Thursday 30 July 2009

குறும்பன் அத்தியாயம் 4: இரவுக் கூட்டாளிகள்

கிழவி யக்ஷீ கிஸின் கூடாரத்தை நாங்கள் அதிகச் சிரமம் இன்றிக் கண்டுபிடித்துவிட்டோம். ஸகார்லிக் ஆற்றின் இடது கரையில், கிட்டத்திலேயே இருந்தது அது. கூடாரத்தைச் சுற்றிலும் தரை துப்புரவாகப் பெருக்கி மெழுகப்பட்டிருந்தது. பக்கத்தில் விசாலமான மண் திண்ணைமேல் முரட்டுக் கம்பளம் விரித்திருந்தது. கூடாரத்தின் அருகில் தாழ்ந்த அடுப்பு அமைந்திருந்தது. மூடியற்ற கொப்பரை அதன்மேல் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே எண்ணெய் எடுக்கும் பெரிய மரத்தொட்டி இருந்தது. சற்று தூரத்தில், கரடிவேட்டைச் சூலங்கள் இரண்டு தரையில் நாட்டப்பட்டு அவற்றில் ஒரு கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. கயிற்றில் பிரம்பு உறிகளில் தொங்கின மூன்று, நான்கு மண் கிண்ணங்களும்—பாலும் பாலாடையும் நிறைந்தவை போலும்—இரண்டு சுரைக் குடுக்கைகளும்—இவற்றில் தயிர் வைத்திருக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு கன்றுக்குட்டி, பல நிறக் கிழக் காவல் நாய் பாதி பட்டுப்போன வில்லோ மரத்துடன் கட்டப்பட்டிருந்தது. குத்திருமலை ஒத்த அசட்டையான குலைப்புடன் அது எங்களை வரவேற்றது. இந்தக் குலைப்பைக் கேட்டதும் கிவி கூடாரத்துக்கு உள்ளிருந்து வெளியே வந்தாள். அவளுக்கு அறுபது வயது இருக்கும். வாரப்படாத நரையோடிய கேசத்தின்மேல் நெற்றியை மூடியபடி சிறு வண்ணத் திலைக்குட்டை கட்டியிருந்தாள். இடுப்பில் பழைய கம்பளி லேஞ்சியை வார்போலக் கட்டிக்கொண்டிருந்தாள். பின்னல் நுனிகளில் ஐந்தாறு வெள்ளி ரூபிள்களும் அரை ரூபிள்களும் அலங்காரமாகத் தொங்கின.

“ஸலாம் ஷேஷே” என்றேன் நான் (“ஷேஷே” என்றால் கஸாஃகிய மொழியில் “தாய்”).

பதில் முகமன் கூறுவதற்குமுன் அவள் நாயைத் தெளிவான ஒலிப்பற்ற எவையோ சொற்களால் “ஷப்த்ச் அப்த்ரஸ்குர்” என்று அதட்டினாள். நாய் குலைப்பை நிறுத்தியது, கிழவி திண்ணையைக் காட்டினாள்.

“வாருங்கள் இளைஞர்களே, இப்படி உட்காருங்கள்” என்றாள்.

நான் கண் சாடை காட்டவும் அமன் எங்கள் மூட்டையைக் கிழவியிடம் நீட்டினான்.

“சொல்லுங்கள் தம்பிகளா. சாராமம் குடிக்கப் போகிறீர்களா, அல்லுத இறைச்சிக்கறியும் தயாரிக்கவா?” என்று கேட்டள்.

“வேண்டாம் ஷேஷே, தாங்கள் குடிக்கவும் போவதில்லை, இறைச்சிக்கறியும் தயாரிக்க வேண்டாம். முட்டைப் பொரியல் செய்து தாருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் இரவுப் போதை இங்கேயே கழிக்கிறோம்.”

“நல்லது. ஆண்டவன் உலகம் விசாலமானது, வானத்திலும் தரையிலும், இது கோடைகாலம். எங்கே இஷ்டமோ படுத்து உறங்குங்கள். இரண்ட பேருக்குமாக ஒரு தன்கா கொடுங்கள்.” என்றாள் கிழவி.

