Friday 6 March 2009

ராயாவின் "கைதிகள்"


யூ. ஸோட்னிக்

வாயில் மணி யாரோ அவசரக் காரியமாக அடிப்பது போல் ஒலித்தது. ராயா, உடைமேல் ஏப்ரனுக்குப் பதில் கட்டிக் கொண்டிருந்த நாப்கினில் கைகளைத் துடைத்துக்கொண்டு கதவைத்திறந்தாள். ஏழாவது வகுப்பு மாணவன் லோவா கிளச்கோவ் உள்ளே நுழைந்தான்.



"ஹலோ, அவன் வீட்டில் இருக்கிறானா?" என்று மேல் கோட்டைக் கழற்றிய வண்ணம் கேட்டான்.

"குளிக்கும் அறையில் இருக்கிறான்" என்று சொல்லிவிட்டு, ராயா தலையைப் பின்னிக்கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள்.


வீட்டில் சமீபத்தில்தான் குழாய் நீரைக் கொதிக்கவைக்கும் எரிவாயு ஸ்டவ் அடுப்பை அமைத்திருந்தனர். ஸ்டவ் வைத்த புதிதில் போர்யா நாளுக்கு நான்கு முறை குளிப்பான். இப்போதும் குளித்த சுவடு மாறாமல், சிவப்பேறிய ஈர முகமும் தானுமாக முகங்கழுவும் பேஸினுக்கு முன்னர் கண்ணாடியில் அழகு பார்த்துக்கொண்டே, பொன்னிற மயிரை வாரிக் கொண்டிருந்தான்.


லோவா குளிக்கும் அறைக்குள் நுழைந்த்தும் அவன் பக்கம் திரும்பாமலே, "ஹலோ, நீ சீக்கிரமாக வந்தது நல்லது. எனக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது" என்றான்.


"என்னடா அது?" என்று சுருக்கமாகக் கேட்டான் லோவா.


நண்பனின் தோள்களுக்கு மேலாகக் கண்ணாடியில் எட்டிப் பார்த்துக்கொண்டு, தலைமுடியை நன்கு படியத் தடவி, வெண்ணிறக் கழுத்துப்பட்டையையும், சிவப்புப் பயனீர் டையையும் சரிப்படுத்தி, கறுப்புச் சொக்காயின் ஜிப்பை மேலிழுத்தான் லோவா.

இரு நண்பர்களும் பார்ப்பதற்கு ஜோராக இருக்க வேண்டுமெனக் கருதினர்; ஏனென்றால் பூகோளத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர் அர்ஜான்ஸுகிய், பள்ளியின் வட்டார வரலாற்றுக் கழகத்தின் கூட்டத்திற்கு அன்று வருவதாகக் கூறியிருந்தார். ஆகவே லோவாவும் போர்யாவும் பேராசிரியரின் வீட்டிற்குப்போய் அவரைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.

பேஸினுக்குமேல் சீப்பை வைத்தான் போர்யா.

"எனக்கு இன்று பேச ஆசையாக இருக்கிறது; நீ என்ன சொல்லுகிறாய்?"

லோவா இரண்டு பண்புகளை வளர்க்க முயன்று கொண்டிருந்தான்; ஒன்று எல்லாவிதச் சந்தர்ப்பங்களிலும் அமைதியாய் இருப்பது; மற்றொன்று எப்போதும் சுருக்கமாகப் பேசுவது.

"அப்படியா, நல்லதுதான்" என்றான்.

"சரி, பேராசிரியர் வீட்டுக்குப் போவதற்கு முன்பு வீக்டார் வீட்டுக்குப் போய், கூட்டத்தில் பேசப்போவதைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாம்."

"போர்யா, போர்யா!" என்று சமையல் அறையிலிருந்து கூப்பிட்டாள் ராயா.

"என்ன வேண்டும் உனக்கு?"

"போர்யா, எங்கும் போகாதே--முதலில் மாமிசத்தை அரைக்க வேண்டும்."
"முன்பே ஏன் அதைச் சொல்லவில்லை? இப்பொழுது எனக்கு நேரமில்லை."

