்தப்படுகின்றன என்றல் இஷான்பஜார் தனது ஒளிர்வால் விண்ணகத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மடத்தை அடைந்ததும் நாங்கள் ஒட்டகங்களிலிருந்து இறங்கி, சாமான்களை இறக்கினேம். தலைமைப் பக்கிரி ஒட்டகக்காரர்களுக்குக் கூலி கொடுப்பதற்குப் பதிலாக அவர்களை ஆசீர்வதித்துப் பிரார்த்தனை படித்தார். இம்மாதிரி ஆசி ஒவ்வொன்றுக்கும் சில இடங்களில் ஒட்டகம் காணிக்கை தருவார்களாம். ஆகவே ஒட்டகக்காரர்கள் அடைந்த லாபத்தைக் கணக்கிடுவதே கஷ்டமாய் இருந்தது.

மௌல்வியின் வீடு தொழுகைக் கூடத்தை அடுத்திருந்தது. இந்தக் கூடத்தில்தான் அவர் ஸுஃபிகளுடன் தொழுகை படிப்பது வழக்கம். பக்கிரிகளின் மடமும் அதை ஒட்டியே இருந்தது. முதலில் நாங்கள் தொழுகைக்கூடம் போனேம். எங்கள் வருகையைப் புனிதர் மௌல்வி தெரிந்துகொள்ளும் பொருட்டுத் தலைமைப் பக்கிரி கூடத்தின் வாயிலில் சிறு ஜெபம் படித்தார். பிறகு பக்கிரிகள் தாழ்வாரத்தில் வட்டமாக உட்கார்ந்தார்கள். அவர்களுடைய பணிவுள்ள சீடனான நானோ, காலணிகள் கழற்றிவைக்கப்படும் முன் நடையில், கைகளை மார்பில் தாழ்மையுடன் சேர்த்துக்கொண்டு தலை வணங்கி, தொண்டுக்குத் தயாராக நின்றேன். இறற்கிடையே பாட்டு தொடர்ந்தது. நாங்கள் கொண்டுவந்த காணிக்கைகளை ஸுஃபிகள் சிற்றறையில் வைத்தார்கள். இந்த அறைக்கு இரு வாயில்கள் இருந்தன—ஒன்று தொழுகைக் கூடத்தின் புறத்திலும் மற்றது மௌல்வியின் அந்தப்புரத்தின் புறத்திலும்.

முடிவில் பாட்டு நடுவே நின்றுவிட்டது. தொழுகைக் கூடத்தின் உள்ளிருந்து ஒயிலாக அடியெடுத்து வைத்து வந்தார் மகாபுனிதரான மௌல்வி. ‘’நான் உன்மேல் அடி வைத்து நடக்கத்தான் செய்கிறேன், என்றலும் நீ எனக்கு என்றும் நன்றி பாராட்ட வேண்டும்’’ என்று தரையிடம் சொல்லுபவர் போன்ற பாவனையுடன் அதை நோக்கியவாறு நடந்தார் அவர். தாம் நபிகள் நாயகம் முகம்மது அவர்களின் ஒன்பதாவது மனைவியான ஆயஷா—குபாரோவின் வம்சத்தவர் என்று அவரே சொல்லிக் கொண்டார்—இந்த விஷயம் அவருக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்குத் தெரியும்? நீண்ட வெளிர் மஞ்சள் மேலங்கியும் தூய வெள்ளைத் தலைப்பாகையும் கனத்த ஆட்டுத் தோலால் அழகுறச் செய்த காலணிகளும் அணிந்திருந்தார் அவர். ஆயிரத்துக்குக் குறையாத மணிகள் கொண்ட ஜெபமாலை அவர் கைகளில் திகழ்ந்தது. கண்களுக்கு மை தீட்டப்பட்டிருந்தது. நரையோடிய நீண்ட தாடி இழைய இழைய வாரி விடப்பட்டிருந்தது—ஒவ்வொரு மயிரையும் தனி உறையில் புகுத்த முடியும் போல. மங்கிய வெள்ளி நிறமான அழகிய மீசையிலிருந்தும், அளவு மீறி உளுந்து இரையாக ஊட்டப்பட்ட சேவலினுடையவை போலச் சிவந்த கன்னங்களிலிருந்தும் உண்மையாகவே திவ்விய ஒளி பளிச்சிட்டது.