“ஐயோ ஷேஷே, எங்களிடம் இருப்பது எல்லாம் அரைத் தன்கா தானே!” என்றேன்.

“உஸ்பெக் பையன்கள் படு தந்திரக்காரர்கள்! போனால் போகிறது, இராத் தங்குங்கள், இன்று சந்தை நாள், வாடிக்கைக்காரர்கள் வருவார்கள், பணக்காரப் பிள்ளைகள். ஒரே கொம்மாளமாக இருக்கும்.”

அடுப்பு மூட்டி, வராட்டிகளைப் போட்டாள். நானும் அமனும் மேலே எங்கே போவது என்று ஆலோசனை செய்தவாறு உட்கார்ந்திருந்தோம். விரைவில் கிழவி முட்டைப் பொரியலையும் புதிதாக மாவு பிசைந்து கட்ட இரண்டு ரொட்டிகளையும் மண் தட்டில் வைத்து எடுத்து வந்தாள். நாங்கள் ஆளுக்கு ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் கொண்டு சாப்பிடலானோம். முட்டைப் பொரியல் அபார ருசியாய் இருந்தது. அமன் ரொட்டித் துண்டுகளால் தட்டைத் துடைத்துத் தின்னத் தொடங்கினான். அதற்குள், தங்கள் இடிச் சிரிப்பாலும் கூச்சல்களாலும் சுற்றுப்புறத்தை அதிரச் செய்தவாறு கூடாரத்திற்கு வந்தார்கள் ஐந்து ஆட்கள். முன்னே நடந்தான் நெடிய இளைஞன். அவனது இடது தோள்மேல் இருந்தது ஆட்டின் பாதி உடல். வலது கையில் சிறு மூட்டை, ரொட்டிகளும் வெங்காயமும் காரட்டும் அதில் இருந்தன போலும். முஸ்லிம் மதப்பள்ளி மாணவன் போலத் தோன்றிய மற்றொருவன் ஆட்டுத்தாடியும் அழுக்குத் தலைப்பாகையுமாக அடுத்தாற்போல் வந்தான். மரியாதையும் நயப்பாங்கும் மெலிந்த முகத்தில் ததும்ப, ஜாக்கிரதையாக அடிவைத்து நடந்தான் அவன். இரண்டு லேசான மேலங்கிக்ள் அணிந்திருந்தான். ஒன்று குட்டையால் இடுப்பைச்சுற்றி உள்ளே இறுக்கப்பட்டிருந்தது. மற்றது அதற்கு மேல் அணியப்பட்டிருந்தது. இவர்கள் பின்னே... பின்னே வந்தான், ஜேபடித்திருடன் ஸுல்தான்! அவன் காற்சட்டைகள் மடக்கிவிடப்பட்டிருந்தன. இடுப்புக் குட்டை தும்பு போல முறுக்கப்பட்டிருந்தது. கோடுபோட்ட மேலங்கியின் கழுத்துப்பட்டை திறந்திருந்தது. அழுக்குக் குல்லாய் விளிம்பு மட்க்கப்பட்டிருந்தது... அவன் முகத்தில் இருந்த துடுக்கான, வெற்றிச் செருக்கு ததும்பிய தோற்றம் அவனை அறியாதவனுக்குக்கூட வயிற்றைக் கலக்குவதாக இருந்தது. அவனைக் கண்டதுமே எஞ்சிய இருவரை நான் மற்ந்தே போனேன். ஏதோ ஒரு வகையில் ஸுல்தானை ஒத்திருந்தார்கள் அவர்கள். அப்புறம் அவர்களைக் கவனமாகப் பார்த்தபோது ஒருவனுக்குக் கண்ணில் பூ விழுந்திருந்ததையும் மற்றவனுக்கு ஒருகை இரண்டாவதை விட நீளமாயிருந்ததால் வலது தோள் இடது தோளைக்காட்டிலும் உயர்ந்திருந்ததையும் கண்டேன்...