ராயா ஆவி வந்து கொண்டிருந்த ஒரு பெரிய கரண்டியைக் கையில் பிடித்துக்கொண்டு, குளிக்கும் அறையின் கதவருகே வந்தாள்.






"போர்யா, அப்போதிருந்தே சொல்லிக்கொண்டுதானே இருக்கிறேன்; ஆனால் நீதான் நேரமில்லை!` என்று தட்டிக் கழித்தாய். மாமிசத்தை அரைத்துக் கொடுத்துவிட்டுப் போ. ஆமாம், சொல்லிவிட்டேன். அரவை இயந்திரம் சுற்றுவதற்குக் கஷ்டமாக இருப்பதால் என்னால் அரைக்க முடியாது. அம்மா கறிவடை செய்து வைக்கச் சொல்லியிருக்கிறாள்."

போர்யா அவளை முறைத்துப் பார்த்து, நெற்றியின் நிறத்தோடு ஒன்றியிருந்த பொன்னிறமான புருவங்களைச் சுளித்தான்.

"ராயா! நான் சொல்வதைப் பேசாமல் கேளு, உனக்குப் புரிகிற மாதிரியாகவே சொல்லுகிறேன்-- எனக்கு ஒரே அவசரம். மாமிசம் அரைப்பதைவிட மிகவும் முக்கியமான வேலை எனக்கிருக்கிறது. இதற்குமேல் பேச்சுக்கே இடமில்லை. ஊம், பேசாமல் நடையைக் கட்டு பார்க்கலாம்."

ராயா போகவில்லை. அண்ணனுக்குப் பக்கமாக இன்னும் ஓரடி நெருங்கி வந்தாள்.

"போர்யா, நான் போகமாட்டேன்; மாமிசம் அரைத்துக் கொடுக்காமல் உன்னை எங்கும் போக விட மாட்டேன். உனக்காச்சு, எனக்காச்சு!"

"பெரியவர்களிடம் இப்படியெல்லாம் பேசக்கூடாது. சொல்வது தெரியுதா? ஊம்... திரும்பு அந்தப் பக்கம். நட!" என்று போர்யா உரக்கச் சொன்னான்.

தங்கையின் தோள்களைப் பிடித்து, மறுபுறம் திருப்பி லேசாகத் தள்ளினான்.

"அப்படியா சேதி! அதுவும் நல்லது தான். அனால் ஒன்று சொல்லிவிடுகிறேன். நீ போகமட்டும் முடியாது" எனக் கூச்சலிட்டாள்.

போர்யா நாற்காலியில் உட்கார்ந்து, காலுறைகளை மாட்டிக்கொண்டான்.

"என்னை யாரெனெறு நினைத்துக் கொண்டிருக்கிறாள்?... மற்ற வேலைகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு அரவை இயந்திரத்தைச் சுற்ற வேண்டுமாம்! எப்படியிருக்கிறது கதை! மற்றவர்கள் நேரத்தைப் பாழாக்குவதிலேயே குறி!" என்று சிடுசிடுத்தான்.

பையன்கள் குளிக்கும் அறையிலிருந்து வெளிவந்தார்கள். நடையில் ராயா கையில் பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தார்கள்.

"கொஞ்சம் பொறு, ஒரு நொடிப் பொழுதிற்குள் வந்து விடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் போர்யா. நாற்காலியின் மேலிருந்த அழகான கால்சட்டையை எடுத்து வலதுகாலை நுழைத்தான். "சரி, லோவா, இன்றைக்குச் சரியான பேச்சுப் போட்டி நடத்துவோம். யாருக்கோ செம்மையாகக் கிடைக்கப் போகிறது..." என்று சொல்லிக்கொண்டே வந்தவன் சட்டென்று பேச்சை நடுவில் நிறுத்திவிட்டுத் தன்னுடைய கால்சட்டைகளைப் பார்த்துக் கொண்டே, "அட கண்ணறாவியே! இதெப்படி... இதோ பார்!" என்றான்.