அனுபவமற்ற மற்றவர்கள் இதைக் கண்டார்களோ இல்லையோ அறியேன், ஆனால், அவருடைய இரு மருங்கிலும் ஆயிரத்து ஐநூறு தேவதூதர்கள் உடன் வந்த அருங்காட்சியை நான் கண்ணாரக் கண்டேன். நாங்கள் எல்லோரும் எழுந்து அவருக்கு வணக்கம் செலுத்தினோம். மகாபுனிதர், நற்செயல்கள் செய்ய வேண்டும் என்னும் இறைவர் கட்டளையை எல்லோருக்கும் நினைவுறுத்திவிட்டு, முன்கார், நாக்கிர் இருவரும் (இறந்தவர்களைக் கல்லறைகளில் பூர்வாங்கமாக விசாரிக்கும் தேவதூதர்கள் இவர்கள்) வந்தார்களா என்று கேட்டார். இதற்கு விடையாகத் தலைமைப் பக்கிரி தமது செப்புப் பாத்திரத்தில் சேர்ந்திருந்த காணிக்கைப் பணத்தை எல்லாம் மௌல்வியின் முன்றானையில் கவிழ்த்துக் கொட்டினார். செப்பு, வெள்ளி நாணயங்களும் காகிதப் பணமும் அதில் இருந்தன. நோட்டுக்களையும் ரூபிள்களையும் மகாபுனிதர் லேசான கையசைப்பால் மேலங்கிக் கைகளுக்குள் செலுத்திவிட்டு, ‘‘ஓ-ஓ, என் கைகள் செல்வ அழுக்கால் கறைபடாதிருக்குமாக! என் குழந்தைகளே; இது அழுக்கு. நாய்கள் தாம் இவற்றைத் தேடித் திரியும்!’’ என்று கூறி, செப்பு, வெள்ளி நாணயங்களைப் பக்கிரிகள் பக்கம் நகர்த்திவிட்டார்.

அப்புறம் அவர்கள் பார்வை என்மேல் நிலைத்தது. ‘‘இந்தக் குழந்தை யார்?’’ என்று மிகவும் கனிவுடன் வினவினார்.

தலைமைப் பக்கிரி என்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கி, என்னை வானளாவப் புகழ்ந்தார். அப்போது மட்டும் நாங்கள் சொர்க்க வாசலில் இருந்தால், நுழைவுச் சீட்டு இல்லாமலே நான் உள்ளே புக அனுமதிக்கப்பஙடிருப்பேன்—அவ்வளவு பிரமாதமாக என்னைப் பாராட்டினார் தலைமைப் பக்கிரி. முதல் தடவை பசுந்தேநீர் பருகும்போது அவர் என்னைப் பற்றிய புகழ்ச்சியைத் தொடர்ந்தார். இந்தப் பையன், நிலையான வாழ்வுக்காகப் புவி வாழ்க்கையைத் துறந்தவரும் போரனந்தத்தில் திளைப்பவருமான உண்மைப் பக்கிரி மஷ்ராப்தான் என்றார் அவர். என்னுடைய ஆனந்த பரவசத்தை அவர் வெகுவாக வருணித்தார். அது எல்லாப் புகழ்ச்சிக்கும் மேற்பட்டது என்றும் அதுபோன்ற ஆனந்தக் களிப்பு அனுபவமுள்ள துறவிகளுக்கும் கூட வாய்க்கக் கூடியது அல்ல என்றும் சொன்னார். இதைக் கேட்டதும் மகாபுனிதரான மௌல்வி பெருங் கருனை கூர்ந்து, சுட்டு விரலால் ஜாடை காட்டி என்னைத் தம் அருகே அழைத்தார். நான் மீண்டும் சிரம் தாழ்த்து வணங்கி அருகே போனேன். தம் ஆசிக் கரத்தால் அவர் என் நெற்றியை வருடினார்.

‘‘அப்படியா சேதி! நீ இவ்வளவு பாக்கியசாலியா! அல்லாவின் கவனத்துக்கே ஆளாகிட்டாய் நீ. வானத்தைப் பார், என் மகனே!’’ என்றார்.

அப்போது அவர் விரல்களின் ஊடாக எழுபத்ததொரு சொர்க்கங்களை நான் கண்டேன்...

சடங்கு முடிய வெகு நேரம் ஆயிற்று. தொழுகைக் கூடத்தின் மூலையில் துணித் துண்டுக் குவியல்களின் நடுவே தன்னந் தனியாகப் படுத்துக் கொண்டேன். நீண்ட நேரம் எனக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. நான் பெற்ற அளவு நன்மை என் வயிறு அடைந்தது என்று சொல்ல முடியாது. என்றாலும் அதன் நிலைமையும் பொறுக்கக் கூடியதாகவே இருந்தது. வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் அது போசதிருந்தது. சொர்க்க போகத்துக்கு நிகரான பல்வேறு விஷயங்கள் பற்றி எண்ணங்கள் என் மூளையில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. சிற்றறையில் காணிக்கைகளுக்காக மூன்றாவது வாயில் இருக்கிறதா, மௌல்வி இன்று என்ன சாப்பிட்டார், கொழுக்கட்டைகளா புலவா, எந்த மனைவியுடன் இன்று தங்கியிருக்கிறார், பச்சைத் தேநீர் நிறைத்த கெண்டி அவர் தலைமாட்டில் இருக்கிறதா இல்லையா—இரவில் தாகம் எடுக்கும் போது பச்சைத் தேநீர் மிகவும் பயனுள்ளதாயிற்றே— இவ்வாறெல்லாம் சிந்தித்தபடியே தூக்கத்தில் ஆழ்ந்தேன்.