வந்திருப்பவர்கள் யார் என்று கண்டுகொண்டதும் ரொட்டித்துண்டு அமனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது போலும். கண்கள் பிதுங்கி விடும் போல என்னை நோக்கி பரக்க விழித்தான். திண்ணையை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்று நான் சைகையால் உணர்த்தினேன். பரட்டென்று அதிலிருந்து பாய்ந்துவிட்டான் அமன். நாங்கள் ஆற்றின் கரையோரத்துக்கு நகர்ந்து, காவல் நாய் கட்டியிருந்த வில்லோ மரத்தடியில் பதுங்கினோம். அந்த நோஞ்சல் நாயோ கற்றும் நடப்பதைச் சற்றும் கவனிக்காமல் அசட்டையாய் இருந்தது.

“வணக்கம், ஷேஷே! இன்று ராத்திரி நாங்கள் உன் விருந்தாளிகள்! கேட்டாயா?” என்று முழங்கினான் ஸுல்தான்.

பின்பு சுற்றிலும் கண்ணோட்டியவன் எங்களைப் பார்த்துவிட்டான்.

“ஆகா. அட போக்கிரிகளா! நீங்களும் இங்கே இருக்கிறீர்களா? இங்கே என்ன செய்கிறீர்கள்? எங்கே, இப்படி வாருங்கள்!” என்றான்.

திண்ணைக்குத் திரும்புவது தவிர நாங்கள் வேறு எதுவும் செய்வதற்கில்லை. இதற்குள் ஸுல்தான் தன் நண்பர்களுடன் அங்கே வசதியாக உட்கார்ந்துவிட்டான். கிழவி அழுக்கு மேஜைத் துணியில் ரொட்டிகளைச் சுருட்டி எடுத்து வந்து திண்ணை நடுவில் வைத்தாள். பிறகு பெரிய மரக் கோப்பையை எடுத்துக் கொண்டு, “அரிசிச் சாராயம் சாப்பிடுகிறீர்களா, சாமைச் சாராயமா?” என்று ஸுல்தானிடம் கேட்டாள்.

“எது நல்லதோ அதையே கொடுஙகள்!”

கிழவி கூடாரத்துக்குள் போனாள்.

“கால் நடை சந்தையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று ஸுல்தான் எங்களிடம் கேட்டான்.

அமன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சும்மா தான் இப்படி, ஸுல்தான்–அகா.... சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.” என்றேன் நான்.

“அப்படியா! சரியான இடந்தான் சுற்றிப் பார்ப்பதற்கு என்று கண்களைச் சுரித்தான். உங்களை என்னிடம் வேலை பழக வைத்துக் கொள்ளலாமோ, ஊம்? நீங்கள் ஒருவேலை, இதற்கு ஏற்றவர்களாய் இருக்கலாம்! இதோ இவன் இருக்கிறானே” என்று மோவாயால் அமனைச் சுட்டி, “இவன் கூரை வழியே வீட்டுக்குள் ஏறிக்குதிக்கத்தான் லாயக்கு. ரொம்பப் பாங்கற்றவன், ஜேபடி வேலைக்குச் சரிப்பட மாட்டான்!” என்றான்.

வாய்விட்டுச் சிரித்தான். அவனுடைய சிரிப்பைப் பயன்படுத்திக் கொண்டு நான் பேச்சை மாற்ற முயன்றேன்.

“ஸுல்தான்-அகா, அந்தச் சச்சரவு எப்படி முடிந்தது? என்று கேட்டேன்.”