கால்சட்டையில் ஒரு பொத்தான் கூட இல்லை! நண்பர்கள் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு நாற்காலியில் பின்பக்கம் தொங்கிக் கொண்டிருந்த சொக்காயைப் பார்த்தனர்--அதிலும் பொத்தான்கள் இல்லை.

போர்யா தலையைச் சொறிந்துகொண்டான்.

"இது என்னடா சனியன்! ஹூம்?"

"யாரோ கத்தரித்திருக்கிறார்கள்" என்று லோவா அமைதியாகச் சொல்லி, மேஜை மேலிருந்த பொத்தான்களையும் கத்தரிக்கோலையும் காட்டினான்.

போர்யாவின் முகம் தலைமயிரைவிடச் சிவந்தது. கால் சட்டையை ஆத்திரத்தோடு எறிந்துவிட்டு, அரைக்கால் சட்டையோடு குளிக்கும் அறைக்குச் சென்றான். லோவாவும் கூடப் போனான்.

"ரா...ர...ராயா!"

"என்ன வேண்டும்?" என மூடிய கதவுக்குப் பின் இருந்து ராயா கேட்டாள்.


போர்யா கதவைத் தள்ளினான்; அது தாழிடப்பட்டிருந்தது.

"கதவைத் திற!"

"மாட்டேன்" என்றாள் ராயா

"என் பொத்தான்களை நீ தானே கத்தரித்துவிட்டாய், சொல்லு."

"நீ மாமிசம் அரைக்கவேண்டும் என்பதற்காக, எனக்குக் கறிவடை செய்ய வேண்டுமே."

கதவை முட்டியால் இடித்தான் போர்யா; அவன் போட்ட கூப்பாட்டில் புதிய எரிவாயு ஸ்டவ் மேல் படுத்திருந்த பூனை அடித்துப் புரண்டுகொண்டு ஓட்டமெடுத்தது.

"ராயா! இந்தக் கணமே வா வெளியே! சொல்வது காதில் விழுகிறதா?"

"ஏன்?"

"இந்த நிமிடமே வெளியில் வந்து என் பொத்தன்களைத் தை!"

"நீ மாமிசம் அரைத்துக் கொடு, அதன்பிறகு நான் பொத்தான்களைத் தைக்கிறேன்."

போர்யா, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சமையல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். பிறகு லோவாவின் பக்கமாகப்போய், "எப்படி இருக்கிறது விஷயம், பார்த்தாயா?" என்றான்.

லோவா கொஞ்சமும் கலங்கவில்லை.

"கவலைப்படாதே, நீ படித்த உளநூலறிவைப் பயன்படுத்து; அவளை உள்ளே வைத்து வெளிப்பக்கத்தில் தாழ்ப்பாள் போடு."

போர்யா கதவின் வெளிப்பக்கத்தில் இருந்த தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு, "ராயா, தெரியுதா! அப்பா, அம்மா வீட்டிக்கு வருகிறவரையில் நீ அங்கேயே உட்கார்ந்திருக்கலாம்" என்றான்.





"அதைப்பற்றி எனக்குக் கவலை கிடையாது. என்னிடத்தில் `இரண்டு காப்டன்கள்` என்ற புத்தகம் இருக்கிறது."

"இதைக் கேட்டவுடனே போர்யா மனமுடைந்து போனான். ஏக்கத்தோடு லோவாவை நோக்கினான்.


"கவலைப்படாதே. அவைகளை நாமே தைக்கலாம்" என்றான் லோவா.
இரு நண்பர்கள் அறைக்குத் திரும்பி வந்தார்கள். கால் சட்டையின் பொத்தான்களை போர்யா தைப்பது என்றும், சொக்காயின் பொத்தான்களை லோவா தைப்பது என்றும் தீர்மானித்தார்கள்.