உறங்கியதும் நான் சொர்க்கத்திலோ நரகத்திலோ அல்ல, அதே தொழுகைக் கூடத்தில் தான் இருக்கிறேன் என்பதைக் கண்டேன். அங்கே குளிராய் இருந்தது, முழு நிசப்தம் நிலவியது. அவ்வப்போது வீசிய காற்றால் நான் புரண்டு புரண்டு படுத்தேன். அப்போது குளிரால் நடுங்கிய ஒரு நாய் திடீரென்று தொழுகைக்கூடத்துக்குள் வந்து முறையிடுவதுபோலச் சிணுங்கியது. அதைத் தேற்ற எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிற்று. ஆனால் எழுந்திருந்து அதன் பக்கத்தில் நெருங்க என்னால் முடியவே இல்லை. ஏனென்றால் நானே தான் இந்தச் சிணுங்கும் நாயாக இருந்தேன். என்மீதே உண்டான இரக்கத்தால் நான் நெடு நேரம் துன்பப்பட்டேன். காலையில் ஸூஃபிகள் என்னை எழுப்பும் வரை மெல்லிய குரலில் சிணுங்கியவாறு இருந்தேன்.

தொழுகைக் கூடத்தில் பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஆட்கள் சிலர் சிலராக வந்து பெரிய வட்டமாக நின்று கொண்டார்கள். நான் மளமளவென்று முகங்கை கழுவிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். ஜெபமாலைகள் வைத்திருந்தவர்கள் பரபரவென்று மணிகளை உருட்டத் தொடங்கினார்கள். மற்றவர்கள் கிளர்ச்சியால் சிறிது நடுங்கியவாறு சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஒரு சிலர் எங்கோ வெறித்தே நோக்கியவாறு நின்றார்கள். மாதர்களும் குழந்தைகளும் கிழவர்களும் கவலை தேய்ந்த ஆடவர்களும், அரைக் குருடர்களும் பக்கவாதம் வந்தவர்களும் மலடர்களும் வறியவர்களும் கடன்பட்டவர்களும் ஜாமீனில் விடுபட்ட குற்றஞ்சாட்டப் பட்டவர்களும் அவர்களில் இருந்தார்கள். மௌல்வி கூடத்தில் தோன்றியதுமே அவர்கள் எல்லோரும் உதவி கோரியும் விபத்திலிருந்து விடுதலை வேண்டியும் உரத்த குரல்களில் அபஸ்வரமாக ஒலமிட்டார்கள். மௌல்வி ஏதோ முணுமுணுத்து அவர்களுடைய தண்ணீர்ச் செம்புகளிலும் தேநீர்க் கெண்டிகளிலும் வேறு பலவித நீர்ப் பாத்திரங்களிலும் ஊதினார்.

தொழுகை முடிந்ததும் நான் பக்கிரிகளுடன் ஒரு விதமாகக் காலை உணவு சாப்பிட்டேன். நஜர்பேக் சந்தைக்குப் போகும் படி மௌல்வி அவர்களுக்குக் கட்டலை இட்டார். நானும் அவர்களுடன் போக ஆயத்தம் ஆனேன். ஆனால் மகாபுனிதர் என்னைத் தடுத்துவிட்டார்.

‘‘நீ இரு, மகனே. நீ மிகவும் துடியான பையன். இங்கேயே முன்கட்டிலும் பின்கட்டிலும் உனக்கு வேலை இருக்கும்’’ என்றார்.

மறுத்துப் பேச நான் துணியவில்லை, ஆனால் உளம் சோர்ந்து போனேன். இவ்வளவு அருமையான, லாபகரமான பயணத்தை நழுவ விட வேண்டுமே! பக்கிரிகளின் ஊர்வலத்தில் கலந்துகொண்டு, சந்தையில் எத்தனையோ பொருள்களைக் கையாடலாமே! நெசவாளியின் கைகளுக்கு அடியில் நூல் நாழி போல வீட்டின் முன்கட்டுக்கும் பின்கட்டுக்குமாகப் பலிந்தாடுவதை விட வெளியே சுற்றி வருவது எவ்வளவோ இன்பமாய் இருக்குமே. பாடிப் பாடிப் பணம் சம்பாதிப்பதற்குப் பதில் களைத்துச் சலித்துப் போக வேண்டிவரும்...

பக்கிரிகள் போன பிறகு மௌல்வி என்னைத் தம் சிற்றறைக்குப் பரிவுடன் அழைத்தார்.

உள்ளே போனதுமே, தொண்டு செய்ய ஆயத்தமாய் இருக்கும் தோற்றத்துடன், “அறிவில் சிறந்த என் ஆசானே, என்ன உத்தரவு இடுகிறீர்கள்?” என்று மெல்லிய குரலில் கேட்டேன். அவர் என் கையைப் பிடித்து வெள்ளைக்கோரைப் பாயில் அமர்த்தினார். நான் முழந்தாள் படியிட்டு அமர்ந்தேன். மௌல்வி பிறையிலிருந்து திருக் குரானை எடுத்து என் கையில் கொடுத்தார். தோல் அட்டை உறைபோட்ட புத்தகம் அது. நான் அதை மூன்று முறை முத்தமிட்டு, நெற்றியில் ஒற்றிக்கொண்டேன். மௌல்வி விழிகளைப் பாதி மூடியவாறு தொழுகை படித்துவிட்டு, பின்வரும் சொற்களைத் திருப்பிச் சொல்லும் படிக் கட்டளை இட்டார். “இன்னாருடைய மகனும் மகாபுனிதரான மௌல்வியின் விசுவாசம் உள்ள சீடனும் ஆன நான், எனத ஆன்மிக ஆசானின் எல்லாக் கட்டளைகளையும் மறுபேச்சின்றி நிறைவேற்றுவேன். என் தலைமேல் வாள் ஒச்சப்படினும் சரியே, அவருடைய கட்டளைகளிலிருந்து வழுவ மாட்டேன். எதையும் தவறாகப் பயன்படுத்த மாட்டேன். என் ஆன்மிக ஆசானின் நான்கு மனைவியரில் ஒவ்வொருவரையும் என் சொந்தத் தாய் போலக் கருதி மரியாதை செய்வேன். அவர்களை ஏறிட்டுப் பார்க்க மாட்டேன். இந்த வீட்டில் நான் கேட்கும் எந்த இரகசியத்தையும் எவருக்கும் தெரிவிக்க மாட்டேன். இந்த இரகசியத்துக்குப் பங்கம் வரும்படி நடந்து கொள்ள நான் நினைத்தால் நான் குருடன் ஆவேனாக, எனக்குப் பக்கவாதம் வருமாக, மேலெல்லாம் கொப்புளங்கள் வெடித்து நான் சாவேனாக! ஆமென்!

மௌல்வியுடன் இதை முடிவுவரை சொன்னதுந்தான் பயங்கரமான பிரதிக்கனை செய்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். எனக்கு அச்சம் உண்டாயிற்று. ஆனால் எதுவும் செய்வதற்கு இல்லை. சொற்களைத் திருப்ப முடியாததே! அந்தக் கணம் முதல், ஒரு தையலிலிருந்து மற்ற தையலுக்குப் போகும் ஊசி போல முன்கட்டுக்கும் பின்கட்டுக்குமாக ஓடிச் சாடிய வண்ணமாய் இருந்தேன். சரியானபடி ஓய்வு கொள்ளக்கூட எனக்குத் துணிவு வரவில்லை. மனிதனுடைய நம்பிக்கைகள்தாம் எவ்வளவு ஏமாற்றம் நிறைந்தவை!

எல்லாவிதக் கட்டளைகளையும் எல்லா வித வேலைகளையும் நிறைவேற்றியவாறு நான் உழைத்தேன். ஒரு விஷயத்தில் மட்டும் பாழாய்ப் போகிற சைத்தான் என்னை நேர் வழியிலிருந்து பிறழவைத்தான். மகாபுனிதரின் இளைய மனைவி பதினேழு வயது இள நங்கை. சித்திரந் தீட்டிய மர ஸ்பூன் போல ஒரே அழகு அவள், மெய்யாகவே! அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னைப் பிடர் பிடித்து உந்தும். நான் சற்றைக்கு ஒரு தரம் கடைக் கண்ணால் பார்ப்பேன். மறு கணமே வெள்ளைக் கோரைப்பாயும் நான் திருக் குரானை முத்தம் இட்டதும் எனக்கு நினைவு வரும். மனிதகுல வைரியான சைத்தான் பேராசை பிடித்த மீனைப் போல என்னைத் தூண்டிலில் மாட்டிவிட்டான் என்று தோன்றும். நிம்மதி இழந்து தவிப்பேன். மறுபடியும் முன்னும் பின்னும் ஓடியவாறு வாய்க்குள் பாடுவேன்.

ஒயிலார் அழகி ஜெபிஹோன்,
அல்லாவே, ஓ அல்லாவே...


நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருண்டோடின. ஒரு முறை மேளல்வி என்னை மறுபடி சிற்றறைக்கு அழைத்தார்.

“என் மகனே” என்று பரிவாக விளித்துக் கூறலானார், “எங்களுக்காக நீ வெகுவாக உழைத்திருக்கிறாய். எங்கள் வீட்டு விவகாரங்கள் எல்லாவற்றையும் இப்போது நீ அறிவாய்... எத்தனை பெயரை நான் பராமரிக்க வேண்டி இருக்கிறது என்பதை நீயே காண்கிறாய், மனைவிகள், குழந்தைகள், ஸூஃபிகள், வேலையாட்கள், உழவு வேலைக்காரர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டும், உடைகள் தர வேண்டும்... காணிக்கைகளை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் நாம் எல்லோரும் பட்டினிகிடந்து மடிவோம், இல்லையா? நீ துடியான பையன், திறமை உள்ளவன். நான் உன்னைச் சோதித்துப் பார்த்தேன். எங்கள் இரகசியத்துக்கு நீ அர்ப்பிக்கப்பட்டிருக்கிறாய். பராக்குப் பார்த்துக் கொண்டு இராதே, மகனே. நீயும் பணம் சம்பாதிக்க வேளை வந்துவிட்டது... ஏதேனும் வேறு வழியில்... காணிக்கைகள் திரட்டுவது தவிர...”

மௌல்வி இப்படிப் புதிர் போட்டார்! “வேறு வழியில்” என்பதற்கு என்ன அர்த்தம்? நான் எண்ணி எண்ணி மூளையைக் குழப்பிக்கொண்டேன். எனது விளங்காமையை முகம் பிரதிபலித்தது போலும். ஏனெனில் மௌல்வி எனக்கு விளக்கத் தொடங்கினார்—ஜாடை மாடையாக, சுற்றி வளைத்து. முடிவில் அவருடைய சொற்களின் பொருள் என் அறிவுக்கு எட்டிவிட்டது. “அப்படியா விஷயம்?” என்று எண்ணி அவரிடம் சொன்னேன்.

“நல்லது. குருவே! நான் கீழ்ப்படிகிறேன். என் ஆசானின் பொருட்டு என்னையே பலி கொடுக்கச் சித்தமாய் இருக்கிறேன்...”

மௌல்வி மனநிறைவுடன் முறுவலித்து என் தோளில் தட்டிக்கொடுத்து ஆசி கூறினார். அப்போது அவர் விழிகளில் தந்திரம் பளிச்சிட்டது. நானும் தேவையான துணிவு எனக்கு வந்துவிட்டதை உணர்ந்தேன்.

மௌல்வி சட்டென எழுந்தார். “கொஞ்சம் இரு” என்று என்னிடம் சொல்லிவிட்டுப் பின்கட்டுக்குப் போனவர், சிறிது நேரத்தில் குட்டையில் முடிந்த துணி முடிச்சு ஒன்றுடன் திரும்பிவந்தார். அதில் பழைய சராயும் சட்டையும் குல்லாயும் அச்சிட்ட சீட்டித் துணி இடுப்புக் குட்டையும் இருந்தன.

“இந்தா, குழந்தாய். இவற்றை அணிந்துகொள். இந்த உடை என் காலஞ்சென்ற மகன் மின்யாகுத்ரத்துடையவை. போன கோடையில் அவன் குளத்தில் மூழ்கி இறந்துபோனான். அவன் ஆன்ம சாந்திக்குப் பிரார்த்தனை செய்” என்றார்.

“ஆமென், சொர்க்க சாம்ராஜ்யம் அவனுக்குக் கிட்டுமாக....”
“ஆண்டவன் அருள்க...”

மௌல்வியின் புதிய உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என்று நான் சிந்திக்கலானேன். ஆனால் வேட்டைக்காரனை நோக்கியே விலங்கு வரும் என்பது சரிதான் போலும். மறுநாள் நான் ஏதோ காரியமாகப் பக்கத்துக் கிராமத்துக்குப் போய்விட்டுத் திரும்பிவரும்போது இரண்டு வயதுக் கிடாரிக் கன்று திடலில் விட்டாற்றியாக நிற்கக் கண்டேன். அது மந்தையிலிருந்து பின் தங்கி விட்டதா, வழி தவறிவிட்டதா என்றெல்லாம் அதை விசாரிக்க நான் முற்படவில்லை. இடுப்புக் குட்டையை அவிழ்த்து அதன் கொம்பில் மாட்டி மெதுவாக அதை மடத்துக்கு இழுத்துச் சென்றேன். மௌல்வி பெரு மகிழ்வு அடைந்தார்.

“நீ மிக அருமையான பையன்!” நீ முன்னுக்கு வருவாய்... அல்லாவே தாம் இந்த நல்ல மிருகத்தை உன்னிடம் அனுப்பினார். ஆனால் ஒன்று சொல்லு, வழியில் யாரும் உன்னைப் பார்க்கவில்லையே? பார்க்கவில்லையா? ஒருவருமே? அல்லா காப்பாற்றினார்... சபாஷ், என் மகனே, சபாஷ். உனக்குக் கற்றுக் கொடுப்பதை நன்கு புரிந்துகொள், ஒருபோதும் சங்கடத்துக்குள்ளாக மாட்டாய் இவ்வுலகிலும் சரி, மறு உலகிலும் சரி... ” என்று கூறினார்.

மாலையில் கிடாரி வெட்டப்பட்டது. இறைச்சியும் கொழுப்பும் குதிரில் வைக்கப்பட்டன. தோலைப் பதனிடும்படியும் தமக்கு ஜோடுகள் தைக்கவும் மௌல்வி கட்டைளையிட்டார்.

மறுநாள் நான் மீண்டும் பக்கத்துக் கிராமத்துக்கு அனுப்பப்பட்டேன். அப்பாவிக் கிடாரியின் சொந்தக்காரன் யார் என்பதை அப்போது தெரிந்து கொண்டேன். அவன் கிராமவாசி, நாடோடி வியாபாரி. அதற்குள் அவன் சுற்று வட்டாரம் முழுவதிலும் பெருங்கூச்சல் கிளப்பிவிட்டான். தன் உடைமையை எங்கும் தேடினான். கடைசியில் கிடாரியின் குளம்புத் தடங்களைக் கண்டு அவற்றைத் தொடர்ந்து சென்றான். கிடாரியையும் அதை ஏமாற்றியவனையும் வாய்க்கு வந்தபடி திட்டினான். அவனுக்கு இந்த உலகில் உள்ள எல்லா வியாதிகளும் துன்பங்களும் நேர வேண்டும் என்றும் நரகத்தில் எல்லாச் சித்திரவதைகளையும் அவன் அனுபவிக்க வேண்டும் என்றும் சபித்தான். நான் புதர்களின் மறைவில் அவனைத் தொடர்ந்தேன். அவன் ஒரேயடியாக வைது திட்டினான்—அதிலும் குளம்புத் தடங்கள் மறைந்ததும், தீடிரென்று அவன் தலையை நிமிர்த்தி அக்கம் பக்கம் பார்த்தான். தடங்கள் எங்கே இட்டுச் செல்கின்றன என்று அவன் புரிந்து கொண்டான் போலும். அதைப் பின்பற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்றான். ஆனால் அவனுடைய வசவுகளின் தொனி கணிசமாக மாறிவிட்டது. தன் கோபத்தை எல்லாம் அவன் இப்போது கிடாரியின்மேல் காட்டத் தொடங்கினான். மடத்துக்கு எதிரே வந்ததுமோ அவன் பேசுவதையே நிறுத்திவிட்டான். வாயிலையே குத்திட்டு நோக்கினான். என்னைத் தவிர வேறு யாருமே அவனைப் பார்க்கவில்லை (என்னையோ, அவன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை), என்றாலும் அவன் தலை வணங்கினான். பிரார்த்தனை செய்யும் பாவனையில் முகத்தைத் தடவினான், பின்பு திரும்பி நடக்கலானான். சில தாவடிகள் சென்றதும் அவன் ஒரே பாய்ச்சலாக ஓட்டம் எடுத்தான்.

என் முதல் வெற்றி மௌல்விக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டியது. அவர் என்னைத் தம் சிற்றறைக்கு மறுபடி அழைத்துப் புது உபதேசம் செய்யலானார்.

“மகனே, வேறு வேலைகளையும் நீ மேற்கொள்ள வேளை வந்துவிட்டது. சந்தைக்குப் போ... பைகள், மணி பர்ஸுகள் என்ற அருமையாக வஸ்துக்களும் உலகில் இருக்கின்றனவே ரொக்கப் பணத்தைவிட மேலானது எது? எடுத்துச் செல்வது கஷ்டம் அல்ல, மறைப்பதும் சுலபம். ரொக்கப் பணம், மகனே, ரொக்கப் பணம்” என்றார்.

ஜேபடித்திருடன் ஸுல்தான் கூட என்னை ஈடுபடுத்த முடியாத இந்தத் தொழிலை நான் உண்மையாகவே மேற்கொண்டிருப்பேன். ஆனால் ஒரு நிகழ்ச்சி இதற்குத் தடையாய் நேர்ந்தது. இந்த உரையாடல் நடந்ததற்கு அடுத்த நாள் மௌல்வி என்னை முகப்பு வெளியில் நிறுத்தி, மகனே, ஒரு கழுதை பிடித்துக்கொண்டுவா, சீக்கிரம். எங்கிருந்தாலும் பிடித்துக்கொண்டுவா என்றார்.

நான் அவரை வியப்புடன் நோக்கினேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது.

“என்ன பேந்தப் பேந்த விழிக்கிறாய்? ஒரு கழுதையைப் பிடித்துக் கொண்டுவந்து முற்றத்து முசக்கட்டை மரத்தில் கட்டு என்கிறேனே”

இவருக்குக் கழுதை எதற்காக? எவேளேனும் மனைவிக்குச் சொறி சிரங்கு வந்துவிட்டதா? இவ்வாறு எண்ணமிட்டவனாக நான் கிராமத்துக்குப் போனேன். இரண்டு பூசனிக்காய்கள் கொடுப்பதாகப் பேசி அதே ஏழை வியாபாரியின் கழுதையை ஒரு மணி நேரத்துக்கு வாடகைக்குப் பிடித்தேன். இந்தக் கழுதைமேல் ஏறித்தான் புருவச்சாயம் வேண்டுமா, சராய் நாடா வேண்டுமா? என்று கூலிக்கொண்டே அவன் கிராமம் கிராமமாகச் செல்வது வழக்கம்.

கழுதையை இட்டு வந்து முசுக்கட்டை மரத்தில் நான் கட்டியதும், மௌல்வியின் கர்ப்பிணியான மூன்றாம் மனைவி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். முற்றத்தைத் தெளித்துப் பெருக்கித் துப்புரவாக்கி, மரத்தடியில் கம்பளம் விரிக்கும்படி அவள் உத்தரவிட்டாள். இந்தக் காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கையில், இந்தக் கழுதைமேல் மௌல்வியின் மனைவி காட்டிய மரியாதையும் கனிவும் எனக்குப் பெரு வியப்பூட்டின. ஏனெனில், நபிகள் நாயகத்தின் நெருங்கிய உறவினளான ஃபாத்திமாவின் வம்சத்தினள் அவள் என்று சொல்லிக் கொண்டார்கள். நான் விரிப்பு விரித்ததுமே அவள் என்னை வெளியே போகச் சொல்லிவிட்டு வாயிலை உட்புறம் தாளிட்டுக் கொண்டாள். இதனால் என் ஆவல் நெருப்பாய் மூண்டெரிந்தது. நான் தொழுகைக்கூடத்துக்குப் போய் முற்றத்தின் புறம் இருந்த சுவரில் உள்ள திறப்பு வழியாக இடுக்கை அடைத்திருந்த சித்திரவேலைப்பாடு உள்ள ஒரு குச்சியை அகற்றினேன். எல்லாம் நன்றாய்த் தெரிந்தது. மௌல்வியின் மனைவி கழுதையின் காது நுனிகளைக் கத்தரிக்கோலால் நறுக்கினாள். அவற்றிலிருந்து குருதி கசியத் தொடங்கிற்று. தான் கம்பளத்தின்மேல் பட்டு விரிப்பு விரித்து, தலையணையைப் போட்டுக்கொண்டு படுத்து, கழுதையைப் பார்த்து மகிழலானாள். இரத்தம் வடிந்த காதுகளில் ஈக்கள் மொய்த்தன. பாவம் கழுதை தலையை ஆட்டி, விடாது தொல்லை கொடுத்த ஈக்களை விரட்டிற்று. அது காதுகளை அடித்து முடிந்தவரை பலமாக உதறிற்று, ஒன்றோடொன்று அடித்துக் கொண்டது. மௌல்வின் மனைவியோ இதைக் கண்டு களிபேருவகை அடைந்தாள்.

‘‘அட என் கண்ணே!’’ என்று அவள் கனிந்தாள்—அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டுவிடுவாள் போல. ‘‘அட என் அழகு ராஜா! உன் காதுகள் தாம் எவ்வளவு ஒயிலாக அசைகின்றன. உனக்காக என் உயிரையே கொடுப்பேன்!’’ என்றாள். மௌல்வியின் மற்ற மனைவிகளும் முற்றத்துக்கு வந்து இந்தக் காட்சியைக் கண்டு விஷச் சிரிப்பு சிரித்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து மூன்றாம் மனைவி சொன்னாள்: ‘‘பாருங்கள், அயிம்சாஹோன். இதன் காதுகள் எவ்வளவு அருமையாக அசைகின்றன, பாருங்களேன்! அட என் கண்ணே, என் செல்வமே, என் கழுதை ராஜாவே!’’

சுவர் திறப்பு அருகே நின்றவாறு நானும் சத்தம் காட்டாமல் பொங்கிப் பொங்கிச் சிரித்தேன். கழுதையின் இடத்தில் எங்கள் மௌல்வி இருப்பதாக எண்ணிக் கொண்டேன். கருவுற்ற மனைவி மௌல்வியைக் காதல் மொழிகளால் கொஞ்சுகிறாள். அவரது கடிவாளம் கிணுகிணுக்கிறது. நுனிகள் கத்தரிக்கப் பட்ட பெரிய வெண் காதுகள் எல்லாத் திசைகளிலும் திரும்பி அசைகின்றன. அவற்றின் மேல் ஈக்கள் திரள் திரளாக மொடய்க்கின்றன... கற்பனைக் கண்களால் இவற்றை எல்லாம் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கரிய விழிகளும் ஒயில் நடையுங்கூட மௌல்விக்கும் கழுதைக்கும் ஒரே மாதிரியானவை என்று நினைத்ததும் தாங்க முடியாமல் களுக்கென்று சிரித்து விட்டேன். இது தான் எனக்கும் வினையாக முடிந்தது. ஒரு வேளை அல்லா திடீரென்று நினைவுபடுத்திக் கொண்டு என் எண்ணங்களை அறிந்துவிட்டார் போலும். தம் விசுவாசமுள்ள ஊழியர்களை—எங்கள் மௌல்வியைக் காட்டிலும் விசுவாசம் மிக்கவரோ, இருக்கவே முடியாது!—சிந்தனையில் கூட இந்த மாதிரி எள்ளி நகையாடுவதை அனுமதிக்கக் கூடாது என்று அல்லா முடிவு செய்தார் போலும்! உண்மை எதுவோ, அறியேன். ஆனால், வாய்க்குள் சிரிக்க முயன்றவாறு சுவற்றுத் திறப்பின் அருகே நான் குலுங்கி நெளிந்து கொண்டிருக்கையில் பின்னிருந்து வந்த முக்கிய ஆபத்தை நான் புறக்கணித்துவிட்டேன். முதுகில் பலத்த குத்து விழுந்ததுந்தான் இதை உணர்ந்தேன்.