“ஹோ-ஹோ, உனக்குத் தெரியாதா என்ன? வேடிக்கையான கதை, இல்லையா?” அவன் தன் நண்பர்களைப் பார்த்தான். அவ்ர்கள் “ஆமாம்” என்று தலையாட்டினார்கள். “இன்று காலை நாங்கள் சாயாக்கடையில் உட்கார்ந்திருந்தோம். என் திருட்டுப் பண்த்தைச் சுத்தப்படுத்த, அதாவது சொந்தக்காரனின் சம்மதத்துடன் எடுத்துக கொள்ள என்னால் முடியும் என்று வீரியம் பேசினேன், புரிந்ததா பையா? அவர்கள் பந்தயம் வைத்தார்கள். தோற்பவன் கூட்டாளிகள் எல்லாருக்கும் தன்செலவில் சாராயம் வாங்கித் தர வேண்டும் என்று தீர்மானித்தோம். ஆயிற்றா. நான் கால்நடைச் சந்தைக்குப் போனேன். பார்க்கிறேனோ, ஒரு அசமந்தன் போய்க் கொண்டிருந்தான். அவன் பணப்பையை உருவினேன். பணத்தை எண்ணிப் பார்த்தேன். என்னிடமிருந்து இரண்டு தன்காக்களையும் வெள்ளி மோதிரத்தையும் அதில் போட்டேன். பணப்பையை மறுபடி அவன் சட்டைப்பைக்குள் செருகிவிட்டேன். அப்புறம் நான் ஆடிய நடாகத்தைத்தான் நீ பார்த்தாயே! போலீஸ்காரர்கள் எங்களை பஞ்சாயத்துத் தலைவர் முன் இட்டுவந்து பணத்தை மறுபடி எண்ணினார்கள். நான் சொன்னபடியே இருந்தத. ஆகவே பணப்பை என்னிடம் கொடுக்கப்பட்டது. சன்மானப் பணமாக ஒன்றரைத் தன்கா என்னிடம் வாங்கிக் கொண்டார்கள். அவ்வளவுதான். சாமர்த்தியமான வேலை, இல்லையா?”

“சாமர்த்தியமான வேலைதான்” என்று சிரமத்துடன் முனகினேன். “அந்த ஆள்.... அசமந்தன் என்ன ஆனான்?” என்று கேட்டேன்.

“ஹ-ஹா, சிறையில் தள்ளிவிட்டார்கள் அவனை, வேறு என்ன? கிடக்கிறது, கவலைப்படாதே. நான் அவன்மேல் இரக்கம் கொண்டு போலீஸ்காரனுக்கு ஒரு ரூபிள் லஞ்சம் கொடுத்து இந்த மடையனை விடுவித்தேன். எனக்கு அவன்மேல் காட்டம் எதுவும் இல்லை என்று சொன்னேன். அவன் எப்படிப் பூரித்துப் போனான் என்று நீ பார்த்தால் சொல்லுவாய், ஹ-ஹ-ஹா... என்னைத் தழுவிக் கொண்டான்... முத்தமிட்டான்... ஹெ-ஹே...”

நண்பர் குழாம் முழுவதும் கடகட வென்று சிரித்து மகிழ்ந்து போயிற்று.

“அப்படிச் சொல்லு” என்று என்னை ஓரக் கண்ணால் பார்த்துப்பல் இளித்தான் ஸுல்தான்.