ஆனால் தையல் பெட்டியில் ஒரே ஓர் ஊசிதான் இருந்தது. கண்டிலிருந்து நூலை அறுத்துக்கொண்டு, மேஜைக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருந்த விளக்கடிக்குப் போனான் போர்யா. நாக்கால் நூலை ஈரமாக்கி, விரலால் பதப்படுத்தினான்; இருந்தாலும் ஊசியின் காதுக்குள் நூல் நுழையவில்லை. லோவா அவன் பக்கத்தில் நின்று கொண்டு, "பதற்றப்படாதே. அமைதியாயிரு. நீ அளவுக்கு மேல் ஆத்திரப்படுவதால்தான் எதுவும் நடக்கவில்லை" என்றான்.

போர்யாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"இந்தா! என்னால் முடியாது. நீயே செய்!" என்று கூச்சல் போட்டுக்கொண்டு, ஊசியையும் நூலையும் லோவாவின் கையில் திணித்தான்.

லோவா, நூலைக் கவனமாகப் பார்த்து, அது முரடாயிருப்பதாகக் கூறினான். போர்யா வேறொரு நூலைக் கொண்டு வந்தான். அது இளஞ்சிவப்பாக இருந்தபோதிலும், ஊசியின் காதில் எளிதாக நுழைந்தது. லோவா கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "ஏழு நிமிடங்கள் ஆயின." என்றான்.

பொத்தானைத் தைக்கும்பொழுது, போர்யா தன் விரல்களை ஐந்து தடவை குத்திக்கொண்டதோடு, நான்கு முறை நூலை அறுத்தும் விட்டான்.

"நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன" என்றான் லோவா, போர்யாவின் வேலையைக் கவனித்துக்கொண்டு, "அடாடா, நீ மிகவும் பதற்றப்படுவதால், பொத்தானைத் தவறாகத் தைத்துவிட்டாய்" என்றான்.

"உளறாதேயடா!... பொத்தானை எங்கே தவறாகத்தைத்துவிட்டேனாம்?" என்று போர்யா சீறி விழுந்தான்.

"இதோ, நீ தைத்திருக்கும் அழகைப்பார்; தொளை எங்கிருக்கிறது, பொத்தானை எங்கே தைத்திருக்கிறாய்?"

லோவா பொத்தானை அறுத்தெடுத்துவிட்டு, பிறகு அதைச் சரியாகத் தைத்தான்; இருந்தாலும் அதற்கு எட்டு நிமிடங்கள் பிடித்தன. பிறகு, எழுந்திரிந்து அறையில் இங்கும் அங்கும் நடை போட்டான்.

"இதெல்லாம் வீண் வேலை" என்று சொன்னான்.

"வீண் வேலை ஒன்றுமில்லை! நமக்குத்தான் இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே" என்றான் போர்யா.

தோள்களைக் குலுக்கிக்கொண்டான் லோவா.

"கணக்கு என்றால் கணக்கு தானே யப்பா! நமக்கு ஒரு மணி நேரம் இருக்கிறதா! இங்கிருந்து பேராசிரியர் வீட்டுக்குப் போகப் பதினைந்து நிமிடங்கள் ஆகும். பேராசிரியர் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்குத் திரும்ப அதே அளவு நேரமாகும். ஒரு பொத்தானை ஏழு நிமிடத்தில் தைத்தோம்... ஏழும் நான்கும் பதினொன்று, பதினொன்றும் எட்டும்... அதாவது பத்தொன்பது நிமிடங்களாகின்றன. உண்மையில், இப்போது சிறிது அனுபவம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் விரைவாகச் செய்யலாம். சுமார் பதினைந்து நிமிடங்கள் ஆவதாகக் கொள்வோம். கால்சட்டையில் ஐந்து பொத்தான்கள், சட்டையில் நான்கு, அவ்வளவுதானே. எளிதான கணக்கு!"

போர்யாவின் தாய் மற்றக் கால்ட்டையை மாற்றித்தைப்பதற்காகத் தையல்களைப் பிரித்து வைத்திருந்தாள். அவனிடம் வேறு ஒன்று இருந்தது; ஆனால் அது எங்கும் ஒட்டுப்போட்டுத் தைக்கப்பட்டிருந்தது. போர்யாவுக்குத் தலைகால் தெரியாத கோபம் உண்டாயிற்று. இன்று ராயாவின் காதுகளைப் பிய்த்துவிடுகிறேன்; அவளிடம் இனி ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டேன்; மேலும், அப்பாவும் அம்மாவும் வந்த உடனே அவளுக்குப் பாடம் கற்பிக்காவிட்டால் வீட்டைவிட்டே போய்விடுவேன் என்றெல்லாம் கத்தினான்.

"வெட்டிக்கூப்பாடு பயன் தராது, அப்பனே, கோபதாபத்தை யெல்லாம் அடக்கிவைத்துக்கொண்டு அவளோடு மறுபடி பேசிப்பார். அவளுக்கு மனதில் படும்படி பேச முயற்சி செய்" என்றான் லோவா.

நண்பர்கள் இருவரும் குளிக்கும் அறைக்குத் திரும்பி வந்தனர். போர்யா, மிகவும் உரக்கப் பேசாமல், அமைதியோடு, "ராயா, ராயா! உன் காதில் விழுகிறதா?" என்று கேட்டான்.

"ஊம்" என்று கதவுக்குப்பின்புறமிருந்து சொன்னாள் ராயா.

"நான் சொல்வது இதுதான்; இம்முறை உன்னை வெளியில் வர விடுகிறேன். ஆனால் நீ இனிமேல் இந்த மாதிரி ஒருபோதும் செய்யக் கூடாது. புரிகிறதா?"

"புரிகிறது. ஆனால் நான் வெளியில் வரமாட்டேன்."

அரைக்கால்சட்டையை மேலே இழுத்துக்கொண்டு, முடிந்த அளவு கனிவுடன், "கேள், நீ என்ன குழந்தையா? நான் விரைவில் போக வேண்டும், ஆகவே..." என்றான் போர்யா.

"சரி, போயேன். யார் உன்னைப் பிடித்துக் கொண்டுருக்கிறார்கள்?"

லோவா, திறவுகோள் தொளை வழியாக உள்ளே பார்த்து, "ராயா, நீ இதைப் புரிந்துகொள்ள வேண்டும்! போர்யாவுக்கு ஏதோ முக்கியக் காரியம் இருக்கிறது" என வற்புறுத்திச் சொன்னான்.

"கறிவடைகளும் கூட முக்கியமே. வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தால் அப்பா என்ன சாப்பிடுவாராம்?

ஏழாவது வகுப்பு மாணவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

"சே, என்ன கேலிக் கூத்து!" என லோவா மெதுவாகக் கூறினான்.

"எது கேலிக் கூத்தோ?" என அவனைப் போலவே தணிந்த குரலில் போர்யா கேட்டான்.

"எதற்காக இத்தனை தடபுடல் செய்திருக்க வேண்டும்? அப்போதே மாமிசம் அரைத்துக் கொடுத்திருந்தால் என்ன குறைந்துவிடும்?"

போர்யா நீண்ட நேரம் கட்டை விரல் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான். பின்பு தாழ்ப்பாளைத் திறந்துவிட்டு, "சரி, ராயா! வெளியே வா! மாமிசம் அரைப்போம்" என்றான்.

"இல்லை, முதலில் மாமிசத்தை அரைத்து, எனக்குக் காட்டு. பேஸின்மீது ஏறி அதைப் பார்க்கிறேன். "

குளிக்கும் அறையின் சுவரில் உயரமான இடத்தில் ஜன்னல் இருந்தது. ராயாவை உடனே வெளியில் வரும்படியும் இல்லாவிடில் அவளால் சீக்கித்தில் பொத்தான்களைத் தைக்க முடியாது என்றும் நண்பர்கள் நயமாகக் கெஞ்சினர். ஆனால் அவர்கள் முயற்சி பலிக்கவவில்லை. ராயாவோ ஒரே பிடிவாதமாய் இருந்தாள். வட்டார வரலாற்றுக் கழகத்தின் செல்வாகக்குடைய உறுப்பினர்கள் இருவரும் வேறு வழியின்றி அவள் சொல்லுக்கு உடன்பட்டனர். மாமிசம் அரைக்கும் மெஷின் பழுதுபட்டுருந்தது. அதைச் சுற்ற மிகக் கஷ்டமாக இருந்த போதிலும் போர்யா சுற்றிய வேகத்தில் இரண்டு பவுண்டு மாமிசம் நொடிப்போதில் அரைத்துத் தீர்ந்துவிட்டது. போர்யா வேர்த்து விறுவிறுக்க, முன் போலவே கடுமையான குரலில், "இந்தா மாமிசம். போதும். வீண் புரளி செய்யாமல் வெளியே வா!" என்று சொன்னான்.

குளிக்கும் அறையில் சத்தம் கேட்டது. ராயா பேஸின் மேல் ஏறினாள். ஜன்னல் வழியாகத் தலை தெரிந்தது.

"ஓஹோ, அரைத்தாகிவிட்டதா? இதற்காக இவ்வளவு தகறாறு செய்திருக்க வேண்டுமா? சொல்லு!" என்றாள்.

"அம்மா, தாயே, போதும் சளசளப்பு. வெளியே வா!"

ஆனால் ராயா வெளியில் வருவதாக இல்லை.

"அப்பனே, அவசரப்படாதே. கொஞ்சம் பொறு. நீ பண்ணிய ரகளையில் எனக்கு நிறைய நேரம் வீணாகிவிட்டது. மாடியில் காயப் போட்டிருக்கும் துணிகளை நான் எடுத்து வரவில்லை. அவற்றை எடுத்துக்கொண்டு வா."
போர்யாவுக்குத் தட்டு மாமிசத்தையும் கீழே கடாசிவிடலாம் போல எரிச்சல் வந்தது.

"ராயா, வீணாக வம்பு செய்யாதே" என்றான் லோவா.

"ராயா, என்னை உனக்குத் தெரியாதா? என்னிடத்தில் காட்டாதே இந்த எகத்தாளமெல்லாம்."

"நானொன்றும் எகத்தாளம் செய்யவில்லை. நானாகத் துணிகளை எடுத்து வர, மாடிக்கு நான்கு நடை போக வேண்டியிருக்கும்; நீங்கள் இருவரும் ஒரே தடவையில் எடுத்து வர முடியும். எனக்குச் சாப்பாடு வேறு தயார் செய்ய வேண்டியிருக்கிறது."

எது எப்படிப் போனாலும் போகிறதென்று போட்டுவிட்டு அந்தப் பெண்ணுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று போர்யாவுக்குக் கை ஊறியது. ஆனால் அந்த ஆசையை அடக்கிக்கொண்டான். சில பொத்தான்களுக்காகவும் முரண்டுக்காரத் தங்கைக்காகவும் பேராசிரியரைப் பார்க்காமலும் கூட்டத்திற்குப் போகாமலும் இருப்பது அசட்டுத் தனமல்லவா என நினைத்தான்.

ஆகக் கடைசியில், லோவாவும் அவனும் மாடிக்குப் போய், துணிகளைக் கொண்டுவந்து, ஜன்னல் வழியாக ராயாவுக்குக் காட்டினார்கள்.

ராயா பேசினிலிருந்து குதித்த சத்தம் அவர்கள் காதில் விழுந்தது.

"பார்த்துக்கொண்டே இரு" என்று போர்யா நண்பர்களிடம் ரகசியமாகச் சொன்னான். பொத்தான்களைத் தைத்தாளோ இல்லையோ அவள் காதுகளைப் பிய்த்துவிடுகிறேன்!"

குளிக்கும் அறைக்கதவை நோக்கியபடி, "சரி, ராயா, வாயேன்" என உரக்கச் சொன்னான்.

"முடிவாக இன்னும் ஒன்று. ராயா குளிக்கும் அறையிலிருந்து வெளியில் வந்தபின், அவளை ஒன்றும் செய்யமாட்டோம் என்று நீங்கள் இருவரும் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்" என்றாள் ராயா அழுத்தமாக.

மற்ற எல்லாவற்றையும்விட இதுதான் அவர்களுக்குக் கடினமாக இருந்தது. மூக்கால் அழுதுகொண்டே சத்தியம் செய்து கொடுத்தார்கள்.

தாழ்ப்பாளைத் திறக்கும் சத்தம் கேட்டது; கதவு திறந்தது. வட்டார வரலாற்று மாணவர்களைக் கடந்து ராயா விரைந்து சென்றாள்.

பதினைந்து நிமிடங்களுக்குப்பிறகு, மாணவர்கள் வீட்டைவிட்டுப் புறப்பட்டனர். பள்ளிக்கூடம் போகும் வரையில் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. வட்டார வரலாற்றுக் கழகக் கூட்டம் ஆரவாரமாக நடந்தது; ஆனால் அவர்கள் இருவரும் ஒரு வார்த்தையும் பேசாமல் மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.



இடம்பெற்ற நூல்- நீச்சல் பயிற்சி
மொழிபெயர்ப்பாளர்- சு. ந. சொக்கலிங்கம்பதிப்பாசிரியர்- பூ. சோமசுந்தரம்ஓவியர்கள்- ஆ. ஏலிசேயிவா, எம். ஸ்கோபிலிவா
தமிழில் முதல் பதிப்பு- 1960முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ


(சொற்களைப் பிரித்து- சேர்த்து எழுதும் முறை தற்கால நடைமுறைக்கு மாறுபட்டிருப்பினும் அப்படியே விடப்பட்டுள்ளது.)


விரைவில் - * நீச்சல் பயிற்சி *

7 comments:

Anonymous said...

Great attempt! Took me back to my childhood! Do you have a collection of these books? Are these still available, eventhough that the Soviet Union is no more?

Dharani

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப நல்லாருக்கு...

Anonymous said...

வணக்கம் நீச்சல் பயிற்சி புத்தகம் கிடைக்குமா? என்னிடம் இருந்ததை ஒரு தறுதலை நண்பன் வாங்கிச் சென்று தொலைத்து விட்டான். இருந்தால் தயை கூர்ந்து உங்களது தளத்தில் கிடைக்குமிடத்தை தெரியப்படுத்தி உதவுங்கள்.

மிக்க நன்றி,
அன்புடன்,
சங்கரன்

someone's happiness is someone else's sacrifice said...

neechal payirtchi, naan padikkum podhu enakku 10 vayasu. I still remember all the stories and I used to read, re-read again & again. Thanks for publishing. I feel soviet had the best children literature. Unga blog-la niraiya ethir parkiren. Mikka nandri - bharathi.

(i don't know how to type in tamil fonts)

Anonymous said...

I read 'neechal payirchi' when I was in primary school and missed as usual. It has a short story about how a few kids learn swimming, a story about school camp, and a story about skating in the mountain with dogs.. Is it the same book? Thanks for letting me know the publications.
p.s: I happen to visit ur page through the comments that you have given on csk's translation.

Anonymous said...

//* நீச்சல் பயிற்சி *//

நீச்சல் பயிற்சி கதையை அடுத்த இடுவதாக கூறியுள்ளீர்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்

மோகன்

சரவணன் said...

நன்றி மோகன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது!

நீச்சல் பயிற்சி தட்டச்சிடப் பட்டு, குறுந்தகட்டிலேயே வெகு காலமாகத் தூங்குகிறது! பிழை திருத்தி வலை ஏற்ற வேண்டியதுதான். கடைசி சில பதிவுகளுக்குக் கமெண்ட் கிடைக்காததால் சற்று ஆர்வம் குறைந்து கிடப்பில் போட்டுவிட்டேன் :-) கட்டாயம் விரைவில் நீச்சல் பயிற்சி வலையில் இடம்பெறும். நான் தற்சமயம் வெளியூரில் இருப்பதால் ஜூன் முதல் வாரத்தில் எதிர் பாருங்கள்!