‘‘அட சைத்தான் மகனே, இங்கே என்ன செய்கிறாய்?’’

இவ்வாறு கேட்டவர் மகாபுனிதரான மௌல்வியேதாம். என்னுடைய குபீர்ச் சிரிப்பு அவர் காதில் பட்டிருக்கும். விஷயம் என்ன என்று பார்க்க வந்திருப்பார். தம்முடைய காதல் மனைவிகளை—எவர்களை நான் சொந்தத் தாயார்களாக மதிக்க வேண்டுமோ அவர்களை—நான் உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டார். இது கொடும் பாவம், எவ்வகையிலும் மன்னிக்கத் தகாதது. இம்முறை நான் சில உதைகளோடு தப்பவில்லை. மௌல்வி என்னைச் சபித்தார். மடத்திலிருந்து விரட்டிவிட்டார்...

நான் வாயிலுக்கு வெளியே, பாதைக்கு வந்தேன். தனது கிடாரியை (இப்போது கழுதையைங்கூட) இழந்து விட்ட அப்பாவி வியபாரி சமீபத்தில் இந்தப் பாதையில்தான் நின்று கொண்டிருந்தான். நானோ, புதர்களின் மறைவிலிருந்து கேலிச் சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டம் எப்படி மாறி மாறி வருகிறது என்று எண்ணமிட்டேன். சில நிமிடங்கள் முன்பு வரை இந்தக் கோழிக் குடிலில் நான் மதிப்புள்ள சேவலாக வளைய வந்து கொண்டிருந்தேன். இப்போதோ அதற்குள் தலை காட்டவே என்னால் முடியாது! தவிரவும், நான் சொர்க்கத்தை இழுத்துவிட்டேன்! அதுவோ என் கைக்குள் இருந்தது. வாஸ்தவம், மடத்தில் என் வாழ்வு சொர்க்கத்துக்கு அவ்வளவாக ஈடாயில்லை தான். என்றாலும் வருங்காலத்தில் சொர்க்கபோகம் எனக்கும் நிச்சியமாகக் கிட்ட இருந்தது! இப்போது என்ன ஆகும்? கால் போன போக்கில் அலைந்து திரிய வேண்டுமா? வானம் உயரமானது, பூமி கடினமானது. எங்கே போவதோ தெரியவில்லை. எனக்குப் பச்சாதாபம் உண்டாயிற்று. அறிவற்ற கயவன், வீடுவாசலற்ற நாடோடி, பாதரசத் துளி மழமப்பான சாய் தளத்தில் உருண்டு ஒடுவது போல ஒரு நோக்கமும் இன்றி வெட்டியாக அலைந்து திரிபவன் என்று என்னையே நொந்துகொண்டேன். நான் மட்டும் சற்று அறிவும் அடக்கமும் உள்ளவனாக இருந்தால், வீண் சேட்டைகள் செய்யாமல் இருந்தால், ஒரு துன்பமும் அறியாமல் வீட்டோடு வாழ்ந்திருப்பேன். இப்போதோ? ஆனால், சென்றதோ மீளாது, போனதற்கு வருந்திப் பயன் என்ன?...

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

3 comments:

Anonymous said...

சோவியத் நாடு புத்தகம் இன்னும் வந்துகொண்டு இருக்கிறதா? ஆம் எனில் எங்கு கிடைக்கும்?

சரவணன் said...

அனானி,

குறும்பன் புத்தகம் மறு அச்சாக NCBH இல் கிடைக்கிறது. புத்தகமாகவே கிடைப்பதால் இனி வேறு அத்தியாயங்கள் இந்தத் தளத்தில் வெளியாகாது. (நான் வலையேற்றி வந்தது பழைய பதிப்பிலிருந்து. அப்போது புதிய அச்சு வெளியானது எனக்குத் தெரியாது.)

Dino LA said...

அற்புதமான பதிவு