கிழவி இறைச்சியை நறுக்கி வேகப் போட்டாள். அடுப்பிலிருந்து கிளம்பிய இளநீலப்புகை எடையற்ற போர்வை போல எங்களைப் போர்த்தது. சூரியன் அஸ்தமிக்கலாயிற்று. மேற்கே கடைசி மேகங்கள் நெருப்பாய்த் தகதகத்தன. அருகே மெல்லொலி செய்தது ஆறு, இந்தக் கும்பல் மட்டும் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! அவர்கள் எங்கள மறந்துவிட்டவர்கள் போலத் தங்களுக்குள் ஏதோ அரட்டைய்டித்துக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஸுல்தான் முழங்கையை ஊன்றியவாறு பாதி படுத்தநிலையில் இருந்தான். நெட்டையன் திண்ணை அருகே நின்று கொண்டிருந்தான். முல்லா போல் இருந்தவன் திண்ணைமேல் மண்டியிட்டு அமர்ந்து கைகளை மார்பின்மேல் சேர்த்து வைத்துக் கொண்டு, ஸுல்தான் நெட்டையனிடம் பேசுவதை மிகுந்த சிரத்தையுள்ளவன் போன்ற தோற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். மற்ற இருவரும் எதிரெதிரே சப்பணம் கொட்டி உட்கார்ந்து தீப்பெட்டியை எறிந்து பிடித்துப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதற்குள் கிழவி சாராயம் நிறைந்த இரண்டு கரைக் குடுக்கைகளையும் வர்ணம் பூசிய சில மரக் கோப்பைகளையும் கொண்டுவந்து வைத்தாள். பூஸா என்னும் இவ்வகைச் சாராயம் சூடாக்கிக் குடிக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் கிழவி கொண்டுவந்த சாராயம் பகல் முழுவதும் வெயிலில் வைத்திருந்த்தால் தானே சூடேறியிருந்தது. ஆகவே மறுபடி சூடாக்கத் தேவை இருக்கவில்லை. தவிர சாராயத்தைக் குவளையில் ஊற்றுவதாற்கும் தனிப்பட்ட விதிகள் உண்டு: ஊற்றும்போது அது கட்டாயமாக வடிகட்டப்பட வேண்டும். நெட்டையன் தன் இடுப்புக் குட்டையை உடனே அவிழ்த்துப் பிரித்து உதறி, குவளை மேல் பரப்பி இறுக்கிக்கொண்டு சாராயத்தை ஊற்றினான். பின்பு வடிகட்டிய சாராயத்தை ருசி பார்த்துவிட்டுக் குவளையை ஸுல்தானிடம் நீட்டினான்.

எல்லோருக்கும் மற்ற இருவருக்கும் குவளைகளில் ஊற்றிக் கொடுத்துவிட்டு ஸுல்தானைக் கேள்விக் குறியுடன் பார்த்தான்.

“பையன்களை இப்போதைக்கு விட்டுவை. முல்லாவுக்கு ஊற்றிக்கொடு!” என்றான் ஸுல்தான்.

முல்லா கைகை மறித்தவாறு நளினமாக மறுத்தான்,

“என்ன நீங்கள், என்ன நீங்கள்! குடியுங்கள் நீங்களே. நாங்கள் குடிப்பதில்லை, ஆண்டவன் கட்டளை என்ன என்றால்....”

“இந்தா, கட்டிவை உன் ஆண்டவன் கட்டளையை. எப்போது முதல் நீ குடிப்பதில்லை, ஊம்? வேசி வீட்டில் எங்கள் குவளைகளில் மிச்சம் இருந்ததை எல்லாம் குடித்து வெறிகொள்ளவில்லையா நீ?” என்ற அச்சுறுத்தும் குரலில் சொன்னான் ஸுல்தான்.

“இல்லை, குடிப்பது உண்டுதான், ஆனால்.... அதாவது.... விஷயம் என்றால்.... நாங்கள் சபதம் செய்திருக்கிறோம்.”

“ச-பதமா? உன் சபதத்துக்கு ஏதேனும் மதிப்பு உண்டா? நீ யார் என்பதை எண்ணிப் பார்! ஸாலார் பக்கத்தில் நடந்த தானியச் சந்தையில் நான் மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால் கூட்டம் அங்கேயே உன்னைத் தீர்த்துக் கட்டியீருக்குமே! இல்லை, நீ யார் என்பதை எண்ணிப் பார்த்தாயா? திருட்டுக்கு உடந்தையாய் இருக்கக்வட லாயக்கில்லாதவன் ஆயிற்றே நீ! திருடன் கிழவன் ஆனால் மசூதித் தொண்டன் ஆகிவிடுவான். வேசி கிழவி ஆனால் பேய்களை மந்திரம் போட்டு விரட்டத் தொடங்கிவிடுவான் என்று சொல்வார்களே. அது மெய்தான். ஆளைப் பாரப்பா, சபதம் செய்தானாம்! ஒருவேளை இந்தக் காரணத்தால் நீ மௌல்வி ஆகிவிட்டாயோ, சீடர்களைத் தேடத் கிளம்பினாயோ? அட சே, குடியடா!”

முல்லா நடுங்கம் கையால் குவளையை எடுத்துக் கொண்டான்.

“குடித்துவிட்டு மதுப்பாட்டு பாடு, ஊம், ஆரம்பி, தீர்க்கதரிசியின் வழித் தோன்றலே!”

முல்லா முகத்தைச் சுளித்துக் கொண்டு சாராயத்தைப் பருகினான்.

எங்களைக் குடிக்கும்படி யாரும் விசேஷமாக் வற்புறுத்தவில்லை.

பூசா நிறைந்த சுரைக் குடுக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டவரப்பட்டன. அரைகுறையாக வெந்த இறைச்சிக் குழம்பையும் கிழவி கொண்டு வந்து வைத்தாள். வெறியாட்டம் சூடுபிடித்துவிட்டது. முலலா தலைப்பாகையைப் பிரித்து இடுப்பில் வரிந்து க்ட்டிக் கொண்டான். சாராயம் வேண்டாம் என்று மறுக்காதது மட்டும அல்ல, தானே கேட்டுக் கேட்டு வாங்கிக் குடிக்கலானான் அவன். மற்றவர்கள் கோரியபடி ஏதோ அர்த்தமற்ற பாட்டைக் குடிமயக்கக் குரலில் பாட வேறு செய்தான்:

“ஓடிற்று மலையடியில் என் குதிரை,
சாடிற்று, பாய்ந்தது சாகும்வரை.
கண்டுவிட்டேன் பல வீரர்கள், களி
கொண்டிசைப்பேன், ஓடு, என் பரியே!
ஆ. மதுப்பாட்டு, இசைப்பேன் மதுப்பாட்டு!...”


கூட்டாளிகளுக்கு வர வர வெறி ஏறிக் கொண்டு போயிற்று. எல்லோரும் ஒரு நேரத்தில் பேசினார்கள். மற்றவர்கள் பேச்சை ஒருவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் மெள்ள எழுந்து திண்ணையிலிருந்து இறங்கி அமனைச் சைகை காட்டி அழைத்தேன். இதை ஒருவரும் கவனிக்கவில்லை. கிழவியிடம் சிறு கம்பள விரிப்பும் தலையணையும் கேட்டுப் பெற்றுக் கொண்டு கூடாரத்துக்குப் பின்னே படுத்துக் கொண்டோம். களைத்துச் சோர்ந்து போயிருந்தோம் ஆயினும் எங்களால் வெகு நேரம்வரை உறங்க முடியவில்லை. திண்ணைமேல் குடிகாரர்களின் ஆரவாரம் வர வர அதிகரித்தது. வேறொரு கும்பலும் இந்தக் கும்பலுடன் சேர்ந்து கொண்டது. ஒரு சமயம் அவர்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள், மறு சமயம் ஒருவரை ஒருவர் கூச்சலிட்டுத் திட்டிக் கொண்டு சிரித்தார்கள். சமீபத்தில் நாங்கள் பார்த்த கால் நடைச் சந்தையை நினைப்பூட்டியது அந்தக் கூச்சல். அப்புறம், பகலில் சந்தையில் நடந்தது போலவே, சச்சரவு தொடங்கிவிட்டது. அவர்கள் எவனையோ பிடித்து அடித்தார்கள். அவன் உதவி உதவி என்று கத்தினான், கெஞ்சினான், அழுதான்:

“ஆண்டவன் சத்தியம், என்னிடம் இருப்பது எல்லாம் இவ்வளவுதான், இன்னும் பணம் என்னிடம் இருந்தால் பெரிய இமாம் என்னைத் தண்டிக்கட்டும்!”

“காற்சட்டை இடுப்பில் தேடிப் பாரடா கீழ்மகனே!”

அவர்கள் முல்லாவைக் கொள்ளையடித்தார்கள். நாங்கள் திகிலால் நடுநடுங்கியவாறு கூடாரத்தின் பின்னே படுத்திருந்தோம். நாங்கள் திகிலால் நடு நடுங்கியவாறு கூடாரத்தின் பின்னே படுத்திருந்தோம். எல்லாவற்றுக்கும் பழகிவிட்ட கிழவியோ, ஒன்றுமே நடக்காதது போல விருந்தாளிக்ளுக்கு இடையே நடமாடினாள். பாத்திரங்களை அப்புறப்படுத்தினாள், சாராயம் கொண்டு கொடுத்தாள்.

நாங்கள் எப்போது உறங்கினோமோ அறியேன். விலாவில் யாரோ இடிக்கவே திடுக்கிட்டு விழித்தேன். இன்னும் இருட்டாக இருந்தது, ஆனால் வான விளிம்பு லேசாக வெளிறத் தொடங்கியது. என் அருகே நின்று கொண்டிருந்தான் முல்லா. அவன் தலையில் மறுபடியும் தலைப்பாகை இலகியது. அது அவசர அவசரமாகக் கட்டிக் கொள்ளப்பட்டிருந்தது. தலைக்கு நாளைவிட இன்னும் அழுக்காகி இருந்தது. கன்னத்தில் பலத்த அடி தழும்பிட்டிருந்தது. ஒரு கண் தணல்போலச் சிவந்திருந்தது.

“எழுந்திரு மகனே, எழுந்திரு! எழுந்திரு! அவர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் போதே நாம் தப்பி ஓடிவிட வேண்டும். என்னை எப்படி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். பார்த்தாயா? தவிர என் பணத்தை எல்லாம் சுரண்டிப் பரித்துக் கொண்டு விட்டார்கள். மூக்குப் பொடி வாங்வதற்கக் கூடக் காசு மிச்சம் வைக்கவில்லை. உங்களுக்கும் இதே விபத்து நேர்த்துவிடக்கூடாது. எழுந்திரு மகனே, சீக்கிரம்...” —இப்படி முணுமுணுத்தவன், முகம் சுளித்தான். “ஐயோ, மண்டையிடி பொறுக்க முடியவில்லை. பழுத்த தர்பூஸ் பழம்போல அதிர்கிறது” என்று அங்கலாய்ந்தான்.

நான் அமனை எழுப்பினேன். நாங்கள் துள்ளி எழுந்து ஆற்று நீரில் முகங்கழுவி மேலங்கித் தலைப்புக்களால் தடைத்துக கொண்டோம்.

“ஐயா எங்கே போக விருமபுகிறீர்கள்?” என்று முல்லாவின் காதோடு கேட்டேன்.

“ஆ, பரம்பொருளின் உறைவிடம் மாட்சி மிக்கது, உலகத்தில் இடம் நிறைய. எங்கே திரும்பினாலும் புனித மெக்காவுக்கே போய்ச் சேர்வோம்... ஆனாலும்... ஆனாலும்... மேலே போவோம், கினகிராக்-தெப்பே மலைக்கு.”

நாங்கள் கூடாரத்திற்கு அப்பால் போய்விட்டோம், அதற்குள் கிழவி யக்ஷீகிஸ் எங்கள் முன் தோன்றினாள்.

“அடே கண்களே, எங்கே நழுவப் பார்க்கிறீர்கள்? காசைக் கொடுங்கள் முன்னே!”

அமன் ஒரு தன்கா எடுத்துக் கொடுத்தான்.

“இந்தா ஷேஷே. அரைத் தன்கா இராத் தங்கியதற்கு, பாக்கி ரொட்டிக்கும் முட்டைப் பொரியலுக்கான எண்ணெய்க்கும். சரிதானா?”

அவள் முல்லாவைப் பார்த்தாள்.

“சரிதான், சரிதான்... இந்த ஊருக்கு வந்தால் இங்கே வாருங்கள், உபசரிக்கக் காத்திருக்கிறேன்” என்றாள்.

நாங்கள் நடையைக் கட்டினோம்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

No comments: