Thursday 30 July 2009

குறும்பன் அத்தியாயம் 3: சந்தை

நான் கால் போன திக்கில் நடந்தேன். கால்கள் அடிக்கடி இங்கும் அங்கும் போயின ஆதலால் மண் வீடுகளின் வழிகளில் நான் நெடு நேரம் சுற்றிச் சுற்றி வந்தேன். முடிவில் நகரிலிருந்து நேரே வெளிச் செல்லும் சாலையை அடைந்தேன். அதற்குள் இருட்டலாயிற்று. சாலையின் இரு மருங்கிலும் வளர்ந்திருந்த மரங்களின் நிழல்கள் ஒன்று கலந்தன. பகலில் அவை குளுமை தந்தன. இப்போதோ வெட்ட வெளியைக் காட்டிலும் மரங்களின் அடியில் அதிகப் புழுக்கமாய் இருந்தது. சாலை வெறுமை ஆயிற்று. நேரங்கடந்து எதிரெதிரே வந்த இரண்டு வண்டிகள் வசவுகளுடன் ஒன்றையொன்று விலகிச் சென்றன. யாரோ உழவன் நொண்டிக் கொண்டே அருகாகப் போனான். அவன் என்னை முந்திவிட்டான்—வீடு திரும்பும் அவசரம் போலும். நானும் இராத் தங்குவது பற்றி நினைக்க வேளை வந்துவிட்டது. அவ்வப்போது எவையேனும் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் சாலைவரை நீண்டிருக்கக் காணப்படும். அவற்றுக்குள் விருந்தோம்பல் இன்றிக் குலைக்கும் நாய்கள். வெட்ட வெளியிலேயே இரவைக் கழிக்கத் தீர்மானித்தேன். அங்கே உண்மையில் குளுமையாக இருந்தது. எனக்குச் சாப்பாடோ புறாக்களுக்கு இரையோ எடுத்து வரவில்லை என்பதை இப்போதுதான் நினைத்துக்கொண்டேன். காலைவரை பொறுத்திருக்க வேண்டும். அத்தையின் சூடான ரொட்டிகளையும் பாழாய்ப்போகிற பறவைகளுக்கு நான் ஊட்டிய தயிரையும்கூட வருத்தத்துடன் நினைவுகூர்ந்தேன். புறாக்களின் கூண்டை ஒரு புதருக்குள் நுழைத்தேன். பக்கத்திலேயே மேலங்கியை விரித்துப் படுத்தேன். விண்மீன்கள் பதித்த கரு வானம் எனக்கு நேர் மேலே பரந்திருந்தது. முதல் தடவையாக அது எனக்கு அவ்வளவு பெரிதாகத் தென்பட்டது. விண்மீன்களோ, எண்ணத் தொலையாதபடி அத்தனை நிறைய இருந்தன .அவற்றை எண்ண முயன்றவாறே உறங்கிப்போனேன்.

சூரியன் என்னை எழுப்பிற்று. அது அப்போதுதான் தொடுவானிலிருந்து கிளம்பி நேரே என் கண்களில் ஒளியைப் பாய்ச்சியது. படுக்கை கரடுமுரடாய் இருந்தபடியால் உடம்பு லேசாக வலித்தது. ஆனால் மூளை தெளிவாக, சுறு சுறுப்பாக இருந்தது. கசங்கிய மேலங்கியைப் போட்டுக்கொண்டு புறாக்கூண்டை எடுத்துக் கொண்டு மேலே வழி நடக்கலானேன்.

எவ்வளவு நேரம் இப்படி நடந்தேனோ தெரியாது, சாலைக்கு இடப் புறமும் வலப் புறமும் குடியிருப்பு வீடுகள் தென்படலாயின. அச்சாபாத் என்பது அந்தச் சிற்றூரின் பெயர் என அப்புறம் தெரிந்து கொண்டேன். நான் நின்று நிதானிப்பதற்குள் பல்வேறு வயதினரான அழுக்கடைந்த பையன்களின் கும்பல் ஒன்று எதிரே வரக் கண்டேன். அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு ஏற இறங்க நோட்டமிட்டபடி என்னைப் பற்றிக் கருத்துக்களைப்பரிமாறிக் கொள்ளத் தொடங்கினார்கள். இந்தக் கருத்துக்கள் நட்புறவில் வெவ்வேறு தரமானவை. எனது மேலங்கியைப் பற்றிய பாராட்டுரையிலிருந்து தொடங்கி, அழையா இடத்துக்கு நான் போகாமல் இருக்கும் பொருட்டு என்னை அடித்து நொறுக்க வேண்டும் என்னும் யோசனையில் முடிந்தன அவை. அவர்கள் ஓர் இருபது பெயர். சிலர் என்னைப் போல ஒன்றரை மடங்கு உயரம். மற்றவர்கள் என் இடுப்புவரை வந்தார்கள்—இந்த மாதிரி நான்கு பெயரை ஒரே அறையில் வீழ்த்தி விடலாம். இப்போதோ இதைப்பற்றி எண்ணவே முடியாதிருந்தது.

எதிர்பாரா விதமாக அவர்களிடமிருந்து வந்தது வியாபார யோசனை.

“புறாக்களை விலைக்கு கொடு” என்று கட்டைக் குரலில் சொன்னான் எல்லாரிலும் உயரமான பையன். அவன்தான் அவர்களுடைய தலைவன் போலும் அவன் போட்டிருந்த செம்பழுப்புக் குல்லாய் கிட்டத்தட்ட நடுவரை கிழிந்திருந்தது. எனவே அவன் தலை தூரப்பார்வைக்கு வெடித்த முலாம்பழம் போல் இருந்தது.

“முடியாது. இவை விற்பதற்காக இல்லை” என்று கூடியவரை கண்டிப்பாகச் சொன்னேன்.

“ஆ, அப்படியா, விற்பதற்காக இல்லையோ?” என்று அடித்தொண்டையில் முழங்கினன் செம்பழுப்புக் குல்லாய். என்னைப் பதம் பார்ப்பதற்கு இப்போது வேளை வந்துவிட்டது என்பதுபோல வைரத்துடன் ஒலித்தது அவன் குரல். கும்பல் இன்னும் நெருக்கமாக என்னைச் சூழ்ந்தது. செம்பழுப்புக் குல்லாய் சற்று யோசித்துவிட்டு, “அப்படியானால் மாற்றகக்கொடு!” என்றன்.

“எதற்கு?” என்று கேட்டேன். என் உயிரைக் கூடியவரை உயர்ந்த விலைக்கே கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.

உடனே அவர்கள் உரக்கச் சளசளக்கத் தொடங்கி அவரவர் கைகளில் இருந்தவற்றை என் முன்னே நீட்டினார்கள். விலைமதிப்புள்ள பொருள் எதுவும் என் கண்ணில் படவில்லை. என்றலும் புறாக்களிடமிருந்தோ நான் எப்படியும் பிரிய வேண்டியிருந்தது (அவர்கள் அவற்றை என்னிடமிருந்து வெறுமே பிடுங்கிக் கொள்வார்கள் என்று உறுதியாக எண்ணினேன்), ஆகவே ஒன்றுமில்லாததைவிட இவை மேலாக இருந்தன. நிமிட நேரத்திற்கெல்லாம் அவர்கள் புறாக்களுடன் போய்விட்டார்கள். நானோ கைகள் நிறையப் பொருட் குவியலுடன் நின்றேன். கிராதி விளிம்புகள் மூன்று, மரக் கிலுகிலுப்பை ஒன்று, விளையாட்டுத் தொட்டிகள் இரண்டு, ஓட்டைவிழுந்த தம்பட்டம் ஒன்று,—இதன் தோலும் விளிம்பும் எதனாலோ செந்நிறம் பூசப்பட்டிருந்தன—மர மண்வெட்டி, சவைப்பதற்கேற்ற கந்தகம் இரண்டு துண்டுகள் முதலியவை அவற்றில் இருந்தன. இந்தப் பண்டமாற்றில் ஏமாந்தவன் நானோ, அவர்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் இப்போது என் சுமை அநேக மடங்கு கனமாகிவிட்டது என்பது மட்டும் உண்மை. எல்லாவற்றையும் எப்படியோ ஒரு மூட்டையாகக் கட்டி முதுகின்மேல் போட்டுக் கொண்டு நான் மேலே நடந்து, வேறு எந்த நிகழ்ச்சிகளும் இன்றி அவ்வூரைக் கடந்து சென்றேன்.

ஊர்ப்புறத்தை ஒட்டியிருந்த மரங்கள் வெகு நேரத்துக்கு முன்பே பின் தங்கிவிட்டன. நாற்புறமும் விரிந்து பரந்திருந்தது நடு நடுவே திட்டுக்கள் கொண்ட வெளி. முட்புதர்கள் அதில் அடர்ந்திருந்தன. இங்கும் அங்கும் உவர் மண் மேடுகள் தென்பட்டன. என் கால்கள் புழுதியில் புதைந்தன. மேலேயோ, மதிய வெயில் பொசுக்கிற்று. பசியும் தாகமும் என்னை வாட்டி வதைத்தன. எது அதிகம் என்று எனக்கே தெரியவில்லை. தூரத்தில் தனி மரம் ஒன்று தென்பட்டது. நிழலைச் சீக்கிரம் அடைவதற்காக நான் முடிந்தவரை நடையை விரைவுபடுத்தினேன். மரத்தின் அருகே நான் நெருங்கிவிட்டபோது எதிர்ப்புறத்திலிருந்து அதே மரத்தை நோக்கி மண்வெட்டியும் தோளுமாக ஒர் உருவம் வரக் கண்டேன். அந்த உருவத்தில் ஏதோ எனக்கு அறிமுகமானதாகத் தோன்றியது. நாங்கள் இன்னும் கிட்டத்தில் வந்ததும்—என்ன ஆச்சரியம்!—அது என் நண்பன் அமன்பாய் என அடையாளம் தெரிந்து கொண்டேன். எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த அதே அமன்பாய். இவனுடைய தகப்பனார் துர்ஸீன்-பிச்சாக்சி தாமே தயாரித்த கத்திகளை விற்று வந்தார். நாங்கள் இருவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். வெக்கையையும் அலுப்பையும் மறந்து ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு ஒடினோம். அந்தப் பழைய ஜித் மரத்தின் அடியில் சந்தித்தோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமன்பாயை அவன் தகப்பனார் கிராமத்திலுள்ள உறவினர்களிடம் அனுப்பியிருந்தார்— அவனை நாட்கூலிவேலையில் அமர்த்தும்படி. இப்போது நாட்கூலி வேலை முடிந்துவிட்டது. அமன்பாய், சுமார் நான்கு மணங்கு எடையுள்ள மண்வெட்டியைத் தோளில் சுமந்தவாறு கால் நடையாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான். நான் வீட்டை விட்டு ஒடிய சங்கதி எதுவும் அவனுக்குத் தெரியாது. கிராதி விளிம்புகளைக் கண்டதும், நானும் வராட்டி தட்டிக் கூலி வேலை செய்ய அனுப்பப்பட்டிருப்பதாக நினைத்துவிட்டான். இருவரும் மரத்தடியில் உட்கார்தோம். நான் என் துன்பக் கதையை அவனுக்குக் கூறினேன்.

செய்திகள் பரிமாறிக் கொண்டபின், பட்டினியாய் இருப்பதை இருவரும் நினைவுபடுத்திக் கொண்டோம். சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் அண்ணாந்து பார்த்தோம். ஆனால் அந்தோ, மரத்தில் பழங்களே இல்லை.

“இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்க்கும் வகை போலிருக்கிறது. அடுத்த வருஷம் மறக்காமல் இங்கே வர வேண்டும்.” என்று நஞ்சு தோய்ந்த குரலில் சொன்னேன்.

“நல்ல முட்டாள் அடாநீ! இது ஸரத்தான் என்ற நாலாவது மாதம் ஆயிற்றே, மறந்து விட்டாயா? இந்த மாதத்தில் பழங்கள் மெக்காவுக்குப் போய்விடும், அங்கே அவற்றின் கொட்டைகள் ‘அலீப்’ என்ற முதல் எழுத்து பொறிக்கப்படும்! விரைவில் அவை திரும்பிவரும்” என்றான் அமன்.

அவன் சொன்னது உண்மைதான். நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் எங்களிடம் தின்பதற்கு எதுவும் இல்லை. என்னிடமோ அமனிடமோ உணவுப் பண்டம் ஒரு பொருக்குகூட இல்லை.

“கோக்-தெராக் இங்கிருந்து அப்படி ஒன்றும் ரொம்ப தூரம் இல்லை. அது பெரிய நகரம்... சந்தையும் அங்கே மிகப் பெரியது.” என்று தயக்கத்துடன் சொன்னான் அமன்.

“போவோமா?”

“நான் தான் வீட்டுக்குப் போகிறேனே...”

“போவோம்! என்னிடம் பணம் இருக்கிறது. தவிர எத்தனை சாமான்கள், பார். விற்போம்!” என்றேன்.

“என்னிடமுந்தான் பணம் இருக்கிறது. நான்தான் வேலை செய்து சம்பாதித்தேனே.”

“அதுதானே! போவோம் வா. நாளை வீடு திரும்பு! இல்லாவிட்டால்... என்னுடன் வாயேன், ஊம்?”

அமன் பேசாதிருந்தான். அவன் மனதுக்குள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. என் யோசனை அவனுக்குக் கவர்ச்சி உள்ளதாகப் பட்டது. வருங்காலப் பயணம் பற்றியும் எங்களுக்கு நேரவிருக்கும் வளமான வாய்ப்புக்கள் பற்றியும் நான் பிரமாதமாக வருணித்தேன். எப்போதாவது என்னை ஒரக் கண்ணால் பார்த்தபடி அவன் காது கொடுத்துக் கேட்டான். பின்பு திடீரொன்று துள்ளிக் குதித்தான்.


“ஆகா, சரி! கொடு கையை! சத்தியம் செய், எல்லாம் ஆளுக்குப் பாதி, ஊம்?” என்றான்.

நான் சந்தோஷமாகச் சத்தியம் செய்தேன்.

இருவரும் சாமான்களை ஆளுக்குப் பாதியாகப் பங்கு போட்டுக் கொண்டோம். பணத்தையும் கணக்கிட்டுப் பாகம் பிரித்துக் கொண்டோம் (நான் அமனை விடப் பணக்காரனாய் இருந்தேன். நாட்கூலி வேலையில் அவன் சம்பாதித்தது எல்லாம் சற்றுக் குறைய ஒரு தன்கா தான்). பின்பு நடக்கலானோம். பொழுது சாய்வதற்குள் கோக்-தெராக் நகரை அடைந்து சாயாக் கடையில் தங்கினோம். அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை. சந்தை கூடும் நாள். காலையில் சந்தைக்குப் புறப்பட்டோம்.

சந்தை என்றால் அதுதான் சந்தை, மெய்யாகவே சொல்லுகிறேன்! அடே அப்பா! சந்தைகளுக்கெல்லாம் சந்தை இது! ஈரானிலோ தூரானிலோ, மெக்காவிலோ மெதீனாவிலோ, மைமானாவிலோ மைஸாராவிலோ, இஸ்தாம்புலிலோ மஸான்தரானிலோ, கீழேயோ மேலேயோ, வலப் புறமோ இடப்புறமோ, எங்குமே இந்த மாதிரிச் சந்தையைக் காண ஒருவனுக்கு வாய்க்காது. இங்கே கடை வரிசைகள் எத்தனை, சரக்குகள் எவ்வளவு, சந்தைக்கு வந்த மக்கள்தாம் எத்தனை வகைவகையானவர்கள் என்பதை எல்லாம் வருணித்து மாளாது. வியாபாரிகளின் முகங்கள்தாம் எவ்வளவு தந்திரம் நிறைந்தவை— உலகம் முழுவதையும் அவர்கள் ஏற்கனவே ஏய்த்துப் பழகிவிட்டகள் போல! அப்புறம் அவர்களுடைய உடைகள்! வானவில்லின் எல்லா நிறங்களும், ஒவ்வொரு நிறத்துக்கும் இரண்டிரண்டு பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் போல் இருந்த வண்ணச் சாயல்களும் அந்த உடைகளில் காணப்பட்டன. ஒவ்வொரு வண்ணச் சாயலுக்கும் என்ன பெயர் கொடுப்பது என்றே தெரியவில்லை, அத்தனை விதம் விதமானவை! கண்களில் பல நிறங்களும் ஒளியும் பளிச்சிட்டன. காதுகளில் ஹோவென்ற இரைச்சலும் கணகணப்பும் தடதடப்பும்—பயங்கர வழக்கு விசாரணைக்குப் பின் மக்கள் திரள் கலைந்துபோவது போல. தீர்க்கதரிசிகள் வரலாறு என்ற நூலிலோ மந்திர வித்தைக்காரி என்ற கதையிலோ இம்மாதிரிச் சந்தை வருணிக்கப்படவில்லை. இதுபோன்ற சந்தை உலகில் எங்குமே இதற்கு முன் கூடியது கிடையாது.

வாருங்களேன், எல்லாவற்றையும் வரிசையாகப் பார்வையிடுவோம்! இதோ வாசனைச் சாமான்கள், சில்லறைச் சாமான் கடைகளின் வரிசை வியாபாரிகள் தங்கள் சரக்குகளைத் தரைமேலேயே பரப்பி வைத்திருந்தார்கள். பழஞ் சாக்குகள், முரட்டு இரத்தினக் கம்பளங்கள், கைத்தறித்துணித் துண்டுகள், சிவப்பு, நீல, பச்சைத் துண்த்துண்டுகள், எல்லவற்றையும் ஒட்டுச் சேர்த்துத் தைத்துப் பந்தல்கள் அமைத்துக் கொண்டிந்தார்கள் அவர்கள். உங்களுக்கு என்ன என்ன வாங்க ஆசையோ, உலகம் படைக்கப் பட்ட நாள் தொடங்கி இன்றுவரை அழகுச் சாதனங்களும் வாசனைப் பொருள்களும் தயாரிப்பவர்கள் என்னவெல்லாம் தயாரித்தார்களோ அவை எல்லாம் இங்கே வாங்கலாம். பேன்களையும் தேள்ளுப் பூச்சிகளையும் ஒழிப்பதற்கான பாதரசக் களிம்பு வேண்டுமா? கொழுப்பைப் பாதரசத்துடன் கலந்து அரைத்துத் தயாரித்ததாம் இந்தக் களிம்பு. அல்லது சொறியைக் குணப்படுத்தும் இந்தாவு எண்ணெய் வேண்டுமா? இஞ்சி, பேதி இலை, அல்லது அக்கோனீத் என்னும் நச்சுச் செடியின் இலை தேவையா? அல்லது கண்படாமல் காப்பதற்கான வெண் புள்ளிகள் கொண்ட கரு மணி மாலை வேண்டுமா? அல்லது வயிற்று வலி மருந்து உருண்டைகள் வேண்டுமா? பஞ்சு வைத்த போர்வை தைப்பதற்கான பரு ஊசியோ, தாடி சீப்போ, காற்சட்டைகளின் உள்ளே கொடுத்துத் தைப்பதற்கேற்ற நாடாக்களோ வேண்டுமா? அல்லது “ஹலீலான்- ஜங்” என்னும் மருந்துப் பூண்டு வேண்டுமா? (இந்தப் பூண்டு எந்த நோயைக் குணப்படுத்துமோ தெரியாது. ஆனால் உங்களுக்கு என்ன வியாதி என்பது தெரியாவிட்டல் இதுதான் ஏற்ற மருந்து) எல்லா விதக் காயங்களுக்கும் கடடிகளுக்கும் போடத் தக்க மருந்துப் பிளாஸ்திரி, புஹாரச் சவையல் கந்தகம், கிரம்பு, மருந்து பக்வீட்—எது வேண்டுமோ கிடைக்கும் இங்கே. ஆண்டுதோறும் கூடும் புகழ் பெற்ற சைபீரிய இர்பீத் சந்தை கெட்டது போங்கள்!

இந்தப் பொருள்களை எல்லாம் சேகரித்து, வகைப்படுத்தி அழகாகப் பரப்பி வைத்திருப்பவர்களைப் புகழ்ந்து பாராட்டுவதுதான் நாம் செய்ய வேண்டியது...

இதோ இன்னெரு கடை வரிசை. ஒரு புறம் குயவர்கள். மறு புறம் சோப்பு விற்பவர்கள். குயவர்கள் கடைகளில் சுட்ட களிமண்ணல் செய்த அழகு அழகான பாத்திரங்கள் பெரும் பெரும் குடும்பங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. குடங்கள், கலயங்கள், கோப்பைகள், தட்டுகள் முதலியவை. ஒவ்வொரு வகைப் பாத்திரங்களும் இரட்டைப் பிள்ளைகள் அல்லது அடுத்தடுத்துப் பிறந்த சகோதாரர்கள் போல் ஒன்றையொறு ஒத்திருக்கின்றன. உங்களுக்குப் பெரிய பேஸின் வேண்டுமா அல்லது சின்னஞ் சிறு பேஸின? அல்லது பிரமாண்டமான சால் வேண்டுமோ? இதோ, இப்போதுதான் சூளையிலிருந்து எடுத்தது.பாலைப் பிரை குத்துவதற்கேற்ற தயிர்க் கலயம் வேண்டுமா? அல்லது நீண்ட குறுங்கழுத்துள்ள கூஜா வேண்டுமா? இவை எல்லாம் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. ஒரே ஆவலாய்க் காத்திருக்கின்றன. சுண்டிப் பாருங்கள், களி பொங்கக் கணீர் என ஒலிக்கும்.

சோப்புக் கடைகளில் வட்டச் சோப்பும் “யஹ்னக்” ரகச் சோப்புக்களும் மேழுகு வத்திகளும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. கடைக்காரக்ளுக்கு முன் தொங்கு பைகளில் காய்ச்சிக் கட்டியாக்கிய கொழுப்புத் துண்டுகளும் மிருகங்களின் உள்ளுறுப்புக்களும் நிறைத்து வைத்திருக்கின்றன. ஆயிர மாயிரம் பச்சை ஈக்கள் ஙொய்யென்று மொய்க்கின்றன. இங்கே ஒரு ராத்தல் சோப்பு வாங்க வேண்டும் என்றல் முதலில் மூக்கைக் கைக்குட்டையால் கட்டிக் கொள்ள வேண்டும் அல்லது சட்டைக் கைக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். சில சோப்புக் கடைக்கரர்கள் வாங்குபவர்களை உபசரிப்பதற்காகத் தேநீர்க் கோப்பையும் ரொட்டியும் கைகளில் வைத்துக் கொண்டு நிற்கிறர்கள். ஆனால் இங்கே தேநீராவது ரொட்டியாவது! ஏற்கனவே சாப்பிட்டது வாந்தியாக வெளியேறிவிடமல் வயிற்றில் தங்கியிருந்தால் அதுவே பெரிய காரியம். என்னைக் கேட்டால், கெட்டுப்போன கறிப்பொங்கல் போலக் கடுமையாக அடிக்கும் இந்தக் கவிச்சை முகர்வதைவிட ஆயுள் முழுவதும் சோப்பே இல்லாமல் இருப்பது மேல் என்பேன்.

ஆனால் இவை சந்தையின் புகழ்பெற்ற கடை வரிசைகள் அல்ல. “பீத் பஜார்”—அதாவது “பேன்பிடித்த சந்தை”—உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்றது. நமக்கு வேண்டியது, வேண்டாதது எல்லாமே இங்கே கிடைக்கும். இராணுவக் காற்சட்டைகள், ஒன்றுக்கொன்று பொருந்தாத தடித்தோல் ஜோடுகள், பஞ்சு வைத்துத் தைத்த பருத்த மேலங்கிகள் (ஏழே ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டவை. ஒரே கஷ்டம் என்ன என்றல் அவை எந்தத் துணியில் தைத்தவை என்று இப்போது கண்டுபிடிக்க முடியாது!) குல்லாய் (ஒரு வகையில் மிகவும் மதிப்புயர்ந்த குல்லாய். ஏனென்றல், வயதைக் கொண்டு பார்த்தால் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே உள்ள பிரதேசம் முழுவதிலும் இருக்கும் எல்லாக் குல்லாய்களுக்கும் முதுகுரவனாக விளங்கத் தக்கது ஆயிற்றே இந்தக் குல்லாய்!), முழங்கைகள்வரை வரும் குட்டைக் கைகள் வைத்த கிழவிச் சட்டை—மல்யாஹான் காலத்தது, பல நிறத் துண்டுத் துணிகள் (கைதேந்த தையல்காரி இவற்றைக் கொண்டு என்னதான் தைக்க மாட்டள்!)—எது வேண்டுமானலும் இங்கே காணலாம். அல்லது, ஒருவேளை உங்களுக்குக் குதிரைக் கவிசனை வேண்டுமோ? செத்த குதிரைமேலிருந்து கழற்றப்பட்டதுதான் என்றலும் இது இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தாங்கும். அல்லது உயர் ரக ஆட்டுத்தோல் ஸ்லிப்பர்கள் வேண்டுமா? ஆகா கிடைக்குமே. இவற்றைப் போட்டுக் கொள்ளலாம்—அடித்தோலும் குதியும் புதிதாகத் தைத்துக் கொள்ள வேண்டும், மேற்பகுக்குச் சரியானபடி வண்ணம் பூச வேண்டும், அவ்வளவுதான்! பாதங்களில் சுற்றிக் கொள்வற்கான துணிப்பட்டிகள் தாம் எத்தனை வகை! இஷ்டம்போலப் பொறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இவற்றைக் கோவணமாகவும் பயன்படுத்தலாம்...

எல்லாவற்றையும்விட அக்கறைக்கு உரியவை இந்தச் சாமான்களை எல்லாம் விற்பனை செய்யும் வியாபாரிகளின் முகங்கள்தாம். இவர்கள் முகங்கழுவி ஒரு வாரத்துக்கு மேலேயே ஆகியிருக்கும். தாடிகள் பிறந்தது முதலே மழிகத்தியைக் கண்டறியாதவை. ஆயினும் முகங்கள் என்னவோ பளபளக்கின்றன. நீங்கள் சரக்கை நோட்டமிட்டு விலை கேட்க வேண்டியதுதான் தாமதம், இவர்கள் முகங்களில் ஒளி படர்கிறது—நேற்றுத்தான் அழுது புதைத்துவிட்டு வந்த தங்கள் அருமை நண்பனின் பிணம் உயிர் பெற்று வந்துவிட்டது போல. முதலில் கட்டாயமாக முகமன் கூறிக் கைகுலுக்கிய பின்பே விலையைச் சொல்வார்கள். அமெரிக்கா என்ற ஓர் இடம் உலகில் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதுதான் அந்த அமெரிக்கா போலும்!

வேடிக்கை என்ன தெரியுமா? இங்கே, “பீத் பஜாரில்” தான் எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த ஹுஸ்னிபாய் என்பவனை நாங்கள் சந்தித்தோம்! இரைச்சலாலும் பல் வண்ணங்களாலும், பொருள்களின் செழிப்பாலும் மதிமயங்கியவர்களாக, முதலில் விற்பதா வாங்குவதா என்று தீர்மானிக்க முடியாமல் நாங்கள் வெகு நேரம் சுற்றி அலைந்து விட்டபின் அவனைக் கண்டோம். ஹுஸ்னிபாய் துண்டுத் துணிகள் விற்றுக் கொண்டிந்தான். துண்டுத்துணிகள் என்றல் வெறும் சிறு துண்டுகள் அல்ல, ஓர் அல்லது ஒன்றரை அடி நீள முள்ள பகட்டான துணிகள், சீட்டித் துணித் துண்டுகள். ஒரு பெரியதான துணி விற்கப்படும்போது கடைசியில் இம்மாதிரித் துண்டுகள் மிஞ்சுவது வழக்கந்தான். பெரிய வியாபாரிகள் இவற்றைக் கூவி விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு மலிவாக விற்பனை செய்வார்கள். சில்லறை வியாபாரிகள் தொங்கு பைகளில் பல்வேறு நிறங்களும் கோலங்களும் கொண்ட துணிவிளிம்புகள் வெளித் தெரியும்படி வைத்தவாறு சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பார்கள். இந்தத் துணித் துண்டுகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. மிக மலிவான சீட்டித் துணிகூட ஓர் அர்ஷீன்—இரண்டேகால் அடி—பதினேழு கோப் பெக்குகள் விலை! ஏழைகளுக்கு இந்த விலை கட்டுப்படி ஆகாது. முழுதும் ஒரேவகைத் துணியால் உடைகள் தைத்துக் கொள்ள அவர்களுக்கு முடியாது. அதற்காகத் தான் துணித் துணிடுகளை வாங்கி, சட்டைக்கைகளும், மேலங்கிகளுக்கு அடியில் தெரியும் காற்சட்டைப் பகுதிகளும் தைத்துக் கொள்வார்கள். எஞ்சிய பகுதிகளுக்கு முரட்டுக் கைத்தறித் துணியைப் பயன்படுத்துவார்கள்.

இந்த ஹுஸ்னிபாய் எப்போதுமுதல் சில்லறை வியாபாரி ஆனான் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனோ, இரண்டு தொங்கு பைகளில் செம்மச் செம்ம நிறைந்த துணித் துண்டுகளும் கையில் அளவுகோலுமாக அனுபவசாலியான வியாபாரி போல வளைய வந்தான்.

“பாப்ளின் வேண்டுமா, பூப்போட்ட சிவப்பிச் சீட்டித் துணி வேண்டுமா, புள்ளிபோட்ட சீட்டித்துணி வேண்டுமா, ரோஹ்தான்—பதான் வேண்டுமா, அருமையான மல் துணி வேண்டும, காலிக்கோ வேண்டுமா, உறைத்துணி வேண்டுமா, சைத்தான் தோல் துணி வேண்டுமா? தாராளமாக வங்குங்கள், சந்தோஷமாகத் தைத்துப் போட்டுக் கொள்ளுங்கள்!” என்று தொண்டை கிழியக் கத்தியவன், எங்களைப் பார்த்துவிட்டான். இமாம்கள் ஹஸனையும் ஹீஸேனையும் உயிரோடு எதிரே வரக் கண்டவன் போல மலைத்துப் பேனான்.

“அடே, நீங்களா? எங்கிருந்து வந்து சேர்ந்தீர்கள் இங்கே?... அப்பா குதிரைக் கழுத்துப் பட்டைகளைச் சந்தையில் விற்று வரும்படி என்னிடம் சொன்னார். என்னால் இது முடியாது என்று சொல்லிவிட்டேன். என் சித்தப்பா இருக்கிறாரே, சில்லறை வியாபாரி, அவர் மாதிரிச் சுற்றுத் திரிந்து வியாபாரம் செய்ய எனக்கு வெகு காலமாகவே ஆசை. துணித் துண்டுகள் வாங்க அப்பா எனக்குப் பணம் கொடுத்தார். சையது-பயில்வான் சந்தைக்குப் புறப்பட்டான், நானும் அவனோடு வந்து விட்டேன்... பாருங்கள், எப்பேர்ப்பட்ட சரக்குகள் என்று! யூஸீப் தாவீதவின் கடையில் கூட இந்த மாதிரிச் சரக்கு கிடைக்காது! ரூபிகளுக்கு மூன்று உருப்படி!”—இப்படிப் பெருமை அடித்துக் கொண்டவன் சட்டென நினைவுபடுத்திக் கொண்டு, “ஆமாம், நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? அமன், நீ கிராமத்திலிருந்து வருகிறாயா?” என்றான். பின்பு என் கதை அவனுக்கு நினைவு வந்துவிட்டது. “நீ இருக்கிறாயே, நல்ல ஆள் தான் போ! ஜிப்ஸிகளிடம் பாடம் கேட்டாயா என்ன? ஒரு வாரத்துக்கு மேலே எங்கே காடுவாழ்சாதியாகச் சுற்றித் திரிகிறாய்? பாவம், உன் தாயார் எங்கெல்லாம் உன்னைத் தேடினாள் தெரியுமா? சௌக்கியமாக இருக்கிறேன் என்று தகவல் கொடுத்தால் செத்துப்போய்விட மாட்டாயே! நல்ல வேளையாக உன் அத்திபேர் வந்து உன் அம்மாவைத் தேற்றினார். தம் வீட்டில் நீ ஐந்து நாட்கள் தங்கியிருந்ததாகவும் அப்பிறம் கப்ளான்பேக்கில் மற்றோர் அத்தை வீட்டுக்குப் போயிப்பதாகவும் சொன்னார். இலையுதிர் காலம்வரை வயல் வேலையில் நீ ஒத்தாசை செய்யப் போகிறாய் என்றார்... இங்கே எப்படி வந்து சேர்ந்தாய் நீ? அத்திம்பேரிடமும் புளுகினாயா? தாயாரை ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டது வாயேன், மடையா! அவள் ஆறுதல் அடைந்துவிட்டாள் என்றாலும் உன்னை நினைத்து அழுகிறாளே...”

“கொஞ்சம் பாடுபட்டுச் சம்பாதிக்கிறேன், உடைகளைச் சீர்படுத்திக் கொள்கிறேன், அப்புறம் திரும்புகிறேன்.”

“ஆமாமாம். சீர்தான் படுத்திக் கொள்வாய்! இதையும் பறி கொடுத்து விட்டு நிற்பாய்!”

“அடேடே, ரொம்பத்தானே பேசாதே... என்னிடமும் இருக்கிறது சரக்கு, இதோ!“

“ஒகோ! மெய்யாகவேதானா? இதை எல்லாம் எங்கே சேகரித்தாய்? காக்கைக் கூட்டைச் சூறையாடினாயா?”

இப்போது அமன் குறுக்கிட்டான். “சரி, சரி! சச்சரவிட்டது போதும். ஏற்கனவே வெக்கை சகிக்க முடியிவில்லை. நம் வட்டாரத்தில் புதிய செய்திகள் என்ன, அதைச் சொல்லு” என்றான்.

“அட அங்கே என்ன புதுச் சேதிகள் இருக்க முடியும்?... ஆமாம், உங்களுக்குத்தான் இன்னும் தெரியாதே”—ஹீஸ்பாய்க்கு உற்சாகம் பிறந்து விட்டது. “அங்கே என்ன நடந்தது தெரியுமோ? ரொட்டிக்காரன் ஜலீல் தீனிப் புல்லை மசூதி முகட்டின் மேல் போட்டிருந்தான். அதிலே தீப்பிடித்துவிட்டது. தீயணைக்கும் படையினர் வந்தார்கள். ஆகா, எவ்வளவு அருமையாக இருந்தது என்கிறாய்! இன்னும் புலாத்ஹோஜா இருக்கிறானே, அவன் அண்ணனுடைய ரிவால்வரை எடுத்துக் காவல்காரனுடைய நாயைச் சுட்டு விட்டான். மீர்ஷாப் அவனை ஒரு நாள் சிறையில் வைத்திருந்தார். இரண்டு போலீஸ்காரர்களும் மச்சாலவ் தானேயும் வந்தார்கள்! எல்லோரும் அவரவர் வீடுகளில் பதுங்கிவிட்டார்கள். நானும் ஸலீஹீம் மீர்-அஜீஸ்-அகா வீட்டு முன்மாடத்திலிருந்து பார்த்தோம். மச்சாலவ் சொன்னார் (இங்கே ஹீஸ்னிபாய் மச்சாலவைக் கோரணி செய்தவாறு மாற்றுக்குரலில் பேசினான்). ‘ஸே, ஸே, மோஸம். படு மோஸம். ஸைபீரியா போவாய் நீ...’ புலாத்ஹோஜாவின் அண்ணனோ அரைகுறை ருஷ்ய மொழியில் கெஞ்சிக் கூத்தாடினான், நிறையக் கைக்கூலி கொடுத்தான். அப்புறந்தான் அவர்கள் போனார்கள். புலாத்ஹோஜா விடுதலை செய்யப்பட்டான். அண்ணன் அவனைச் சக்கை சாறாக விளாறினான் என்று சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் புலாத்ஹோஜா இப்போது வீறாப்பு பேசுகிறான். அவன் யாருக்கும் பயப்படுவதில்லையாம், போலீஸாரிடமே, மச்சாலவிடமோ, காவல்காரன் கூர்-ரஹீமிடமோ அவனுக்கு பயம் இல்லையாம். ‘இஷ்டப்பட்டால் எல்லாரையும் ரிவால்வரால் சுட்டுத் தள்ளிவிடுவேன்’ என்கிறான். நாங்கள் அவனை இரண்டு போடு போட்டோம், அவனோ உங்களையும் சுட்டுத் தள்ளிவிடுவேன் என்கிறான்...”

“அப்படியா? உதைக்கிறேன் பயலை, திரும்பியதுமே” என்றேன் நான்.

“கட்டாயம் உதைப்பாய். முதலில் திரும்பு” என்று கேலி செய்தான் அமன்.

“டேய் ஹீஸ்னிபாய், வீடு திரும்பியதும் அம்மாவிடமும் தங்கைகளிடமும் நான் ரொம்பக் கேட்டாதாகச் சொல்லு. என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லு. பொறு, இந்தா, இந்த ஐந்து கோப்பெக்கை யூல்தாஷிடம் கொடு. அவனுக்கு நான் தர வேண்டும் நல்லது, நாங்கள் எங்கள் காரியத்தைப் பார்க்கிறோம். விடை கொடு!” என்றேன்.

“போய் வாருங்கள்!” என்றான் ஹீஸ்னிபாய். மறு வினாடியே அவன் உரக்க முழங்கியது எங்களுக்குக் கேட்டது. “பாப்ளின் வேண்டுமோ, பூப் போட்ட சீட்டித் துணி வேண்டுமா...”

புறாக்களுக்காக எனக்குக் கிடைத்த பொருள்களையும் அவற்றோடு அமனின் மண்வெட்டியையும் விற்பனைக்காக அடுக்கி வைக்க நாங்கள் தீர்மானித்தோம். எங்களைச் சுற்றி வாங்குபவர்கள் ஏராளமாகக் கூடிவிட்டார்கள். எங்கள் சாமான்கள் மளமளவென்று விற்றுப் போகும் என நாங்கள் நினைனத்தோம். ஆனால் கூடியவர்கள் எல்லோரும் வெறுமே வேடிக்கை பார்க்க வந்தவர்கள். சாமான்களின் விலைகளில் கூட அவர்கள் அக்கறை காட்டவில்லை. அவை எதற்குப் பயன்பட முடியும் என்பதில்தான் அக்கறை அவர்களுக்கு. பற்பல நையாண்டி யோசனைகளை அவர்கள் கூறினார்கள். ஒரு மணி நேரம் போலத் தொல்லைப்பட பின் அமனுடைய மண்வெட்டியையும் என் மர மண்வாரியையும் ஒருவிதமாக விற்றோம். இது கூட, தாமாகவே முன்வந்த தரகர்களின் உதவி இல்லாமல் நடக்கவில்லை.

வாங்க வந்தவர்களுடன் அரை மணி நேரம் பேரம் பேசிய பிறகு அவர்கள் கேட்ட விலைக்கு, அதாவது மண்வெட்டியை அரை ரூபிகளுக்கும் மர மண்வாரியை (கோடை காலம் ஆதலால்) ஒன்றரைத் தன்காவுக்கும் விற்க நாங்கள் இசைந்தோம். அதற்கு அப்புறமும் இந்தத் தரகர்கள் “கையடித்துக் கொடுப்போமா?” என்றார்களே பார்ப்போம்!

அமன் பணத்தை இடுப்புக் குட்டையில் சுருட்டி முடிந்து கொண்டான். மற்றச் சாமான்களை விற்பது இப்போது அவசியமாயிருந்தது. விளையாட்டுத் தொட்டில்களையும் கிலுகிலுப்பையையும் நான் அமனிடம் கொடுத்தேன். தம்பட்டத்தையும் கிராதிவிளிம்புகளையும் நானே வைத்துக் கொண்டேன். அமன் கிலுகிலுப்பையைக் கிலுக்கினான், நான் தம்பட்டத்தை அடித்தேன்—வாங்குபவர்களைக் கவர்ந்து இழுப்பதற்காக. எங்களையே போன்று கந்தல் அணிந்த ஏழைச் சிறுவர்களின் கூட்டம் அக்கணமே எங்களைச் சூழ்ந்து கொண்டது. இலவச வேடிக்கை பார்க்கக் குழுமினார்கள் இவர்கள். ஒர் ஒடிசல் பையனுக்குக் கிலு கிலுப்பை மிகமிகப் பிடித்துப் போயிற்று. அவன் ஒர் உழவனின் மகன். அமன் அவனுடைய கழுத்துப் பட்டையைப் பற்றிக் கொண்டு, அவனுடைய மறுப்பைப் பொருட்படுத்தாமல் இரண்டு தர்பூஸ் பழங்களும் ஒரு முலாம்பழமும் கிலுகிலுப்பைக்கு மாற்றாக வாங்கிக் கொண்டே விட்டான். நான் அவனைப் பார்த்துக் கண்ணடித்தே—சபாஷ், நீ கைராசிக்காரன் என்ற அர்த்தத்தில். இதன் பிறகு நாங்கள் தம்பட்டத்தை விற்றோம். கஞ்ருசிவப்புக் குதிரைமேல் ஏறிச் சந்தையில் சுற்றி வந்த அழகிய மீசையுள்ள ஒர் இளைஞன் அதை வாங்கிக் கொண்டான். ஒரு தன்கா விலை கொடுத்தான் அவன். அப்புறம் கிடைத்தாள் ஒரு “குருட்டு” வாடிக்கைக்காரி. கஸாஃகியக் கிழவி அவள். ஒரு கோழி, முட்டைகள், தயிர்க் கட்டி உருண்டைகள், சாமை ஆகியவற்றை விற்க வந்திருந்தவள்.

“அடாடா, என் கண்களா, இந்தத் தொட்டில்களை எனக்குத் தாருங்கள். சந்தையிலிருந்து குழந்தைகளுக்குப் பரிசாக எடுத்துப் போகிறேன். பேரக் குழந்தைகள் சந்தோஷப்படுவார்கள்!” என்றாள்.

“கிராதி விளிம்புகள் இல்லாமல் தொட்டில்கள் தனியாக விற்கப்படமாட்டா” என்று கண்டிப்பான குரலில் சொன்னான் அமன்.

“அடாடா, என் கண்களா, கிராதிவலை இல்லாமல் விளிம்புகளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?...”

தலையை ஆட்டிக் கொண்டே அவள் அப்பால் போக புறப்பட்டவள், திரும்பி வந்தாள்.

“சரி அப்படியே ஆகட்டும். வாங்கிக் கொள்கிறேன். குழந்தைகள் விளையாடுவார்கள். என்ன விலை கேட்கிறீர்கள்?” என்றாள்.
நாங்கள் வெகு நேரம் பேரம் பேசினோம். முடிவில் இருபது முட்டைகளும் ஒரு குல்லாய் நிறையச் சாமையும் ஒட்டகத் தயிர்க்கட்டி உருண்டைகள் பத்தும் பெற்றுக் கொண்டு சாமான்களை அவள் தலையில் கட்டினோம். சாமான்களைக் கொடுத்து விலையும் பெற்றுக் கொண்ட பின் பறவைகள் போல லேசாகி விட்டதாக உணர்ந்தோம்.

“அப்பா, களைத்துப் போய்விட்டேன். ஏதாவது சாப்பிட வேண்டும், இல்லையா?” என்று சோம்பல் முறித்துக் கொண்டே சொன்னான் அமன்.

“போவோம். என்ன சாப்பிடுவது?”

“மலிவாய் இருக்க வேண்டும், வயிறும் நிறைய வேண்டும். அதுதான் முக்கியம்.”

“அப்படியானால் தினைக் கஞ்சி குடிப்போம்!”

இரண்டு கோப்பெக்குகள் கொடுத்து இரண்டு மக்காச்சோள ரொட்டிகள் பறங்கிக்காய்க் கறியுடன் வாங்கிக் கொண்டு சூடான உணவுப் பண்டங்கள் விற்கும் பகுதிக்குப் போனோம். அங்கே பல விதப் பண்டங்கள் விற்பனைக்குத் தயராய் இருந்தன. தணலில் வாட்டிய கல்லீரல் (கல்லீரல் கொஞ்சம் கவிச்சடித்தது என்பது உண்மையே. ஆனால் இம்மாதிரி அற்ப விஷயங்களை யார் பொருட்படுத்துகிறார்கள்?), உருளைக் கிழங்கு ஸமோஸா, சேமியா, அரிசிக் குறுநொய்ப் பொங்கல், கறித் துறுவல், கோதுமைக் கஞ்சி, தினைக் கஞ்சி முதலியன. பெரிய பெரிய அண்டாக்கள் நிறைய உணவுப் பண்டங்கள் சாப்பிட்டுவோரை எதிர்பார்த்துக் காத்திருந்தன. சாப்பிடுவர்கள் வந்து குத்திட்டு உட்கார்ந்தார்கள், சமையல்காரகல் கரண்டிகளால் கஞ்சியைக் கிண்ணங்களில் ஊற்றிச் சற்று வணக்கத்துடன் அவர்களுக்குக் கொடுத்தார்கள். ஒரு கிண்ணத்தில் சேமியாவுடன் ஏதோ கறுப்பான மிதந்தது. “இது என்ன, ஈயா?” என்று கேட்டார் சாப்பிட வந்த நாசூக்குக்காரர். “அட நீங்கள் ஒன்று! ஈயாம்! சேமியாவில் ஈ எங்கிருந்து வரும்? கருகிப்போன வெங்காயம் அல்லவா இது?” என்று பதிலளித்து, சட்டெனக் கிண்ணத்தில் விரலை விட்டுக் கருகிப் போன வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் சமையல்காரன் “இப்போது நிம்மதியாகச் சாப்பிடுங்கள்” என்றான்.

இங்கே மலிவு, துப்புரவாயும் இருக்கிறது என்று எண்ணி, நாங்களும் ஆளுக்கு ஒரு கிண்ணம் சேமியா வாங்கிக் கொண்டோம். ஒரு கிண்ணம் சேமியாவின் விலை மூன்று கோப்பெக்குகள். ஆனால் நாங்கள் இரண்டு கிண்ணங்கள் ஐந்து கோப்பெக்குகளுக்குத் தரும்படிப் பேரம் பேசி இரட்டை மகிழ்ச்சியுடன் சாப்பிடத் தொடங்கினோம். நன்றாயிருந்தது! சேமியா கொஞ்சம் ஊசிப் போயிருந்தது, ஆனால் முறுமுறுவென்று இருந்த மக்காச் சோள ரொட்டியோடு சேர்த்துத் தின்பதற்குப் பாலாடைபோல ருசியாய் இருந்ததாகவே எங்களுக்குப் பட்டது. அமன் கிண்ணத்தை உயர்த்திப் பிடித்தவாறு, பெரிய பாம்புக்கூட்டம் கலவரம் அடைந்துவிட்டது போன்ற உரத்த சீறல் ஒலியுடன் சேமியாவைக் கிண்ணத்திலிருந்து உறிஞ்சி உறிஞ்சித் தின்றான். நானும் மும்முரமாக முயன்றேன். இருவரும் இடது கையால் அடிக்கொரு தரம் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டோம்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஒரு தர்பூஸ் பழத்தையும் தின்றுவிட்டு நாங்கள் இனிமையாகச் சோம்பல் முறித்தோம். முட்டைகள், சாமை, தயிர்க்கட்டி உருண்டைகள், மிஞ்சிய மக்காச்சோள ரொட்டித் துண்டுகள் ஆகியவற்றை என் இடுப்புக் குட்டையில் மூட்டை கட்டினோம். மூட்டையையும் முலாம் பழத்தையும் நான் எடுத்துக் கொண்டேன். தர்பூஸ் பழத்தை அமன் தூக்கிக் கொண்டான். மேலே எங்கு போவது?

அமனுக்குப் புதிய எண்ணம் தோன்றிவிட்டது. எங்கள் பணம் அவன் இடுப்பில் இருந்தது. இப்போது கணிசமான தொகை—சுமார் இரண்டு ரூபிள் சேர்ந்திருந்தது. இந்த ரூபிள்கள் அவனை நிம்மதியாய் இருக்க விடாமல் அடித்தன. கொழுப்பு சேர்வது செம்மறிக் கடாவுக்கு மட்டுமே கெடுதல் அல்ல என்று ஐனங்கள் சொல்வது உண்மைதான். அமன் அதற்குள்ளாகவே ஜமீன்தார் மகன் போல மிடுக்கு பண்ணத் தொடங்கிவிட்டான்.

“கால் நடைச் சந்தையைச் சுற்றிப் பார்க்கலாம் வா” என்று என்னை அழைத்தான்.

“எதற்காக?”

“என் பங்குப் பணத்துக்கு ஆட்டுக்கடா வாங்கி நகரத்துக்கு ஒட்டிப் போகிறேன்.”

“உனக்கென்ன, மூளை புரண்டுவிட்டதா? உன் வயிற்றுப்பாட்டுக்கே வழியைக் காணோம், ஆட்டுக் கடாவுக்கு எப்படித் தீனி போடுவாய்? அல்லது உன்தகப்பனார் நீ ஆட்டுக்கடாவை வீட்டுக்கு ஒட்டிவருவாய் என்று ரொம்பத்தான் காத்துக் கொண்டிருக்கிறாரோ? என்றேன்.”

ஆனால் என் சொற்கள் தம்பட்டத்தில் பட்ட பட்டாணிபோல அவனிட மிருந்து துள்ளி விழுந்துவிட்டன. என்னை இழுத்துக் கொண்டு கால் நடைச் சந்தைக்குப் புறப்பட்டன். முலாம்பழத்தையும் தர்பூஸையும் வாயிலில் கட்டணம் வசூலிப்பவனிடம் வைத்துவிட்டு மூட்டையை உடன் எடுத்துக் கொண்டோம்—அதை யாரிடமும் நம்பி ஒப்படைக்க எங்களுக்கு மனம் இல்லை. சந்தையின் மற்றப் பகுதிகள் பயங்கர நீதி மன்றத்தின் முன்னறை போல் இருந்தன என்றால், கால்நடைச் சந்தையில் இந்த பயங்கர நீதி விசாரணையே நடந்து கொண்டிருந்தது. பாவம் கால்நடைகள் இதைப்பற்றி என்ன நினைத்தனவோ, அறியேன். ஆனால் இறுதி நாள் வந்துவிட்டது என்றே அவையும் எண்ணியிருக்கும். ஒரு புறம், பத்து பத்தாக ஒரே கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்து ஆட்டுக்கடாக்கள் வாய் ஓயாது கத்திக் கொண்டிருந்தன. மறுபுறம் வெள்ளாடுகளும் குட்டிகளும் ஓலமிட்டுக் கொண்டிருந்தன. சற்று தூரத்தில் பசுக்களும் இளங்கன்றுகளும் மூன்று வயதுக் கன்றுகளும், எருதுகளும், உழவு மாடுகளும் மாவென்று அலறிக் கொண்டிருந்தன. இன்னும் அப்பால் இருந்தது குதிரைத்தாவணி. அங்கே குதிரை வியாபாரிகள் அப்பாவி உதவாக்கரைக் குதிரைக்களைச் சவாரிப் புரவிகள் என்று சொல்லி விற்றுக் கொண்டிருந்தார்கள். இதற்காக அவர்கள் முதலில் குதிரைகளை இரக்கமின்றிச் சவுக்கால் விளாறி ஆற்றுக்கு விரட்டினார்கள். ஸகாலிக் என்னும் இந்த ஆறு சற்று தூரத்தில் ஓடுகிறது. மக்கள் கூட்டம் முன்னும் பின்னும் போய்வந்த வண்ணமாய் இருந்தது. பெரும்பாலும் இவர்கள் வாங்கி விற்பவர்கள். கட்டிப்போட்ட குதிரைகளின் அருகே விற்பவர்களும் வாங்குபவர்களும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டோ, பேரம் செய்து கொண்டோ அல்லது வெறுமே உரக்கப் பேசிக் கொண்டோ நின்றார்கள். பெரிய செம்மறி மந்தைகளின் சொந்தக்காரர்கள் ஒரு பக்கத்தில் இருந்தார்கள். அவர்களில் இருவர் பெஷாகாச் பணக்காரகள் தாஷ் கந்தகாரர்கள். மற்றவர்கள் கஸாஃகுகள். நமுதா நீளங்கிகளும் நமுதாத் தொப்பிகளும் அணிந்த இவர்கள் ஒருவர் கையில் ஒருவர் அடித்து, பேரம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவிலும் தரகர்கள் நடமாடினார்கள். “வாங்குங்கள், பாய்-அத்தா, வாங்குங்கள்!” என்றோ, “விற்றுவிடுங்கள், பாய்-அத்தா, விற்றுவிடுங்கள், இதுதான் சரியான சமயம்!” என்றோ வியாபாரிகளை அடிக்கொரு தரம் ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள் இவர்கள். தரகர்களின் கண்கள் பளிச்சிட்டன, கைகள் நடுங்கின. பின்னே என்ன, இங்கே ஆதாயத்துக்கு வழி இருந்தது, நூற்றுக்கணக்கான ரூபிள்களுக்குப் பேரங்கள் குதிர்ந்தன, பல நூறு கால்நடைகள் கைமாறி...


மாடுகளின் அலறல், குதிரைகளின் கனைப்பு, ஆடுகளின் கத்தல் ஆகியவற்றின் பேரரவத்தில் மனிதக் குரல்கள் அமுங்கிவிட்டன. சூரியன் உச்சத்துக்கு வந்துவிட்டது. வெக்கை தாங்க முடியவில்லை. காற்றில் புழுதிப் படலம் கலையாமல் மிதந்தது. வியர்வை, சிறுநீர், சாணம், ரோமம் இவற்றின் கள்ளென்ற நெடிகள் அடித்தன. இவை எல்லாவற்றுக்கும் நடுவே, தண்ணீக்காரன் நீர்நிறைந்த தோற்பையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு இரண்டு மட்குவளைகளும் கைகளுமாக மெதுவாக நடந்தான்.

“தருமத் தண்ணீர்! தருமத் தண்ணீர்!” என்று முழங்கினான் அவன். பரமாத்தமாக இவ்வாறு உபசரித்து, வேண்டியவர்களுக்கெல்லாம் குடிநீர் பருகக் கொடுத்தான். தண்ணீருக்காகப் பணம் கொடுக்க விரும்பியவர்கள் தண்ணீர்க்காரனின் கையிலிருந்த குவளையில் காசைப் போட்டார்கள். விருப்பம் இல்லாதவன் காசு கொடுக்க வேண்டாம். தண்ணீர்க்காரன் அவனைப் பார்க்கவே இல்லை.

குளிர்ந்த மோர் வேண்டுமா மோர் என்று கத்தி திரிந்தார்கள் இரண்டு வாண்டுகள்—என்னையும் அமனையும்விடச் சின்னவர்கள். அவர்கள் கையிலிருந்த வாளியில் மோருக்கு மேல் மிதந்தன அழுக்கடைந்த பனிக்கட்டித் துண்டுகள். பனிக்கட்டி இவர்களுக்கு எங்கே கிடைத்ததோ?

பீத் பஜாரின் நெரிசலுக்கும் பரபரப்புக்கும் நாங்கள் ஏற்கனவே பழகியிருந்தோம். ஆனால் இந்தக் கூச்சலும் கொந்தளிப்பும் எங்களுக்குத் திகைப்பூட்டின. நாங்கள் நடந்து திரிந்தோம். பேரம் பண்ணுபவர்களின் அருகே நிற்போம், அவர்களுடன் ஏதேனும் ஒட்டகத்தின் பற்களைப் பிடித்துப் பார்ப்போம். ஏதேனும் குதிரையின் நடையையும் நிலையையும் கூர்ந்து நோக்குவோம். பல நிற எருதின் விலையைப் பேசுவோம். அமன் ஆட்டுக்கடா வாங்கும் தன் யோசனையை மறந்துவிட்டான் என்று நினைத்தேன். சந்தையின் கிழக்குப் பகுதியில் சச்சரவு ஏற்பட்டிராவிட்டால் அவன் இப்போதும் அதை நினைவுபடுத்திக் கொண்டிருப்பான். சச்சரவின் அரவம் கூதிர்கால மழைப்புயலுக்கு முன் அதிரும் இடி முழக்கம்போல மெதுவாகவே எங்களை எட்டியது. ஆனால் கடைசியில் எட்டியே விட்டது.

“உர் ஷெஷெந்தி!” (அடி இவனை) என்று கஸாஃகிய மொழியில் எவனோ கூச்சலிட்டான்.

“கிஸ்ஸாவூர், கிஸ்ஸாவூர்” (ஜேபடித்திருடன்)!

“சந்தையில் திருடன்!”

ஊதல்கள் கீச்சிட்டன. கஸாஃகும் உஸ்பேக்குமான இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு கையில் வாளை ஓங்கிக் கொண்டும் மறு கையால் நீலநிறமான கம்பளிக் காற்சட்டையைப் பிடித்துக் கொண்டும் இடறியவாறு அந்தப் பக்கம் ஓடினார்கள். நாங்கள் அவர்கள் பின்னே ஓடி, உடனேயே அவர்களை முந்திவிட்டோம். கூட்டத்தின் நடுவில் யாரைக் கண்டோம் தெரியுமோ? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அமன் எனக்குச் சாட்சி எங்கள் வட்டாரத்தின் அண்டையில் உள்ள கூகிர்மாச் வட்டாரத்தைச் சேர்ந்த, எங்கள் இருவருக்கும் நன்கு தெரிந்த திருடன் ஸுல்தான் நடுவே நின்று கொண்டிருந்ததான்! ஆனால் இங்கே அவன் திருடனாக அல்ல, திருட்டுக் கொடுத்தவனாக நடித்தான்! ஆம், ஆம் தொழிற்கூட உதவி மேஸ்திரிபோல் காணப்பட்ட எவனோ அப்பாவி இளைஞனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு, உயர்குடியினனுக்கு உரிய சீற்றமும் கண்ணீரும் விழிகளில் பொங்க, கூட்டத்தின் நடுவில் நிமிர்ந்து நின்றான் ஸுல்தான்.

“முஸல்மான்களே! என் பணம் திருட்டுப்போனபோது இந்த ஆள் பக்கத்திலேயே வளைய வந்து கொண்டிருந்தான்... நான் இவனைச் சந்தேகிக்கிறேன்.” என்று அழுகைக் குரலில் சொல்லி, மார்பில் ஒரு கையால் அடித்துக் கொண்டான்.

வெள்ளைத் துணிபோல வெளிறிப்போன இளைஞன் உடம்போடு நடுங்கினான்.

“ஆண்டவனே, என்னை அவதூறிலிருந்து காப்பாற்று! ஆண்டவனே, எப்பேர்ப்பட்ட சங்கடத்தில் மாட்டிக்கொண்டுவிட்டேன்!” என்று முணுமுணுத்தான்.

இதற்குள் அருகே வந்துவிட்ட கஸாஃகியப் போலீஸ்காரன், “உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தது?” என்று ஸுல்தானிடம் கேட்டான்.

“ஐந்து கோப்பெக்குகள் குறைய எட்டு ரூபிள்களும் நான்கு தன்காக்களும். வர்ணக் கோடுகள் போட்ட சணல் மணிபர்ஸில் வைத்திருந்தேன். என்வெள்ளி மோதிரமும் அதில் இருந்தது. ‘ஓ, அலி’ என்ற சொற்கள் பொறித்தது அது. நான் ஏழைச் செம்மான் ஒரு நோஞ்சல் ஆடு வாங்கலாம் என்று வந்தேன்!”

இவ்வாறு சொல்கையில் கூட்டத்தைச் சுற்றி நோட்டமிட்டுக் கொண்டிருந்த அவன் கண்களில் நானும் அமனும் பட்டுவிட்டோம்.

“இதோ, இந்தப் பையன்களும் நேரே கண்டார்கள்!” என்றான் அவன். என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அமனுக்கு எதிர்பாராமையால் புரைகூட ஏறிவிட்டது. அவன் “ஐயோ” என்று கூவி, பின்னே நகர்ந்து, ஆட்களின் முதுகுகளுக்குப் பின் மறைந்துவிட்டான். என்னாலோ இடத்தைவிட்டு நகரவே முடியவில்லை.

“உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தது?” என்று இளைஞனிடம் கேட்டான் போலீஸ்காரன்.

“என்னிடமும்... வர்ணக் கோடுகள்போட்ட சணல் மணிபர்ஸ்... பணம்... பணம் ஐந்து கோப்பெக்குகள் குறைய எட்டு ரூபிள்களும் இரண்டு தன்காக்களும். நானும் ஆடு வாங்கவே வந்தேன். சத்தியமாக.”

“இதிலே எந்த விதச் சாட்சிகளும் தேவையில்லை. எங்கே வாருங்கள் இரண்டு பேரும் பஞ்சாயத்துத் தலைவரிடம். அங்கே விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். கூட்டம் கலையட்டும்!” என்றான் உஸ்பேக் போலீஸ்காரன்.

அவர்கள் போய்விட்டார்கள். நான் அவர்களைத் தொடரவில்லை. நான் அமனைத் தேடுவதற்கு விரைந்தேன். அவனோ, கிலி கொண்டு ஆட்டையும் என்னையும் எல்லாவற்றையுமே அடியோடு மறந்துவிட்டு, கண்காணாமல் மறைந்துவிட்டான். பொழுது சாயும் தறுவாயில்தான் நான் அவனைக் கண்டு பிடித்தேன். அவனுடைய பேடித்தனத்தையும் அறிவீனத்தையும் சக்கைசாறாகப் புரட்டி எடுத்தேன். அவனோ திகிலிருந்து இன்னும் விடுபட்ட பாடில்லை.

“விவகாரம் எப்படி முடிந்தது?” என்று கேட்டான்.

“எப்படி முடிந்ததா? நல்ல வேளைதான் நீ கம்பி நீட்டினாய். நீ ஜேபடித்திருடனுக்கு உடந்தையாய் இருந்தாயாம். போலீஸ்காரர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.” என்றேன்.


“மெய்யாகவா? இப்போது நாம் என்ன செய்வது?”

“என்ன செய்வது? என்ன செய்வது?” என்று அவனைக் கோரணி செய்தேன். “ஒரு காரணமும் இல்லாமல் நழுவி ஓடினாயே, அப்போது நினைத்திருக்க வேண்டும். என்ன செய்வது என்று. உன்னால் முலாம்பழமும் தர்பூஸும் கட்டண. வசூல்காரனிடமே தங்கிவிட்டன!” என்றேன்.

அமன் சற்று நிம்மதி அடைந்தான்.

“எங்கே இராத் தங்குவது?” என்று கேட்டன்.

நாங்கள் அனேகச் சாயாக்கடைகளுக்குப் போய்ப் பார்த்தோம். கடைக்காரர்களும் குதிரை வியாபாகிளும் கூலி விற்போரும் எல்லாவிற்றிலும் நிறைந்திருந்தார்கள். குந்துவதற்குக் கூட இடம் இல்லை.

“நாம் எங்கேதேன் போவது?” என்று மறுபடி கேட்டான் அமன்.

“பயப்படாதே ஏதாவது வழி கண்டுபிடிப்போம்... பொறு, வழி கண்டு பிடித்துவிட்டேன் போலிருக்கிறது. போன வருஷம் என் சித்தப்பாவும் இங்கே சந்தை நாளில் வந்திருந்தார். சாயாக்கடையில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் எவனோ கிழவியின் வீட்டில் தங்கியதாகவும் சொன்னார்... அவள் கஸாஃகிய மாது என்று நினைக்கிறேன்... வேடிக்கையான பெயர் அவளுக்கு ... ஆ, நினைவு வந்துவிட்டது யக்ஷீ கிஸ் (நல்ல நங்கை)! அவள் வீடு சந்தையிலிருந்து வெகு தூரம் இல்லை, அவள் கூடாரத்தில் வசிக்கிறாளாம், சாராயம் காய்ச்சி விற்கிறாளாம். போவோமா அவளிடம்?”

நாய்களால் துரத்தப்படும் நரிபோல இங்குமங்கும் மிரண்டு மிரண்டு பார்த்துக்கொண்டிருந்த அமன் பேசாமல் என் பின்னே நடந்தான்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

குறும்பன் அத்தியாயம் 4: இரவுக் கூட்டாளிகள்

கிழவி யக்ஷீ கிஸின் கூடாரத்தை நாங்கள் அதிகச் சிரமம் இன்றிக் கண்டுபிடித்துவிட்டோம். ஸகார்லிக் ஆற்றின் இடது கரையில், கிட்டத்திலேயே இருந்தது அது. கூடாரத்தைச் சுற்றிலும் தரை துப்புரவாகப் பெருக்கி மெழுகப்பட்டிருந்தது. பக்கத்தில் விசாலமான மண் திண்ணைமேல் முரட்டுக் கம்பளம் விரித்திருந்தது. கூடாரத்தின் அருகில் தாழ்ந்த அடுப்பு அமைந்திருந்தது. மூடியற்ற கொப்பரை அதன்மேல் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே எண்ணெய் எடுக்கும் பெரிய மரத்தொட்டி இருந்தது. சற்று தூரத்தில், கரடிவேட்டைச் சூலங்கள் இரண்டு தரையில் நாட்டப்பட்டு அவற்றில் ஒரு கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. கயிற்றில் பிரம்பு உறிகளில் தொங்கின மூன்று, நான்கு மண் கிண்ணங்களும்—பாலும் பாலாடையும் நிறைந்தவை போலும்—இரண்டு சுரைக் குடுக்கைகளும்—இவற்றில் தயிர் வைத்திருக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவே துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு கன்றுக்குட்டி, பல நிறக் கிழக் காவல் நாய் பாதி பட்டுப்போன வில்லோ மரத்துடன் கட்டப்பட்டிருந்தது. குத்திருமலை ஒத்த அசட்டையான குலைப்புடன் அது எங்களை வரவேற்றது. இந்தக் குலைப்பைக் கேட்டதும் கிவி கூடாரத்துக்கு உள்ளிருந்து வெளியே வந்தாள். அவளுக்கு அறுபது வயது இருக்கும். வாரப்படாத நரையோடிய கேசத்தின்மேல் நெற்றியை மூடியபடி சிறு வண்ணத் திலைக்குட்டை கட்டியிருந்தாள். இடுப்பில் பழைய கம்பளி லேஞ்சியை வார்போலக் கட்டிக்கொண்டிருந்தாள். பின்னல் நுனிகளில் ஐந்தாறு வெள்ளி ரூபிள்களும் அரை ரூபிள்களும் அலங்காரமாகத் தொங்கின.

“ஸலாம் ஷேஷே” என்றேன் நான் (“ஷேஷே” என்றால் கஸாஃகிய மொழியில் “தாய்”).

பதில் முகமன் கூறுவதற்குமுன் அவள் நாயைத் தெளிவான ஒலிப்பற்ற எவையோ சொற்களால் “ஷப்த்ச் அப்த்ரஸ்குர்” என்று அதட்டினாள். நாய் குலைப்பை நிறுத்தியது, கிழவி திண்ணையைக் காட்டினாள்.

“வாருங்கள் இளைஞர்களே, இப்படி உட்காருங்கள்” என்றாள்.

நான் கண் சாடை காட்டவும் அமன் எங்கள் மூட்டையைக் கிழவியிடம் நீட்டினான்.

“சொல்லுங்கள் தம்பிகளா. சாராமம் குடிக்கப் போகிறீர்களா, அல்லுத இறைச்சிக்கறியும் தயாரிக்கவா?” என்று கேட்டள்.

“வேண்டாம் ஷேஷே, தாங்கள் குடிக்கவும் போவதில்லை, இறைச்சிக்கறியும் தயாரிக்க வேண்டாம். முட்டைப் பொரியல் செய்து தாருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் இரவுப் போதை இங்கேயே கழிக்கிறோம்.”

“நல்லது. ஆண்டவன் உலகம் விசாலமானது, வானத்திலும் தரையிலும், இது கோடைகாலம். எங்கே இஷ்டமோ படுத்து உறங்குங்கள். இரண்ட பேருக்குமாக ஒரு தன்கா கொடுங்கள்.” என்றாள் கிழவி.

“ஐயோ ஷேஷே, எங்களிடம் இருப்பது எல்லாம் அரைத் தன்கா தானே!” என்றேன்.

“உஸ்பெக் பையன்கள் படு தந்திரக்காரர்கள்! போனால் போகிறது, இராத் தங்குங்கள், இன்று சந்தை நாள், வாடிக்கைக்காரர்கள் வருவார்கள், பணக்காரப் பிள்ளைகள். ஒரே கொம்மாளமாக இருக்கும்.”

அடுப்பு மூட்டி, வராட்டிகளைப் போட்டாள். நானும் அமனும் மேலே எங்கே போவது என்று ஆலோசனை செய்தவாறு உட்கார்ந்திருந்தோம். விரைவில் கிழவி முட்டைப் பொரியலையும் புதிதாக மாவு பிசைந்து கட்ட இரண்டு ரொட்டிகளையும் மண் தட்டில் வைத்து எடுத்து வந்தாள். நாங்கள் ஆளுக்கு ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் கொண்டு சாப்பிடலானோம். முட்டைப் பொரியல் அபார ருசியாய் இருந்தது. அமன் ரொட்டித் துண்டுகளால் தட்டைத் துடைத்துத் தின்னத் தொடங்கினான். அதற்குள், தங்கள் இடிச் சிரிப்பாலும் கூச்சல்களாலும் சுற்றுப்புறத்தை அதிரச் செய்தவாறு கூடாரத்திற்கு வந்தார்கள் ஐந்து ஆட்கள். முன்னே நடந்தான் நெடிய இளைஞன். அவனது இடது தோள்மேல் இருந்தது ஆட்டின் பாதி உடல். வலது கையில் சிறு மூட்டை, ரொட்டிகளும் வெங்காயமும் காரட்டும் அதில் இருந்தன போலும். முஸ்லிம் மதப்பள்ளி மாணவன் போலத் தோன்றிய மற்றொருவன் ஆட்டுத்தாடியும் அழுக்குத் தலைப்பாகையுமாக அடுத்தாற்போல் வந்தான். மரியாதையும் நயப்பாங்கும் மெலிந்த முகத்தில் ததும்ப, ஜாக்கிரதையாக அடிவைத்து நடந்தான் அவன். இரண்டு லேசான மேலங்கிக்ள் அணிந்திருந்தான். ஒன்று குட்டையால் இடுப்பைச்சுற்றி உள்ளே இறுக்கப்பட்டிருந்தது. மற்றது அதற்கு மேல் அணியப்பட்டிருந்தது. இவர்கள் பின்னே... பின்னே வந்தான், ஜேபடித்திருடன் ஸுல்தான்! அவன் காற்சட்டைகள் மடக்கிவிடப்பட்டிருந்தன. இடுப்புக் குட்டை தும்பு போல முறுக்கப்பட்டிருந்தது. கோடுபோட்ட மேலங்கியின் கழுத்துப்பட்டை திறந்திருந்தது. அழுக்குக் குல்லாய் விளிம்பு மட்க்கப்பட்டிருந்தது... அவன் முகத்தில் இருந்த துடுக்கான, வெற்றிச் செருக்கு ததும்பிய தோற்றம் அவனை அறியாதவனுக்குக்கூட வயிற்றைக் கலக்குவதாக இருந்தது. அவனைக் கண்டதுமே எஞ்சிய இருவரை நான் மற்ந்தே போனேன். ஏதோ ஒரு வகையில் ஸுல்தானை ஒத்திருந்தார்கள் அவர்கள். அப்புறம் அவர்களைக் கவனமாகப் பார்த்தபோது ஒருவனுக்குக் கண்ணில் பூ விழுந்திருந்ததையும் மற்றவனுக்கு ஒருகை இரண்டாவதை விட நீளமாயிருந்ததால் வலது தோள் இடது தோளைக்காட்டிலும் உயர்ந்திருந்ததையும் கண்டேன்...

வந்திருப்பவர்கள் யார் என்று கண்டுகொண்டதும் ரொட்டித்துண்டு அமனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது போலும். கண்கள் பிதுங்கி விடும் போல என்னை நோக்கி பரக்க விழித்தான். திண்ணையை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்று நான் சைகையால் உணர்த்தினேன். பரட்டென்று அதிலிருந்து பாய்ந்துவிட்டான் அமன். நாங்கள் ஆற்றின் கரையோரத்துக்கு நகர்ந்து, காவல் நாய் கட்டியிருந்த வில்லோ மரத்தடியில் பதுங்கினோம். அந்த நோஞ்சல் நாயோ கற்றும் நடப்பதைச் சற்றும் கவனிக்காமல் அசட்டையாய் இருந்தது.

“வணக்கம், ஷேஷே! இன்று ராத்திரி நாங்கள் உன் விருந்தாளிகள்! கேட்டாயா?” என்று முழங்கினான் ஸுல்தான்.

பின்பு சுற்றிலும் கண்ணோட்டியவன் எங்களைப் பார்த்துவிட்டான்.

“ஆகா. அட போக்கிரிகளா! நீங்களும் இங்கே இருக்கிறீர்களா? இங்கே என்ன செய்கிறீர்கள்? எங்கே, இப்படி வாருங்கள்!” என்றான்.

திண்ணைக்குத் திரும்புவது தவிர நாங்கள் வேறு எதுவும் செய்வதற்கில்லை. இதற்குள் ஸுல்தான் தன் நண்பர்களுடன் அங்கே வசதியாக உட்கார்ந்துவிட்டான். கிழவி அழுக்கு மேஜைத் துணியில் ரொட்டிகளைச் சுருட்டி எடுத்து வந்து திண்ணை நடுவில் வைத்தாள். பிறகு பெரிய மரக் கோப்பையை எடுத்துக் கொண்டு, “அரிசிச் சாராயம் சாப்பிடுகிறீர்களா, சாமைச் சாராயமா?” என்று ஸுல்தானிடம் கேட்டாள்.

“எது நல்லதோ அதையே கொடுஙகள்!”

கிழவி கூடாரத்துக்குள் போனாள்.

“கால் நடை சந்தையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று ஸுல்தான் எங்களிடம் கேட்டான்.

அமன் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சும்மா தான் இப்படி, ஸுல்தான்–அகா.... சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம்.” என்றேன் நான்.

“அப்படியா! சரியான இடந்தான் சுற்றிப் பார்ப்பதற்கு என்று கண்களைச் சுரித்தான். உங்களை என்னிடம் வேலை பழக வைத்துக் கொள்ளலாமோ, ஊம்? நீங்கள் ஒருவேலை, இதற்கு ஏற்றவர்களாய் இருக்கலாம்! இதோ இவன் இருக்கிறானே” என்று மோவாயால் அமனைச் சுட்டி, “இவன் கூரை வழியே வீட்டுக்குள் ஏறிக்குதிக்கத்தான் லாயக்கு. ரொம்பப் பாங்கற்றவன், ஜேபடி வேலைக்குச் சரிப்பட மாட்டான்!” என்றான்.

வாய்விட்டுச் சிரித்தான். அவனுடைய சிரிப்பைப் பயன்படுத்திக் கொண்டு நான் பேச்சை மாற்ற முயன்றேன்.

“ஸுல்தான்-அகா, அந்தச் சச்சரவு எப்படி முடிந்தது? என்று கேட்டேன்.”

“ஹோ-ஹோ, உனக்குத் தெரியாதா என்ன? வேடிக்கையான கதை, இல்லையா?” அவன் தன் நண்பர்களைப் பார்த்தான். அவ்ர்கள் “ஆமாம்” என்று தலையாட்டினார்கள். “இன்று காலை நாங்கள் சாயாக்கடையில் உட்கார்ந்திருந்தோம். என் திருட்டுப் பண்த்தைச் சுத்தப்படுத்த, அதாவது சொந்தக்காரனின் சம்மதத்துடன் எடுத்துக கொள்ள என்னால் முடியும் என்று வீரியம் பேசினேன், புரிந்ததா பையா? அவர்கள் பந்தயம் வைத்தார்கள். தோற்பவன் கூட்டாளிகள் எல்லாருக்கும் தன்செலவில் சாராயம் வாங்கித் தர வேண்டும் என்று தீர்மானித்தோம். ஆயிற்றா. நான் கால்நடைச் சந்தைக்குப் போனேன். பார்க்கிறேனோ, ஒரு அசமந்தன் போய்க் கொண்டிருந்தான். அவன் பணப்பையை உருவினேன். பணத்தை எண்ணிப் பார்த்தேன். என்னிடமிருந்து இரண்டு தன்காக்களையும் வெள்ளி மோதிரத்தையும் அதில் போட்டேன். பணப்பையை மறுபடி அவன் சட்டைப்பைக்குள் செருகிவிட்டேன். அப்புறம் நான் ஆடிய நடாகத்தைத்தான் நீ பார்த்தாயே! போலீஸ்காரர்கள் எங்களை பஞ்சாயத்துத் தலைவர் முன் இட்டுவந்து பணத்தை மறுபடி எண்ணினார்கள். நான் சொன்னபடியே இருந்தத. ஆகவே பணப்பை என்னிடம் கொடுக்கப்பட்டது. சன்மானப் பணமாக ஒன்றரைத் தன்கா என்னிடம் வாங்கிக் கொண்டார்கள். அவ்வளவுதான். சாமர்த்தியமான வேலை, இல்லையா?”

“சாமர்த்தியமான வேலைதான்” என்று சிரமத்துடன் முனகினேன். “அந்த ஆள்.... அசமந்தன் என்ன ஆனான்?” என்று கேட்டேன்.

“ஹ-ஹா, சிறையில் தள்ளிவிட்டார்கள் அவனை, வேறு என்ன? கிடக்கிறது, கவலைப்படாதே. நான் அவன்மேல் இரக்கம் கொண்டு போலீஸ்காரனுக்கு ஒரு ரூபிள் லஞ்சம் கொடுத்து இந்த மடையனை விடுவித்தேன். எனக்கு அவன்மேல் காட்டம் எதுவும் இல்லை என்று சொன்னேன். அவன் எப்படிப் பூரித்துப் போனான் என்று நீ பார்த்தால் சொல்லுவாய், ஹ-ஹ-ஹா... என்னைத் தழுவிக் கொண்டான்... முத்தமிட்டான்... ஹெ-ஹே...”

நண்பர் குழாம் முழுவதும் கடகட வென்று சிரித்து மகிழ்ந்து போயிற்று.

“அப்படிச் சொல்லு” என்று என்னை ஓரக் கண்ணால் பார்த்துப்பல் இளித்தான் ஸுல்தான்.

கிழவி இறைச்சியை நறுக்கி வேகப் போட்டாள். அடுப்பிலிருந்து கிளம்பிய இளநீலப்புகை எடையற்ற போர்வை போல எங்களைப் போர்த்தது. சூரியன் அஸ்தமிக்கலாயிற்று. மேற்கே கடைசி மேகங்கள் நெருப்பாய்த் தகதகத்தன. அருகே மெல்லொலி செய்தது ஆறு, இந்தக் கும்பல் மட்டும் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்! அவர்கள் எங்கள மறந்துவிட்டவர்கள் போலத் தங்களுக்குள் ஏதோ அரட்டைய்டித்துக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஸுல்தான் முழங்கையை ஊன்றியவாறு பாதி படுத்தநிலையில் இருந்தான். நெட்டையன் திண்ணை அருகே நின்று கொண்டிருந்தான். முல்லா போல் இருந்தவன் திண்ணைமேல் மண்டியிட்டு அமர்ந்து கைகளை மார்பின்மேல் சேர்த்து வைத்துக் கொண்டு, ஸுல்தான் நெட்டையனிடம் பேசுவதை மிகுந்த சிரத்தையுள்ளவன் போன்ற தோற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். மற்ற இருவரும் எதிரெதிரே சப்பணம் கொட்டி உட்கார்ந்து தீப்பெட்டியை எறிந்து பிடித்துப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.

இதற்குள் கிழவி சாராயம் நிறைந்த இரண்டு கரைக் குடுக்கைகளையும் வர்ணம் பூசிய சில மரக் கோப்பைகளையும் கொண்டுவந்து வைத்தாள். பூஸா என்னும் இவ்வகைச் சாராயம் சூடாக்கிக் குடிக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் கிழவி கொண்டுவந்த சாராயம் பகல் முழுவதும் வெயிலில் வைத்திருந்த்தால் தானே சூடேறியிருந்தது. ஆகவே மறுபடி சூடாக்கத் தேவை இருக்கவில்லை. தவிர சாராயத்தைக் குவளையில் ஊற்றுவதாற்கும் தனிப்பட்ட விதிகள் உண்டு: ஊற்றும்போது அது கட்டாயமாக வடிகட்டப்பட வேண்டும். நெட்டையன் தன் இடுப்புக் குட்டையை உடனே அவிழ்த்துப் பிரித்து உதறி, குவளை மேல் பரப்பி இறுக்கிக்கொண்டு சாராயத்தை ஊற்றினான். பின்பு வடிகட்டிய சாராயத்தை ருசி பார்த்துவிட்டுக் குவளையை ஸுல்தானிடம் நீட்டினான்.

எல்லோருக்கும் மற்ற இருவருக்கும் குவளைகளில் ஊற்றிக் கொடுத்துவிட்டு ஸுல்தானைக் கேள்விக் குறியுடன் பார்த்தான்.

“பையன்களை இப்போதைக்கு விட்டுவை. முல்லாவுக்கு ஊற்றிக்கொடு!” என்றான் ஸுல்தான்.

முல்லா கைகை மறித்தவாறு நளினமாக மறுத்தான்,

“என்ன நீங்கள், என்ன நீங்கள்! குடியுங்கள் நீங்களே. நாங்கள் குடிப்பதில்லை, ஆண்டவன் கட்டளை என்ன என்றால்....”

“இந்தா, கட்டிவை உன் ஆண்டவன் கட்டளையை. எப்போது முதல் நீ குடிப்பதில்லை, ஊம்? வேசி வீட்டில் எங்கள் குவளைகளில் மிச்சம் இருந்ததை எல்லாம் குடித்து வெறிகொள்ளவில்லையா நீ?” என்ற அச்சுறுத்தும் குரலில் சொன்னான் ஸுல்தான்.

“இல்லை, குடிப்பது உண்டுதான், ஆனால்.... அதாவது.... விஷயம் என்றால்.... நாங்கள் சபதம் செய்திருக்கிறோம்.”

“ச-பதமா? உன் சபதத்துக்கு ஏதேனும் மதிப்பு உண்டா? நீ யார் என்பதை எண்ணிப் பார்! ஸாலார் பக்கத்தில் நடந்த தானியச் சந்தையில் நான் மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால் கூட்டம் அங்கேயே உன்னைத் தீர்த்துக் கட்டியீருக்குமே! இல்லை, நீ யார் என்பதை எண்ணிப் பார்த்தாயா? திருட்டுக்கு உடந்தையாய் இருக்கக்வட லாயக்கில்லாதவன் ஆயிற்றே நீ! திருடன் கிழவன் ஆனால் மசூதித் தொண்டன் ஆகிவிடுவான். வேசி கிழவி ஆனால் பேய்களை மந்திரம் போட்டு விரட்டத் தொடங்கிவிடுவான் என்று சொல்வார்களே. அது மெய்தான். ஆளைப் பாரப்பா, சபதம் செய்தானாம்! ஒருவேளை இந்தக் காரணத்தால் நீ மௌல்வி ஆகிவிட்டாயோ, சீடர்களைத் தேடத் கிளம்பினாயோ? அட சே, குடியடா!”

முல்லா நடுங்கம் கையால் குவளையை எடுத்துக் கொண்டான்.

“குடித்துவிட்டு மதுப்பாட்டு பாடு, ஊம், ஆரம்பி, தீர்க்கதரிசியின் வழித் தோன்றலே!”

முல்லா முகத்தைச் சுளித்துக் கொண்டு சாராயத்தைப் பருகினான்.

எங்களைக் குடிக்கும்படி யாரும் விசேஷமாக் வற்புறுத்தவில்லை.

பூசா நிறைந்த சுரைக் குடுக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டவரப்பட்டன. அரைகுறையாக வெந்த இறைச்சிக் குழம்பையும் கிழவி கொண்டு வந்து வைத்தாள். வெறியாட்டம் சூடுபிடித்துவிட்டது. முலலா தலைப்பாகையைப் பிரித்து இடுப்பில் வரிந்து க்ட்டிக் கொண்டான். சாராயம் வேண்டாம் என்று மறுக்காதது மட்டும அல்ல, தானே கேட்டுக் கேட்டு வாங்கிக் குடிக்கலானான் அவன். மற்றவர்கள் கோரியபடி ஏதோ அர்த்தமற்ற பாட்டைக் குடிமயக்கக் குரலில் பாட வேறு செய்தான்:

“ஓடிற்று மலையடியில் என் குதிரை,
சாடிற்று, பாய்ந்தது சாகும்வரை.
கண்டுவிட்டேன் பல வீரர்கள், களி
கொண்டிசைப்பேன், ஓடு, என் பரியே!
ஆ. மதுப்பாட்டு, இசைப்பேன் மதுப்பாட்டு!...”


கூட்டாளிகளுக்கு வர வர வெறி ஏறிக் கொண்டு போயிற்று. எல்லோரும் ஒரு நேரத்தில் பேசினார்கள். மற்றவர்கள் பேச்சை ஒருவரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நான் மெள்ள எழுந்து திண்ணையிலிருந்து இறங்கி அமனைச் சைகை காட்டி அழைத்தேன். இதை ஒருவரும் கவனிக்கவில்லை. கிழவியிடம் சிறு கம்பள விரிப்பும் தலையணையும் கேட்டுப் பெற்றுக் கொண்டு கூடாரத்துக்குப் பின்னே படுத்துக் கொண்டோம். களைத்துச் சோர்ந்து போயிருந்தோம் ஆயினும் எங்களால் வெகு நேரம்வரை உறங்க முடியவில்லை. திண்ணைமேல் குடிகாரர்களின் ஆரவாரம் வர வர அதிகரித்தது. வேறொரு கும்பலும் இந்தக் கும்பலுடன் சேர்ந்து கொண்டது. ஒரு சமயம் அவர்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள், மறு சமயம் ஒருவரை ஒருவர் கூச்சலிட்டுத் திட்டிக் கொண்டு சிரித்தார்கள். சமீபத்தில் நாங்கள் பார்த்த கால் நடைச் சந்தையை நினைப்பூட்டியது அந்தக் கூச்சல். அப்புறம், பகலில் சந்தையில் நடந்தது போலவே, சச்சரவு தொடங்கிவிட்டது. அவர்கள் எவனையோ பிடித்து அடித்தார்கள். அவன் உதவி உதவி என்று கத்தினான், கெஞ்சினான், அழுதான்:

“ஆண்டவன் சத்தியம், என்னிடம் இருப்பது எல்லாம் இவ்வளவுதான், இன்னும் பணம் என்னிடம் இருந்தால் பெரிய இமாம் என்னைத் தண்டிக்கட்டும்!”

“காற்சட்டை இடுப்பில் தேடிப் பாரடா கீழ்மகனே!”

அவர்கள் முல்லாவைக் கொள்ளையடித்தார்கள். நாங்கள் திகிலால் நடுநடுங்கியவாறு கூடாரத்தின் பின்னே படுத்திருந்தோம். நாங்கள் திகிலால் நடு நடுங்கியவாறு கூடாரத்தின் பின்னே படுத்திருந்தோம். எல்லாவற்றுக்கும் பழகிவிட்ட கிழவியோ, ஒன்றுமே நடக்காதது போல விருந்தாளிக்ளுக்கு இடையே நடமாடினாள். பாத்திரங்களை அப்புறப்படுத்தினாள், சாராயம் கொண்டு கொடுத்தாள்.

நாங்கள் எப்போது உறங்கினோமோ அறியேன். விலாவில் யாரோ இடிக்கவே திடுக்கிட்டு விழித்தேன். இன்னும் இருட்டாக இருந்தது, ஆனால் வான விளிம்பு லேசாக வெளிறத் தொடங்கியது. என் அருகே நின்று கொண்டிருந்தான் முல்லா. அவன் தலையில் மறுபடியும் தலைப்பாகை இலகியது. அது அவசர அவசரமாகக் கட்டிக் கொள்ளப்பட்டிருந்தது. தலைக்கு நாளைவிட இன்னும் அழுக்காகி இருந்தது. கன்னத்தில் பலத்த அடி தழும்பிட்டிருந்தது. ஒரு கண் தணல்போலச் சிவந்திருந்தது.

“எழுந்திரு மகனே, எழுந்திரு! எழுந்திரு! அவர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் போதே நாம் தப்பி ஓடிவிட வேண்டும். என்னை எப்படி அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். பார்த்தாயா? தவிர என் பணத்தை எல்லாம் சுரண்டிப் பரித்துக் கொண்டு விட்டார்கள். மூக்குப் பொடி வாங்வதற்கக் கூடக் காசு மிச்சம் வைக்கவில்லை. உங்களுக்கும் இதே விபத்து நேர்த்துவிடக்கூடாது. எழுந்திரு மகனே, சீக்கிரம்...” —இப்படி முணுமுணுத்தவன், முகம் சுளித்தான். “ஐயோ, மண்டையிடி பொறுக்க முடியவில்லை. பழுத்த தர்பூஸ் பழம்போல அதிர்கிறது” என்று அங்கலாய்ந்தான்.

நான் அமனை எழுப்பினேன். நாங்கள் துள்ளி எழுந்து ஆற்று நீரில் முகங்கழுவி மேலங்கித் தலைப்புக்களால் தடைத்துக கொண்டோம்.

“ஐயா எங்கே போக விருமபுகிறீர்கள்?” என்று முல்லாவின் காதோடு கேட்டேன்.

“ஆ, பரம்பொருளின் உறைவிடம் மாட்சி மிக்கது, உலகத்தில் இடம் நிறைய. எங்கே திரும்பினாலும் புனித மெக்காவுக்கே போய்ச் சேர்வோம்... ஆனாலும்... ஆனாலும்... மேலே போவோம், கினகிராக்-தெப்பே மலைக்கு.”

நாங்கள் கூடாரத்திற்கு அப்பால் போய்விட்டோம், அதற்குள் கிழவி யக்ஷீகிஸ் எங்கள் முன் தோன்றினாள்.

“அடே கண்களே, எங்கே நழுவப் பார்க்கிறீர்கள்? காசைக் கொடுங்கள் முன்னே!”

அமன் ஒரு தன்கா எடுத்துக் கொடுத்தான்.

“இந்தா ஷேஷே. அரைத் தன்கா இராத் தங்கியதற்கு, பாக்கி ரொட்டிக்கும் முட்டைப் பொரியலுக்கான எண்ணெய்க்கும். சரிதானா?”

அவள் முல்லாவைப் பார்த்தாள்.

“சரிதான், சரிதான்... இந்த ஊருக்கு வந்தால் இங்கே வாருங்கள், உபசரிக்கக் காத்திருக்கிறேன்” என்றாள்.

நாங்கள் நடையைக் கட்டினோம்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Saturday 25 July 2009

குறும்பன் அத்தியாயம் 2: கூட்டுப் புலவு

எனக்கு வினையாக முடிந்த இந்த விவகாரத்தைத் திட்டமிட்டவன் யூல்தாஷ்.

லைலாக் மசூதியின் பிரதான வாயில் முகட்டின் கீழ் ஆல்ச்சிக் வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துக் கொண்டிருந்தது. என் லேசான மேலங்கியின் பைகளும் கைநுனிகளும் இடுப்புக் குட்டையும் வென்று பெற்ற ஆல்ச்சிக்குகளால் நிறைந்துவிட்டன. வெற்றியால் நான் இன்ப வெறி கொண்டுவிட்டேன். அடுத்தபடி கிடைத்த வெற்றிப் பொருளைச் சட்டை மார்புக்குள் மறைத்துக்கொண்டு, “ஆகா, கோட்டைவிட்டீர்களா! வெற்றி எனக்கே!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூவினேன்.

என் அதிர்ஷ்டத்துக்கு முடிவையே காணேம். அந்த வேளையில்தான் வந்து சேர்ந்தான் யூல்தாஷ். தன் காலிக்கோ மேலங்கியின் சிக்குப் பிடித்த தலைப்பால் மூக்கைத் துடைத்துக் கொண்டே வந்து விளையட்டைப் பார்த்தான். பின்பு, ஏதோ விருப்பம் இல்லாதவன் போல, “பையன்களா, எல்லோரும் சேர்ந்து கூட்டாகப் புலவு தயாரிபபோமா?” என்றான்.
எல்லோரும் அக்கணமே அவன் பக்கம் திரும்பினார்கள். “தயாரிப்போம், தயாரிப்போம்!” என்று கத்தினார்கள். என் அதிர்ஷ்டம் என் ஒருவனைத் தவிர யாருக்கும் மகிழ்ச்சி ஊட்டவில்லை என்பது தெளிவாயிருந்தது.
யூல்தாஷ் முகத்தைச் சுளித்தான்.
“எங்கே?” என்றன்.

“எங்கே வேண்டுமானலும்! ரீஸ்க்கி-ஹல்பீயின் பழைய வீட்டு முகப்பில் தயாரிப்போம்!” (ரீஸ்க்கி-ஹல்பீ பள்ளி உதவி ஆசிரியர்.)

“சரி” என்று யார் யார் என்ன கொண்டுவர வேண்டும் எனப் பங்கிடலானன் யூல்தாஷ். ஹுஸ்னிபீ சமையல்காரனகத் தெரிந்தெடுக்கப்பட்டான். பாத்திரம், கரண்டி, உப்பு, மிளகாய், தண்ணீர் ஆகியவை கொண்டு வருவது அவன் பொறுப்பு ஆயிற்று. அரிசியும் காரட்டும் தானே கொண்டுவருவதாக யூல்தாஷ் ஏற்றுக் கொண்டான். இறைச்சி கொண்டுவருவதாக நான் வாக்களித்தேன். மற்றச் சாமான்கள்—அப்படி அனேகமாக எதுவும் மிச்சம் இல்லை என்றலும்—கொண்டுவரும் பொறுப்பு தந்திரக்காரன் புலாத்ஹோஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாங்கள் கலைந்தோம். ஆட்டத்தில் வென்ற பொருள்களைச் சுமந்து கொண்டு நான் கொழுப்பு எடுத்துவர வீட்டுக்குப் போனேன்.

அம்மா அடுக்களையில் இருந்தாள். தந்தூர் எனப்படும் கோட்டையடுப்பில் பறங்கிக்காய்ப் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள் அவள். நான் ஆல்ச்சிக்குகளை என் மூலையில் கொட்டினேன். உணவுப் பண்டங்களும் வீட்டுச் சில்லறைச் சாமான்களும் எங்கள் தாழ்வான பழைய வீட்டின் பின்புறம் உக்கிரணத்தில் இருந்தன. அதற்குப் பின் வராந்தா வழியாகப் போக வேண்டும். வராந்தாவில் என் நடுவுள்ள தங்கை இளையவளைச் சீராட்டிக் கொண்டிருந்தாள். நான் ஒரு காரியமும் இல்லாதவன் போன்ற தோற்றத்துடன் அவளைக் கடந்து சென்றாலும் நான் எங்கே போகிறேன் என்று அறிய அவள் ஆசைப்படுவாள், காவல் நாய் போலக் கூச்சல் கிளப்பவாள். எனவே நான் தந்திரத்தைக் கையாள நேர்ந்தது.
“ஷபாக், உன் பெரிய பந்து எங்கே?” என்று அவளிடம் கோட்டேன்.

“என் பொம்மைகள் இருக்கும் இடத்தில். ஏன்?”
“அங்கே காணவில்லையே, அதனால் கேட்டேன்.”
“அட நீ ஒன்றுமற்றுப் போக. நீதான் எடுத்திருப்பாய். இப்போதே கொடுத்துவிடு.!”

நான் வன்மப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தேன். அவள் தங்கையை ஒருவிதமாகப் படுக்கப் போட்டுவிட்டு, என்னைப் பார்த்துச் சீறி, தன் பொம்மைகள் இருந்த இடத்துக்கு ஒடினாள். நான் உக்கிராணத்துக்குள் பாய்ந்து, பாத்திரத்திலிருந்த கொழுப்புத் துண்டை வெளியே எடுத்துப் பாத்திரத்தை மூடியிருந்த துண்டுக் காகிதத்தில் வைத்துச்சுற்றி இடுப்பில் செருகிக்கொண்டேன். முக்கிய வேலை முடிந்துவிட்டது. விறகு வைத்திருந்த சவுக்கைக்கு அமைதியாகப் போனேன். வெங்காயக் கிடங்கறைக்கு மேலே உட்கார்ந்திருந்தது என் சாம்பல் கோழி. நான் ஒசைப்படாமல் அருகே போய் அதன் ஒரு சிறகைத் தூக்கினேன். கோழி முட்டை இட்டுவிட்டு அடைகாத்துக் கொண்டிருந்தது என்பது தெரிந்தது. ஒப்படைத்த பொறுப்புக்கும் அதிகமாகச் செய்து காட்ட அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கோழியை விரட்டினேன். அது கொக்கரித்துக் கொண்டு ஒடிவிட்டது. முட்டையைத் தொப்பிக்குள் வைத்துக் கொண்டு வெளியே அவசரமாகப் புறப்பட்டேன். இப்போது ஒர் அபாயம் மட்டுமே எஞ்சியிருந்தது. அடுக்களை அருகாகப் போக வேண்டியிருந்தது. அம்மா அடுப்படியில் வேலையாய் இருப்பாள் என்ற நம்பிக்கையில் உலாவுபவன் போன்று படலை நோக்கி நடந்தேன். அட பாவமே! வேதனைப்படும் தோற்றமும் கண்ணீர் மல்கும் விழிகளுமாக, புகையை அகற்றக் கையை வீசி ஆட்டியபடி கதவருகே நின்று கொண்டிருந்தாள் அம்மா.
“அட நீ பிஞ்சிலேயே வெம்பிப் போக! மறுபடி வெளியே சவாரியா?” என்று கத்தினாள்.

நான் பணிவடன் நின்று புயல் அடங்குவதற்குக் காத்திருந்தேன்.

“ஒடுவதே குறியாய் இருக்கிறாயே, உருப்படாக் கட்டை! வா இங்கே, அடுப்பை ஊதி எரியவிடு சற்றே. கண்ணே குருடாகிவிடும் போலப் புகைகிறது!” என்று இரைந்தாள் அம்மா.

வேறு வழியில்லாமல் நான் அடுப்பருகே போய் ஊதி எரிய விடுவதில் முனைந்தேன். புகை கண்களைக் காந்திற்று. குல்லாய்க்கு அடியில் முட்டை இங்குமங்கும் உருண்டது. தருணம் பார்த்து உருண்டு வெளியே வரவோ, குஞ்சு பொரிக்கவோ அது முயல்வதுபோல இருந்தது. அடுக்களையில் தகிக்கும் வெக்கை. கடைசியில் அடுப்பு தழல் வீசி எரிந்தது. அதற்குள் என் வயிற்றிலும் ஒரு காலிலும் ஏதோ கசிவதை உணர்ந்தேன். வெப்பத்தில் உருகிய கொழுப்பு அது! கொழுப்புத் தாரை அடர்த்தியாகி வயலுக்குப் பாயும் மடை நீர் போலக் குபகுபுவென்று பெருகலாயிற்று. எனக்கு எரிச்சல் மண்டியது, அச்சமும் உண்டாயிற்று. காற்சட்டை நனைந்துவிட்டது. உருகிய கொழுப்பு தரையிலும் சொட்டத் தொடங்கியது. இதை எல்லாம் அம்மா கவனிக்கிறாளா என்று பார்ப்பதற்காகத் திரும்ப நினைத்தேன். அதற்குள் என் தலையில் விழுந்தது பேரிடி.

“நீ சின்ன வயசிலேயே படக்கென்று போய்விட! ஒகோகோ என்று தடி மரமாய் வளர்ந்திருக்கிறாய். கலியாணம் ஆகியிருந்தால் இதற்குள் நாலு குழந்தைகளுக்குத் தகப்பனாயிருப்பாய். துணியை நனைத்துக் கொண்டிருக்கிறாயே, அதிலும் பாத்திமாவடையவும் ஸீஹ்ரியுடையவும் பொருள்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்தப் புனிதத் தலத்தில். அட நீ ஒன்றுமற்றுப் போக!” என்று மரக் குழவியை ஆட்டிக் கொண்டு கூப்பாடு போட்டாள் அம்மா.

சட்டென்று அவள் கூச்சலை நிறுத்திவிட்டு என்னை நிலைக்குத்திட்டு நோக்கினாள். என் தொப்பிக்கு அடியில் இருந்த முட்டை உடைந்து மஞ்சட்கருவும் வெண்கருவும் ஒன்று கலந்து என் பொருத்து வழியாக வலது கன்னத்தில் வழிந்தன. குழவியால் என்னை அடித்தபோது நறுக்கென்ற நொறுங்கொலி அம்மா காதில் பட்டிருந்தது. தான் என் மண்டையைப் பிளந்துவிட்டதாகவும் என் மூளைதான் இப்படிக் கசிகிறது என்றும் இப்போது அவள் எண்ணிவிட்டாள். மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. நான் அவள் அருகாக நழுவி வெளியேறி முகப்பை நோக்கிப் பாய்ந்தேன். அம்மா ஏதோ கத்தினாள். தங்கையின் வன்மக் கீச்சொலியும் அவள் கூச்சலுடன் சேர்ந்து கொண்டது. ஆனால் நான் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. நொடிப்போதில் நான் தெருவில் வெகு தொலைவில் இருந்தேன்.

மூன்றாவது மூலை திரும்பியதும் நான் நின்று என் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்தேன். எவ்வளவு மோசமாய் இருக்க முடியுமோ அவ்வளவு மோசம் ஆகியிருந்தது அது. பையன்களிடம் போவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. வீடு திரும்பவும் என்னால் முடியாது. கொழுப்பில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் காணவில்லை என்பதை அம்மா இதோ தெரிந்து கொள்வாள், அப்புறம் என்பாடு ஆபத்துதான். நான் எங்கே போவது? புகலின்மையும் ஏக்கமும் என்னை ஆட்கொண்டன. இந்த உலகத்தில் எனக்கு ஒதுங்கிடமே கிடையாது!

அருகிலிருந்த சுற்றுச் சுவற்றை விரலால் நோண்டியபடி நின்றேன். சுவற்றின் மறுபுறம், வீட்டில் வழக்கமான வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அமைதியான குரல்கள் கேட்டன. “ஐயோ, அத்தை!” என்று எவளோ பெண் கத்தினாள்.
இதைக் கேட்டதும் எனக்குச் சட்டென ஒர் எண்ணம் உதித்தது. ஸாக்பானில் என் அத்தை இருக்கிறாளே! உடனே இந்த விஷயம் ஏன் என் மனதில் படவில்லை?

உண்மையாகவே ஸாக்பான் வீதியில் தன் கணவருடன் வசித்துவந்தாள் என் அத்தை. அத்திம்பேர் மென்மயிர்த்தோல் வினைஞர். நான் அவர்கள் வீட்டுக்கு எப்போதாவதுதான் போவேன். ஆனால் அவர்கள் என்மேல் உயிராய் இருந்தார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. வீட்டில் எப்போதும் நிசப்தமும் ஒழுங்கும் நிலவும். எல்லாம் கச்சிதமாக, துப்புரவாக இருக்கும். அக்கம்பக்கத்துப் பையன்களைக் கூட அங்கே எனக்குத் தெரியாது. எனவே ஒரே அலுப்பாய் இருக்கும். ஆனால் அவர்கள் வீடு இருக்கிறதே, காட்சிச் சாலைதான்! அங்கே இல்லாத பொருளே கிடையாது. உலகில் உள்ள வஸ்துக்களை எல்லாம் அங்கே காணலாம்.

வலிய இரும்பு உகிர்கள் கொண்ட மூன்று வேட்டைப் பறவைகள். காடை வேட்டைப் பருந்து, கவுதாரிவேட்டைப் பருந்து, குறும்பருந்து. சண்டைச் சேவல். வான்கோழி. சாதாரணச் சேவல், ஆனால் அதன்மேல் ஏறிச் சவாரி செய்யலாம்போல அவ்வளவு பெரியது, பருத்தது. அதன் முதுகு ஊதாச்சாயல் கொண்ட பசிய நிறம். விலாக்கள் கறுப்பு. கொண்டை தீ நாக்கு போலச் சிவந்தது. வில்லோ மிலாறுகளால் வனைந்த கூண்டில் வசித்தது கேக்ளிக் என்ற பட்சி. பறங்கித் தோடு அடியில் வைத்த வலையில் காடை வாழ்ந்தது. பாடும் பறவைகளில் வானம்பாடி, தேன் சிட்டு, மைனா ஆகியவை இருந்தன.

வீட்டில் மூன்று நாய்கள் இருந்தன. ஒன்று ஒநாய் வேட்டை நாய் (இது வெறுமே ஆடம்பரத்துக்காகவே வளர்க்கப்பட்டது. அத்திம்பேர் அதனுடன் வேட்டையாடப் போவதே இல்லை). இன்னொன்று சிறு வீட்டு நாய். இதற்கு என்னைக் கண்டாலே ஆகாது. மூன்றாவது வீட்டுக் காவல் நாய். இது வாயிலருகே இருந்த பழைய நாய்க்குடிலில் வசித்தது. புஸுபுஸுத்த புஹாராப் பூனை ஒன்றுடன் அவை மூன்றும் அமைதியாக வாழ்ந்து வந்தன. நான் போன தடவை அத்தை வீட்டுக்கு வந்திருந்தபோது பூனை ஐந்து அல்லது ஆறு குட்டிகள் போட்டிருந்தது.

வீட்டு முகப்புத் தோட்டத்தில்தான் எத்தனை வகை வகையான மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கின! அரளியும் ரோஜாவும் இரவுராணியும் இன்னும் விதம்விதமான பூச்செடிகளும். எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் கொள்ளக் கூட முடியாது... ஒவ்வொரு செடியையும் அத்திபேரும் அத்தையும் கண்ணின் மணிபோல் காத்து வந்தார்கள். தங்கள் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து பூந்தோட்டத்தைக் காப்பாற்ற அவர்களுக்கு எப்படி முடிந்தது என்பது எனக்கு விளங்காப் புதிராகவே இருந்தது.

எப்பேர்ப்பட்டதின் பண்டங்கள் கொடுத்து உபசரித்தார்கள் அவர்கள்!...
வீடிழந்த துன்ப வாழ்க்கைக்குப் பதில் திருப்தி நிறைந்த இந்த வாழ்க்கை வாழலாமே என்று நினைத்தபோது எனக்கு இவை எல்லாம் நினைவு வந்தன. அதை எண்ணுகையிலேயே எனக்கு நாவில் நீர் ஊறிற்று. பக்கத்திலிருந்த ஒடையில் ஒருவிதமாக உடம்பைக் கழுவிக் கொண்டேன். பின்பு ஸாக்பான் வீதிக்குப் புறப்பட்டேன். வழியில் எதிர்ப்பட்ட அக்கறைக்கு உரிய விஷயங்களையும் காட்சிகளையும் கவனித்துப் பார்ப்பதற்காக அடிக்கொரு தரம் நின்றேன். புதிய, நேர்த்தியான வாழ்க்கையைக் கற்பனையில் அனுபவித்து மகிழ்ந்தவாறு சென்றேன்.
அத்தையும் அத்திம்பேரும் நான் எதிர்பார்த்ததுபோலவே மகிழ்ச்சியோடு என்னை வரவேற்றார்கள்.

“அட என் கண்ணே, வா, உள்ளே வா! எப்படி வளர்ந்துவிட்டான் பாரேன்! என் கண் பட்டுவிடாமல் இருக்க வேண்டுமே. எப்படி வந்தாய், மகனே, உள்ளே வா! அண்ணாவே மறு உயிர் எடுத்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டது போல் இருக்கிறது. இன்றைக்கு என் கண் துடித்தது காரணமாகத்தான்” என்று கனிந்தவளாக என்னை உபசரித்தாள் அத்தை.

நான் கூச்சத்துடன் தலையைக் குனிந்து கொண்டு, அவர்களுக்காக மிகவும் ஏங்கிப் போய்விட்டேன் என்றும், சில நாட்கள் அவர்களுடன் இருக்க வந்திருக்கிறேன் என்றும் சொன்னேன். இதைக் கேட்டதும் அத்தைக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. அத்திம்பேருக்கும் அப்படியே.

அவர் என் தலையைத் தடவினார். “சபாஷ்! எங்களை நினைத்துக் கொண்டாயே. அருமை! இன்றைக்கு யூல்-பாஷா (இது ஒரு பெரிய ஈ) அறையில் ஒயாமல் சுற்றுச் சுற்றிப் பறந்தது. எந்த விருந்தாளி வரப்போகிறார் என்று நினைத்தேன். அந்த விருந்தாளி நீயேதான்! ஈ பறந்தது நல்ல சகுனம் ஆயிற்று, நல்ல சகுனம். சபாஷ், மகனே!” என்றார்.

அன்பு மொழிகளைப் பொழிந்தவாறு அவர்கள் என்னை வீட்டுக்குள் இட்டுச் சென்றார்கள். நான் இதனாலெல்லாம் ஒரேயடியாகச் சொக்கிப்போய், நான் வந்ததற்காகக் கூறிய காரணத்தை நானே நம்பிவிட்டேன்.

எனக்கு சுவர்க்க வாழ்க்கை தொடங்கியது. ஆனால் சுவர்க்கத்தில் வசிப்பது சலிப்பூட்டுவது என்பதை எனக்கு முன்பே எத்தனையோ பெயர் கண்டிருந்தார்கள். நான் இந்த உண்மையை இரண்டாம் நாள் நடுவில் புரிந்து கொண்டேன். அத்திம்பேரின் எல்லா வளர்ப்புப் பிராணிகளிடமும் எனக்கு உள்ள உறவை அதற்குள் தெளிவுபடுத்திவிட்டேன். வீட்டு நாயை இரண்டு தடவை படபடப்பு அடைந்து குலைத்துத் தீர்க்கும்படிச் சீண்டினேன். காவல் நாய்க்கு அஜீரணம் ஏற்படும்படி இரை ஊட்டினேன். பிரமாண்டமான சேவல் மேல் ஏறிப் பூந்தோட்டத்தைச் சுற்றிச் சவாரி செய்ய முயன்றதில் அதன் மிக அழகிய சில இறகுகளை உதிர்த்துவிட்டேன். தாயும் மகளுமான இரண்டு பூனைகளுக்கும் வீட்டில் அவற்றின் உண்மையான இடம் எது என்பதைப் புரிய வைத்தேன். பூக்களை நான் முகர்ந்த ஆர்வத்தில் அவை தம் நறு மணத்தில் பாதிக்கு மேல் இழந்துவிட்டன.

வெளியே போக அனுமதி கேட்டேன். அத்திம்பேர் சில்லரைச் செலவுக்காக எனக்கு மூன்று கோப்பெக்குகள் கொடுத்தார். இது அற்பத் தொகை அல்ல. வண்டிக்கு அடியில் அகப்பட்டுக் கொள்ளதிருக்க முயலும்படியும், அப்போது நாள்தோறும் மும்மூன்று கோப்பெக்குகள் கொடுப்பதாகவும் வாக்களித்தார் அத்திம்பேர். ஆக புதிய பையன்களை அறிமுகம் செய்து கொள்ளப் புறப்பட்டேன். இந்த வட்டராம் எங்களதுபோல ஜன நெருக்கம் உள்ளதாக இல்லை. ஆனாலும் பையன்கள் நிறைய இருந்தார்கள். அவர்களும் மொத்தத்தில் எங்களைப் போலவே விளையாடிப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். எனவே நான் சிரமமின்றி அவக்ளுடைய ஆட்டத்தில் கலந்து கொண்டேன். இரண்டு நாட்கள் நாங்கள் முற்றுகைப் போர் விளையாட்டு ஆடினோம். பின்பு அம்பு எய்தோம், ஆல்ச்சிக்குகள் வைத்து விளையாடினோம். ஆனால் இம்முறை எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. மூன்றாம் நாள் காலையிலிருந்தே நாய்களை ஏவிச் சண்டையிடச் செய்யத் தீர்மானித்தோம். இதற்காக இரண்டு தெரு நாய்களைப் பிடித்தோம். அவற்றில் ஒன்று ஒரே பயந்தாங்கொள்ளி. முதலாவது வாய்ப்பு கிடைத்ததுமே அது கம்பிநீட்டிவிட்டது. அத்திம்பேரின் காவல் நாயைக் கொண்டுவந்து பெருமை அடித்துக் கொள்ளலாம் என்று அப்போது நான் முடிவு செய்து, அதை ஒருவரும் அறியாமல் வெளியே இட்டு வந்தேன். ஆரம்பத்தில் என் ஆதரவை உணர்ந்து அது துணிவுடன் பாய்ந்து தாக்கிற்று ஆனால் சமீபத்தில் அனுபவித்த வயிற்றுக் கோளாறு அதன் பலத்தையும் தன்னம்பிக்கையையும் வெகுவாகக் குலைத்துவிட்டது போலும். அது தோல்வி அடைந்து கடிபட்ட காலுடன் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்துவிட்டது. அதன்பின் தன் ஆயுள் முழுவதும் அது நொண்டிற்று என்று நினைக்கிறேன்.

காவல் நாய் மேல் எனக்கு இரக்கமாய் இருந்தது. இப்படி நேரும் என்று நான் எண்ணவே இல்லை. இதை அத்திம்பேருக்குத் தெரியாமல் எப்படி மறைப்பது என்று மண்டையை உடைத்துக் கொண்டேன். ஆனால் இப்போதும் அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது. அத்திம்பேரின் நண்பர்கள் நகருக்கு வெளியே முலாம்பழத் தோட்டத்துக்குப் போய், பழங்களைப் பறித்த உடனேயே தின்பதற்காக அழைத்தார்கள். அதே கையோடு, ஈத் பண்டிகை நாட்களில் தாம் பார்க்க வேண்டியிருந்த உறவுக்காரர்களையும் பார்த்துவிட்டு வருவது என்று அத்திம்பேர் தீர்மானித்தார். வேட்டை நாயையும் காடை வேட்டைப் பருந்தையும் உடன் இட்டுச் சென்றார். பறவைகள் பிடிப்பதற்கான நீண்ட பிடி வைத்த வலையையும் எடுத்துக் கொண்டார். பாவம்! காவல் நாய் தன் குடிலுக்குள் முடங்கிக் கிடந்தது. நானும் அதை முதுகால் மறைத்துக் கொண்டு நின்றேன். எனவே அதன் காயத்தை அத்திம்பேர் கவனிக்கவில்லை. புறப்படுவதற்கு முன் அவர் மூன்று புஹாராத் தன்காக்களை (வெள்ளி நாணயங்கள்) என்னிடம் கொடுத்தார்.

“பட்சிகளுக்குத் தீனி ஊட்டு. அவற்றைப் பட்டினி கிடக்க விடாதே. நான் வரத் தாதானுல் அவற்றுக்கு வேண்டிய தீனி வாங்கு. இந்தா” என்றார்.

எனக்குப் பெருமை பிடிபடவில்லை. நான் உண்மையாகவே பெரியவன் ஆகிவிட்டேன். சீக்கிரம் எனக்குப் பதினான்கு வயது ஆகிவிடும். முக்கியமான பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதிலும் எவையோ அற்பப்பட்சிகள் அல்ல, பருந்தும் குறும்பருந்தும் போன்ற வலிய வேட்டைப் பறவைகள். நான் பறவைக் கூடத்துக்குப் போனேன். பருந்தும் குறும்பருந்தும் வெவ்வேறு மூலைகளில் அமர்கொம்புகளில் தலைகளை உள் இழுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தன. அவற்றுக்கு அத்திம்பேர் என்ன இரை கொடுத்தார் எனபது எனக்குத் தெரியும். ஆனால் என் மூளையில் ஒர் எண்ணம் உதித்தது. அவற்றின் எச்சம் ஒரே வெள்ளை நிறம். பால் போல வெண்மையானது. ஒரு வேளை இவற்றுக்குப் பால் பண்டங்கள் உண்ணக் கொடுக்க வேண்டுமோ? வெறும் பால் உதவாது, மிகவும் நீர்த்தது அது. ஆனால் புளித்த பால்? அதாவது, தயிர்? ஒரு வேளை, இவற்றுக்கு ஏற்ற உணவு அதுதானோ? ஊட்டிப் பார்க்க வேண்டும். இதுதான் இவற்றுக்கு ஏற்ற உணவு, சந்தேகமே இல்லை. இதுவரை ஏன்தான் ஒருவரும் இதைப் புரிந்து கொள்ளவில்லையோ?

அத்தைக்குத் தெரியாமல் சமையறையிலிருந்து தயிர்க் கலயத்தை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குப் போனேன். இரண்டு கோப்பெக்குகளுக்குக் கலயம் நிறையத் தயிர் கிடைத்தது. வீட்டில் அதை இரண்டு கிண்ணங்களில் ஊற்றி ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு கிண்ணத்தை வைத்தேன். அவை தீனியை அசட்டையாகப் பார்த்துவிட்டு உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டன. வேறு என்ன, உயர் சாதி மலைப் பறவைகள் ஆயிற்றே, எவையோ அற்பப் பட்சிகள் அல்லவே! பசியாய் இருந்தாலும், ஆட்களுக்கு எதிரே உணவைத் தொட மாட்டா. கோழியாய் இருந்தால் தன் கீழ்மையை உடனே காட்டியிருக்கும். வெட்கமில்லாமல் அக்கணமே இரைமேல் பாய்ந்திருக்கும். இவையோ—அப்படிச் செய்ய மாட்டா.

பறவைக் கூடத்திலிருந்து வெளியே வந்தேன். இரண்டொரு மணி நேரம் பொறுத்து மறுபடி அங்கே போனேன். கர்வம் கொண்ட பறவைகள் அமர் கொம்புகளிலிருந்து இறங்காமல், உணவிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு இன்னமும் அப்படியே உட்கார்ந்திருந்தன. எனக்கு லேசாகக் கோபம் வந்தது. உள்ளம் என்னவோ குருவி உள்ளம், மிடுக்குக்கு மட்டும் குறைச்சல் இல்லை! வேட்டைப் பறவைகளாம், பிரமாதம்! நான் இவற்றுக்கு முழு மரியாதை காட்டினேன். வெளியார் இல்லாமல் தனிமையில் சாப்பிட விரும்புகின்றன போலும் என்று நினைத்து வெளியோ கூடப் போனேனே. இவையோ, உதைக்க வேண்டும்! தொடக்கூட இல்லை! பறவைக்கூட முளையில் அத்திம்பேரின் பூத்தையல் கையுறைகள் தொங்கின. பறவைகளை அமர்கொம்புகளில் உட்கார வைக்கும் போது அவர் அவற்றை அணிந்து கொள்வார். நான் கையுறைகளை அணிந்து கொண்டேன், குறும்பருந்தை எடுத்து முழங்கால்களுக்கு இடையே அழுத்திக் கொண்டு வெள்ளிக் கரண்டியால் அதற்குத் தயிர் ஊட்டலானேன். குறும்பருந்து வயிறு முட்ட இரை எடுத்தாயிற்று என்று தெரிந்ததும் அதை மறுபடி அமர்கொம்பில் உட்கார்த்திவிட்டு வேட்டைப் பருந்தை எடுத்துக் கொண்டேன். அதுவும் நன்றாகச் சாப்பிட்டது.

“இப்போது எல்லாம் சரி ஆகிவிட்டது. ஒருவன் அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் எப்படிக் களைத்துப் போய்விடுவான் தெரியுமா? வயிறாரச் சாப்பிட்டால் போதிய பலம் வரும், அமைதியாக உட்கார்ந்திருக்கலாம். இப்போது இஷ்டம்போல உட்கார்ந்திருங்கள். வயிறு நிறைந்திருக்கிறது, வருத்தம் இல்லை” என்று அவற்றிடம் சொன்னேன், பிறகு வெளியே போனேன்.

இவ்வாறு இன்னும் இரண்டு நாட்கள் அத்தைக்குத் தெரியாமல் பருந்துகளுக்குத் தயிர் ஊட்டினேன். குறும்பருந்து எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதற்கு அடர்ந்த தயிர் ஆடையை ஊட்டினேன். இப்போது எனக்கு வேலை நிறைய இருந்தபடியால் நான் அனேகமாக வெளியே போகவே இல்லை.அத்தை என்னைப் பார்த்து உள்ளூற மகிழ்ந்து போனாள். அவள் நல்லியல்புடன் புன்னகை பூப்பதைக் கவனிக்காததுபோல நான் நடித்தேன்.

மூன்றாம் நாள் காலையில் நான் பறவைக் கூடத்துக்குள் போனவன், இரண்டு வேட்டைப் பறவைகளும் அமர்கொம்பிலிருந்து இறங்கி, சிறகுகளைச் சிலுப்பிக் கொண்டு லேசாகப் படபடப்பதைக் கண்டேன்.

“சபாஷ்! அமர்கொம்பிலேயே ஒயாமல் உட்கார்ந்திருக்க முடியுமா என்ன! அலுத்துப் போகுமே” என்றேன்.

காலை உணவாக மறுபடி தயிரையே உட்கொண்டன பறவைகள். மதியத்தில் அவற்றுக்கு இறைச்சிப் பணியாரம் கொடுக்கத் தீர்மானித்தேன். இடைவிடாமல் இறைச்சியற்ற உணவையே சாப்பிட்டு அவை புஷ்டியான உணவுக்கு அலந்துபோயிருக்கும். ஆனால் மாலையில் மறுபடி புறவைக் கூடத்துக்குள் போனதும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை! குறும்பருந்து சிறகுகளைச் சுருட்டிக் கொண்டு கால்களைப் பரத்தியவாறு மல்லாக்க விழுந்து இறந்து கிடந்தது. வேட்டைப் பருந்தும் அதே கிடையில் கிடந்தது. அது இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது, ஆனால் நெடுநேரம் தாக்குப்பிடிக்காது என்பது தெளிவாய் இருந்தது... எனக்குக் கிலி பிடித்துவிட்டது. அத்திம் பேருக்கு என்ன சமாதானம் சொல்லுவேன்? தன் பறவைகள்மேல் அவருக்கு உயிர் ஆயிற்றே! இவை எதனால்தான் செத்துத் தொலைந்தனவோ? தயிரினாலா? அழகுதான்! எனக்குந்தான் இறைச்சி பிடிக்கும். ஆனாலும் எத்தனை நாட்கள் வெறும் தயிரையே சாப்பிட்டுக் கடத்தியிருக்கிறேன்! அதுவும் அரை வயிற்றுக்கு! இப்படியும் விபத்து நேர வேண்டுமா? அத்திபேருக்கு என்னதான் சொல்லுவேன்? அவருக்கு எவ்விதச் சமாதானமும் கூற என்னால் முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த நகரத்தில் என் வாழ்வு முடிந்து விட்டது. எல்லாம் தொலைந்தது. நேரம் கடந்துவிடுமுன் வெளியேறிவிட வேண்டும். கால் போன திக்கில் நடையைக் கட்டிவிட வேண்டியதுதான். சின்ன வயதில் அம்மா சொன்ன பழங்கதைகளில் வரும் இளைஞர்கள் போல. அந்தக் காலம் ஒரு வேளை இவ்வளவு மோசமாக இல்லை போலும். நான் தனியன், ஆக்கங்கெட்டவன் என்ற உணர்வினால் எனக்கும் அழுகை வரும்போல் இருந்தது. ஆனால் அழுவதோ கூடாது, அத்தை கவனித்துவிடுவாள்.

பறவைகளின் தீனிக்காக அத்திம் பேர் கொடுத்திருந்த பணத்தில் இரண்டு தன்காக்களும் ஐந்து கோப்பெருக்குகளும் மீதம் இருந்தன. அவற்றை இடுப்பில் செருகிக் கொண்டு வாயிலுக்குப் போனேன். கூரை வேய்ந்த நடைபாதையில் புறாக்கள் இருந்த கூண்டு தொங்கிற்று. இந்தப் பட்சிகள் மேல் எனக்கு மிகுந்த பிரியம். சற்று நேரம் அவற்றை வருத்ததுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் யோசனை செய்தேன். சட்டென ஒரு முடிவுக்கு வந்து கூண்டைக் கொக்கியிலிருந்து கழற்றித் தலையில் வைத்துக் கொண்டு வெளியேறினேன். வீதி அனேகமாக வெறுமையாய் இருந்தது. வீட்டிலிருந்து விரைவில் அப்பால் போய்விடும் நோக்கத்துடன் வேகமாக நடந்தேன். அத்தை என் மனக்கண் முன் தோன்றினாள். நான் கிளம்பியபோது அவள் பூனைகளுக்காக இறைச்சிப் பொங்கல் தயாரித்துக் கொண்டிருந்தாள். நான் இல்லாததைக் கண்டதும் அவள் என்ன செய்வாள்? கட்டாயம் அழுது புலம்புவாள். இந்த எண்ணங்களை விரட்டுவதற்காக நான் பிட்டத்தில் அடித்துக் கொண்டேன். இடையில் பணமும், காற்சட்டைக்குள் செருகிய அங்கித் தலைப்பும் தலைமேல் புறாக்களின் கூண்டுமாக, கதைகளில் வரும் நாயகன் போல தொலைதூரத்துக்கு நடந்தேன், நடந்தேன்... நகருக்கு வெளியே.

“விம்மியவாறு நான் நடப்பேன்
வெகுதொலை சொல்லும் பாதையிலே,
செம்மு துயர்ச் சோலையில் நீ
தேம்பியவாறு இருப்பாய்.

இரு சிறு கரும்புறாக்கள் நாம்,
ஏலாத குஞ்சுகள் போன்றோம்.
பிரிவு நமக்கிடையினிலே
முடிவற்ற பெருவழி போலும்.

ஐயோ என் ஏக்கமும் தூசும்
எரித்திடும் நண்பகல் வெயிலும்,
ஙொய்யென வழியில் பறக்கும்
நுண்கொசு எங்ஙனம் சொல்லும்?

வெந்துயர் வெப்பத்தைப் பற்றி
வேதனைப் பாட்டு நான் புனைவேன்.
இந்த வழியில் பறக்கும்
கொசு இதை என்ன அறியும்?

அந்தோ என்னிடம் கேளாதே,
அறிஞரிடம் கேட்டறிவாய்,
அந்தமில் வழியில் நடக்கும்
அகதிகள் நாம் படும் துன்பம்.”


(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Friday 24 July 2009

குறும்பன் அத்தியாயம் 1: பழைய வட்டாரத்துக் குழந்தைகள்

“தப்பி ஓடி ஒளிய வேண்டுமானால் ஆள்கூட்ட நெரிசலில் அமிழ்வதைவிட மேலானது எதுவும் இல்லை. சந்தைத்திடலின் நடுவே, திறந்த வெளியில் கண்ணுக்கு மறைவதுபோல எந்தக்காட்டிலும் மறைய முடியாது”--இவ்வாறு கூறுகிறான் குதூகல சுபாவமும் சமயோசித சாமர்த்தியமும் உள்ள குறும்பன்—சின்னஞ்சிறு போக்கிரி. எத்தனையோ தடவை தன் கிருத்திருமங்களுக்குப் பிறகு அவன் தலைதெரிக்க ஓடித் தப்ப நேர்ந்தது, எனவே அவன் இந்த விஷயத்தில் அனுபவசாலிதான்! இந்தக்குறும்புக்காரப் பையனின் கதையையே இந்நூல் ஆசிரியர் கூறுகிறார். அவர் தமது பிள்ளைப் பருவத்தை நினைவுகூர்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்திய காலம் அது. அப்போது உஸ்பெக்கிஸ்தானில் வாழ்க்கை இப்போதைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறாய் இருந்தது. சாதாரண மக்கள் பாடு மிகக் கடினமானதாக இருந்த காலம் அது.

“குறும்பன்” என்னும் இந்தச் சுயசரிதை நவீனம் உஸ்பெக்கிஸ்தானின் மக்கள் கவிஞர் கஃபூர் குல்யாமின் (1903 – 1966) உரைநடைப்படைப்புகள் எல்லாவற்றிலும் மக்களால் பெரிதும் விரும்பப்படும் நூல் ஆகும். கஃபூர் குல்யாம் அரசாங்கப் பரிசு பெற்றவர், எத்தனையோ கவிதைத்தொகுப்புகள் இயற்றியவர்.

குறும்பன் அத்தியாயம் 1: பழைய வட்டாரத்துக் குழந்தைகள்

கடை வரிசைகளில் ஜனக் கூட்டம் ஒரேயடியாக நெரியும்.

இல்ஹாமின் பெரிய சாயாக்கடை பாற்கடை வரிசையிலிருந்து மஹக்மா வட்டாரத்துக்குப் போகும் திருப்பத்தில் இருந்தது. அங்கே கிராமபோன் ஓயமால் இசைத்துக் கொண்டிருக்கும். சாஸ்திரீய சங்கீதமும், நடன இசையும், தூய்ச்சி-ஹபீஸ், ஹம்ராக்குல்-கோர், ஹாஜி அப்துல்-அஜீஸ், அல்லது பர்கானாப் பாடகிகள் பாடியுள்ள மெல்லிசைப் பாட்டுக்களும் ஒன்று மாற்றி ஒன்று முழங்கிய வண்ணமாய் இருக்கும். கடை வரிசைகளைச் சேர்ந்த பணக்கார இளைஞர்கள் ஒழிவு நேரத்தை இங்கே கழிப்பார்கள். விரிப்பின் நடுவில், சர்க்கரை, வாதாம் பருப்பு, பிஸ்தா, முட்டை ஹல்வா, புளிப்புமாவு ரொட்டிகள், உப்பல் ரொட்டிகள் முதலியன பெரிய செப்புத் தாம்பாளத்தில் அழகாக வைக்கப்பட்டிருக்கும். ஒரு கிண்ணத்தில் பழக்கூழ் வைக்கப்பட்டிருக்கும். வைக்கோல் பின்னல் வலை சுற்றித் தகைவிலான் குருவிப் படம் பொறித்த மதுப் புட்டிகளும் அடிக்கடி காட்சி தருவதுண்டு. இளைஞகள் வசதியாக உட்கார்ந்து உரக்கப் பேசுவார்கள், வேடிக்கைக் கதைகள் சொல்லுவார்கள், இடையிடையே இடிக்குரலில் சிரிப்பார்கள். சாயாக்கடையில் எப்போதுமே இடத் தட்டுப்பாடு. தொலைவிடங்களிலிருந்து சந்தைக்கு வரும் குடியானவர்கள், ஏழைக் கம்மியர்கள், கஸாஃகுகள், கிர்கீஸியர்கள் ஆகியோரோ, இங்கே நுழைவதே வீண்.

கடைப் பணியாள், வழுக்கைத்தலை அஸ்ரா என்ற பட்டமும் பெயரும் உள்ள ஒடிசலான வாலிபன். பொத்தான்கள் போடாத லேசான நீளங்கியை எப்போதும் அணிந்து இள நீலப் பட்டுக் குட்டையை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருப்பான் அவன். வட்டப் புள்ளிகள் இட்ட மஸ்லின் குட்டை அவன் தோளில் தொங்கும். காலில் தோல் ஜோடுகள் அணிந்திருப்பான். கடைக்கு வந்தவன் எவனாவது “அஸ்ரா!” என்றோ “வழுக்கைத் தலையா!” என்றோ குரல் கொடுக்க வேண்டியதுதான் தாமதம், “என்ன வேண்டும் முல்லா-அகா, சாயாவா, ஹுக்கவா?” என்று அக்கணமே அருகில் ஓடிப் போய்ப் பணிவாகக் கேட்பான்.

கண் சிமிட்டும் நேரத்துக்குள் அவன் மறுபடி வந்துவிடுவன்—ஒரு கையில் சிறு தேக்கெண்டியும் இன்னொரு கையில் இரண்டு சின்னச் சீனக் கோப்பைகளுமாக. இல்லாவிட்டால் பளிச்சிடும் செப்பு ஹுக்கவின் தலைப்பகுதியில் புகையிலை நிறைப்பான், உரக்க ஓசையுடன் இரண்டொரு முறை புகை இழுப்பான், பின்பு வணக்கமாகக் குனிந்து, “இந்தாருங்கள், முல்லா-அகா” என்பான்.

இந்தச் சாயாக் கடையில் எத்தனையோ விந்தைப் பொருள்களைக் காணலாம். ஆனால் இவற்றில் எல்லாம் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது வாயில் அருகே விட்டத்திலிருந்து தொங்கிய தங்க முலாம் பூசிய பெரிய கூண்டுதான். தீய கண் படாமல் காப்பதற்காகக் கட்டிய பல வித ரட்சைகளும் பல வண்ணச் சிறு கொடிகளும் அதை அலங்கரித்தன. அந்தக் கூண்டில் இருந்தது ஒரு கிளி—ஆண்டவன் ஆணை, உண்மையன உயிருள்ள கிளி! அதன் இறகுகள் வானவில்லின் எல்லா நிறங்களுடனும் ஒளிர்ந்தன—சித்திரத் தையல் வேலை செய்யும் ஆயஷாவின் பெட்டியில் இருக்குமே, பட்டு நூல்கள், அவை மாதிரி. நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ரோஜா, பழுப்பு, கருஞ்சிவப்பு, இளம் பச்சை—உலகில் உள்ள எல்லா நிறங்களுமே! ஆனால் முக்கியமானது அந்தக் கிளி பேசுவதுதான். அது வெகு உற்சாகமாக, வேடிக்கையாகப் பேசும். இப்போதுதான் பேசக் கற்றுக் கொண்ட மூன்று வயதுப் பெண்ணின் குரல் போலக் கணீரேன்று அதிர்ந்து ஒலிக்கும் அதன் குரலை இப்போதுகூட நான் கேட்கிறேன்.

“அஸ்ரா, அஸ்ரா, வந்தவருக்கு என்ன வேண்டும் என்று கேள். ஒரு சாயா, ஒரு ஹுக்கா. வாருங்கள் முல்லா-அகா, வாருங்கள் பாய் சாகேப்...”

சிறுவர்களான நாங்கள் அழுக்கேறிய வெறுங்காலர்களின் கூட்டமாகச் சந்தையில் அலைந்து திரிவோம். முரட்டுக் கைத்திறித் துணியில் தைத்த சட்டைகளும் காற் சட்டைகளும் அணிந்திருப்போம். சில வேளைகளில் தனித்தனியாகச் சிதறியும் வேறு சில வேளைகளில் மறுபடி ஒன்று சேர்ந்தும் எங்கும் குடுகுடுவென்று ஓடித்திரிவோம். சாயாக் கடையே, எப்போதும் எங்களைக் கவர்ந்து இழுக்கும்.

“செல்லக்கிளி, ஏய் செல்லக்கிளி!” என்று கொஞ்சலாக அழைப்போம்.

வழுக்கைத்தலை அஸ்ரா முகத்தைக் கொடுரமாக வைத்துக்கொண்டு எங்கள்மேல் பாய்வான். அகப்பட்டவனுக்கு நன்றகக் கிடைக்கும் குத்துகள். கிளியோ எங்கள்மேர் வசை மாரி பொழியும்—ஆபாச வசவுகளுந்தான்.

ஆனால் சந்தையில் எங்கள் அக்கறையை முழுமையாகக் கவர்ந்தவர்கள் கிறுக்கர்கள் தாம். தாஷ்கந்த் நகரில்தான் எத்தனை கிறுக்கர்கள்! எண்ணித் தொலையாது! கரீம்-ஜின்னி, செம்பட்டையன், ஜுப்த்-கப்தார், மைராம் ஹான், பைத்தியங்களில் எல்லாம் பைத்தியம், மௌல்வியின் மனைவி, ஹால்-பராங்க், தாஜீஹான், அலீம், அலாஸ்...இவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கே உரிய வகையில் கிறுக்குகள். தனித் தனி விதத்தில் பைத்தியம் பிடித்தவர்கள். உதாரணமாக ஜுப்த் –கப்தார் அதிகாரிகள் மேல் உள்ள வெறுப்பால் பைத்தியம் பிடித்தவன். ஜார் நிக்கொலாய், காவுப்மான், மொச்சாலவ், திருடன் நபி என்ற பட்டப்பெயர் பெற்ற போலீஸ் சார்ஜண்டு, எல்லோரையிம் ஒன்றாக விரவித் திட்டி நொறுக்குவான். பழக்கம் இல்லவிட்டல் அந்த வசவுகளைக் கேட்கவே பயங்கரமாய் இருக்கும். கரீம்-ஜின்னியும் வாய் ஓயாமல் வைதுகொண்டிருப்பான். இவனுக்கு அல்லாவோ, தீர்க்கதரிசியோ, ஹாஜியோ, மௌல்வியோ, காஜியோ, யாரானாலும் ஒன்றுதான். எல்லோரையும் இவன் ஏழு தலைமுறைவரை வைது தீர்த்துவிடுவான். நாக்கில் நரம்பில்லாமல் திட்டி நொறுக்குவான். ஒரு காலத்தில் இவன் நெசவுகாரனாக இருந்தான். கைத்தறித் துணி நெய்து சந்தையில் விற்று வந்தான். அப்புறம் மில் துணி ஏராளமாகக் குவிந்துவிடவே கரீம் குடும்பத்தைப் போஷிக்க வகை அற்றவன் ஆகிவிட்டான். கடைசியில் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. ஹால்-பராங்க் விஷயமும் இப்படித்தான். அவன் கோக்கந்தைச் சேர்ந்தவன். மகமல் துணி நெய்துவந்தான். இந்தக் கலையில் தேர்ந்தவனாக மதிக்கப் பட்டான். அவனுடைய தொழிற்கூடமும் தறியும் தீக்கிரையாகிவிட்டதும் அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. மைராம்ஹானோ? பைத்தியங்களில் எல்லாம் புகழ்பெற்றவன் இவன் என்று சொல்லலாம். இவனுடைய உண்மைப் பெயர் மாமத்கரீம். கருமானாய் இருந்தான். கைதேர்ந்த கருமான். இவன் தொட்டதெல்லாம் துலங்கும். எவனுடைய தொழிற்கூடம், கடை அல்லது வீட்டிற்கு இவன் போனானோ, எவன் இவனுக்குத் தன் கையால் உணவு ஊட்டினானோ, அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று எண்ணப்பட்டது. மைராம் ஹானுக்குத் தங்கள் கைகளால் புலவு ஊட்டக் கணக்கில்லாத பேர் சித்தமாயிருந்தபடியால் இவன் தன் கையால் சாப்பிட்டதே இல்லையாம், ஜனங்கள் சொல்லுவார்கள். தொட்டில்கள், தறிச்சீப்புகள், கதிர்கள் ஆகியவை செய்வதில் தேர்ந்த கம்பியர்கள் இவனுக்கு உணவு ஊட்டுவதைப் பாக்கியமாக மதித்தார்கள்... மொத்தத்தில் அவன் எல்லாருக்கும் இனியவனாய் இருந்தான். கம்பியில் கோத்த உலோக உடைசல்களைச் சுமந்தவாறு, வேடிக்கை பேசிக்கொண்டும் கண்ணைப் பறிக்கும் புன்னகையால் ஒளி வீசிக்கொண்டும் தெருக்களிலும் கடைவீதிகளிலும் திரிவான். இயந்திரத் தொழிற்சாலைகள் உலோக சாமான்கள் தயாரிக்கத் தொடங்கியதும் இவனுடைய தொழிலுக்கும் இவனுக்கும் அழிவு வந்துவிட்டது. நாளடைவில் யாருக்கும் தேவையற்றவன் ஆகிவிட்டான். வறுமையும் ஏக்கமும் காரணமாக இவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.

மௌல்வியின் மனைவி என்ற பட்டப்பெயர் கொண்ட கிறுக்கி, பழுப்பேறிய, வடிவமைந்த மேனியும் மெல்லிய கரும் புருவங்களும் உள்ளவள். வயது சுமார் நாற்பத்தைந்து இருக்கும். ஒரு காலத்தில் அவள் மிட்டீஹான்-துராம் என்ற மௌல்வியின் மனைவியாக இருந்தது உண்மையே. அவன் கலந்தர்ஹான் வமிசத்தவன். ஒரு முறை கணவன் தங்கையுடன் சரசமாடுவதை இவள் கண்டு விட்டாளாம். இதனாலேயே இவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாம்.

அவாஸ் என்ற ஒருவன் மட்டுமே உண்மையில் கிறுக்கன் அல்ல, வேலை செய்ய விருப்பம் இல்லாமையால் பைத்தியம் போல நடித்தான்.

ஆக்கங்கெட்ட இந்த எல்லாருடையவும் கதைகளை நாங்கள் அறிந்திருந்தோம். பெரியவர்கள் எங்கள் முன்னிலையில் எத்தனை எத்தனையோ தடவைகள் இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்பப் பேசியிருந்தார்கள். ஆனாலும் இரக்கம் காட்டச் சிறுவர்களுக்கு நேரம் கிடையாது. அதைப் பற்றி நாங்கள் நினைக்கவே இல்லை. கண்காட்சிகள் எங்களுக்கு அபூர்வமாகவே காணக் கிடைத்தன. ஆகவே முடிந்தவரை நாங்களே கற்பனை செய்து கொண்டோம். பைத்தியங்களை வைத்துக் கொண்டு நேர்த்தியான நிகழ்ச்சிகள் ஜோடனை செய்ய முடிந்தது. சில வேளைகளில் அவர்களைப் பாடவோ ஆடவோ சொல்லுவோம். ஆனால் பெரும்பாலும் இரக்கமின்றிக் கோரணி செய்து நகையாடுவோம், அவர்கள்மேல் கற்களை எறிவோம். அவர்களுக்கு வெறி பிடிக்கும்போதோ, எங்களுக்கு ஒரே கொம்மாளம். அவர்கள் எங்களை விரட்டிக் கொண்டு வருவார்கள். நாங்கள் விலகித் தப்ப முயல்வோம். ஆனால் சில வேளைகளில் வசமாக மாட்டிக் கொள்வோம், அவர்களிடம் அடி வாங்குவோம்... சுருங்கச் சொன்னால், இன்பக் கிளுகிளுப்புக்கும் காட்டமான உணர்ச்சிகளுக்கும் பஞ்சம் இல்லை. சிரிக்கவும் நிறைய வாய்த்தது. அதிலும் இரண்டு மூன்று பைத்தியங்கள் ஒரே சமயம் வெறி கொண்டுவிட்டாலோ, கேட்கவே வேண்டியதில்லை. தாஜீஹான் என்ற கிறுக்கன் ஒரு தரம் மண்வெட்டிக் காம்பை ஆட்டியவாறு, வழிச் செல்பவர்கள் எல்லோரையும் தெருவின் ஒரு சாரி வழியே நடக்கும்படி விரட்டத் தொடங்கினான்.

“டேய், இங்கும் அங்குமாக நடக்காதீர்கள்! ஒழுங்கு வேண்டும், ஒழுங்கு!” என்று கூப்பாடு போட்டான்.

அலீம்-ஜின்னி வரும்வரையில் அவனை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“டேய், பேயா, இங்கே என்ன குட்டை குழப்புகிறாய்?” என்று அதட்டினான் அலீம்-ஜின்னி.

“இவர்கள் ஒரே சாரியில் ஏன் போகமாட்டோம் என்கிறார்கள்? ஜார் நிக்கொலாயின் ஆட்சியில் ஒழுங்கு இருக்க வேண்டும்! கட்டுப்பாடு!” என்றான் தாஜீஹான்.

“அடே, அடி மடையனடா நீ, தாஜீ, படு முட்டாள். நமது பூமி எப்படிப் பட்டது, தெரியுமா? தராசுத் தட்டுகள் போல! எல்லோரும் ஒரே பக்கம் திரண்டால் என்ன ஆகும்? தாம்பாளம் போல அது ஒரு பக்கம் சாயும், நாம் எல்லாரும் குர்தூம்-தரியாவில் விழுந்து முழுகிப் போவோம்!” என்றான் அலீம்-ஜின்னி.

தாஜீஹான் மலைத்துப்போய், திறந்த வாயுடன் சற்று நின்றான், தலையை ஆட்டினான், பின்பு அப்பால் போய்விட்டான். ஒரு பைத்தியக்கார எண்ணத்தை அதைவிடப் பைத்தியக்காரத்தனமான வேறோர் எண்ணம் தான் சிலாம்பை ஊசி எடுப்பது போல அகற்ற முடியும் என்று தெரிந்தது.

இந்த மாதிரி முடிந்த வகையில் எல்லாம் பகல் பொழுதைப் போக்குவோம். எங்களுக்குத் தெரியாமலே மாலை வந்துவிடும். அஸ்தமனத்துக்கு முந்திய மூன்றாம் தொழுகை முடிந்ததுமே வீடுகளுக்கு ஓடுவோம். கோதுமை மாவுக்கூழோ பறங்கிக்காய், அல்லது சாதத்துடன் உளுத்தங் கஞ்சியோ சேமியாக் கஞ்சியோ—வீட்டில் எது கிடைத்ததோ அதை—சாப்பிட்டுவிட்டு மறுபடி தெருவுக்கு ஓடிவிடுவோம். வானத்தில் கண்ணுக்கு இதமான கோடைகால விண்மீன்கள் தெளித்திருக்கும்...

எங்கள் வட்டாரம் ஒரு புறம் திக்கான்லி-மஜார் (“முள் கல்லறை”) வட்டாரத்தையும் மறு புறம் குர்கான்தாகீ (“அடித்தளத்தில்”) வட்டாரத்தையும் ஒட்டினாற்போல் இருந்தது. பிரதான வீதியின் இடப்பக்கம் இருந்த ஆளற்ற அடை சந்துகளில் நாங்கள் குழுமுவோம், மாலை வரை விளையாடுவோம். மாலையில் தான் விளையாட்டு மும்முரமாகும், அதிலும் நிலாக்காலத்தில். கோடையிலும் வசந்தத்திலும் இலையுதிர் காலத்திலும் எங்கள் வீதிகள் புழுதி நிறைந்து மெத்தென்று இருக்கும். அவற்றில் ஒடியாடுவது ஒரே இன்பம். குளிர்காலத்தில் தான் அவற்றில் கண்டபடி சேறும் சகதியும் நிறைந்துவிடும். சிலருக்கு முழங்கால் வரை வரும், நாங்களோ, இடுப்பளவு சேற்றில் புதைந்துவிடுவோம். அப்போது நாங்கள் சதுக்கத்திலோ அல்லது வீட்டு முகப்புக்களிலிருந்து வீதிக்கு வருவதற்கான கூரை வேய்ந்த நடைபாதைகளிலோ விளையாடுவோம். நகராட்சி மன்றத்தால் நாட்டப்பட்ட கம்பங்களில் மங்கிய மண்ணெண்ணெய் விளக்குகள் எரியும். விளக்குக்காரன் மாலை தோறும் ஏணியும் கையுமாக வந்து, எண்ணெய் போட்டு, திரிகளைக் கத்தரித்து, சிம்ணியைத் துடைத்து விளக்கேற்றுவான். காலைதோறும் மறுபடி வந்து விளக்குகளை அணைப்பான். இருட்டில் கொஞ்ச தூரம் போக வேண்டியதுதான், இந்த விளக்குகள் பூனைக் கண்கள் போல லேசாக மினுமினுக்கும். அவற்றின் சிவந்த சுவாலைகள் வீதியில் ஒளி பரப்புவதில்லை. குறுகிய நடைபாதை வழியே செல்பவர்களை, “இந்தா, என் மேல் மோதிக் கொண்டுவிடாதே! நான் இங்கே இருக்கிறேன்” என்று எச்சரிக்க மட்டுமே செய்யும்.

இந்த மாதிரித் தெரு விளக்கின் வெளிச்சத்தில் என்னதான் செய்ய முடியும்? உரையாடுவது கூட அசௌகரியம். பெரியவர்கள் மாலை நேரக் கடைசித் தொழுகை முடிந்ததுமே அவரவர் வீடுகளுக்குப் போய்விடுவார்கள். வீதிகள் வெறுமை ஆகிவிடும். காக்கைகூடப் பறக்காது. நாங்கள் மட்டுமே எஞ்சி இருப்போம். ஒளிந்து விளையாடுவதற்குச் சரியான நேரம்...

ஆனால் நாங்கள் வேறு பல வித விளையாட்டுக்களும் ஆடுவது உண்டு. “குராஷ்” என்று சொல்லப்படும் குஸ்தி, “பாத்மன்-பாத்மன்” என்ற விளையாட்டு. “பாத்மன்-பாத்மன்” ஆட்டக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் முதுகைக் காட்டியவாறு இணை இணையாக நிற்பார்கள், கைகளால் ஒருவரை ஒருவர் இறுகப் பிடித்துக் கொண்டு மாற்றி மாற்றி முதுகில் தூக்கிக் கொள்வார்கள். “வெள்ளைப் பாப்ளார், பச்சைப் பாப்ளார்” என்று ஒரு விளையாட்டு. இதில் சிறுவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிவார்கள். ஒவ்வொரு குழுவும் தனக்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும், ஆட்டக்காரர்களில் ஒருவனை மனதுக்குள் தெரிந்தெடுக்கும். யாரை என்று எதிர்க்கட்சி ஊகித்து அறிய வேண்டும். சரியாக ஊகிக்கும் குழுவினர் எதிர்க் குழுவினரின் முதுகுகள்மேல் ஏறிச் சவாரி செய்வார்கள். இன்னும் என்னென்ன? “மிண்டி-மிண்டி” (ஒட்டக விளையாட்டு), திருடன் விளையாட்டு, “என் பட்சியின் தலை” என்ற விளையாட்டு, இப்படி எத்தனையோ.

உள்ளதைச் சொன்னால் இந்த விளையாட்டுக்கள் எல்லாம் ஒரளவு ஒரே மாதிரி இருந்தன. பக்கத்துப் பையன் முதுகில் சவாரி செய்வதில் இவ்வளவு இன்பம் கிடைப்பது ஏன்? “என் பட்சியின் தலை” என்ற விளையாட்டிலும் பையன்கள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து ஒவ்வொரு கட்சிக்கும் ‘தாய்’ எனப்படும் தலைவனைத் தெரிந்தெடுத்துக் கொள்வார்கள். ‘தாய்கள்’ ஏதேனும் துணியை எடுத்து, சுருட்டி முடிச்சுப்போட்டு ஏதேனும் பறவையின் உருவத்தை அதற்குத் தர முயல்வார்கள். பின்பு அது என்ன பட்சி என்று தங்களுக்குள் பேசி முடிவு செய்வார்கள். அவர்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை இரண்டு கட்சிகளும் பொறுமையுடன் காத்திருக்கும். அப்புறம் ஒரு ‘தாய்’ துணிப் பறவையைக் காட்டிக் கேள்வி கேட்பான்:

“என் பறவையின் தலை இதோ, இப்படி இருக்கும், உடல் இதோ, இப்படி இருக்கும். சொல்லு, அது என்ன பட்சி?”

“பருந்து!” என்று கத்தும் கூட்டம்.

“இல்லை, சரி இல்லை!”

“கோழி!”

“கெக்கே, சரி இல்லையே!”

“காஞ்சனப் பறவை.”

“தப்பு!”

“கோட்டான்!”

‘தாய்கள்’ தோல்வியை ஒப்புக்கொள்வார்கள்.

“சரியாய்ச் சொல்லிவிட்டான், சரியாய்ச் சொல்லிவிட்டான்!” என்று கொம்மாளம் கொட்டுவார்கள் பையன்கள்.

எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் சரியாய்ச் சொன்னானோ, அந்தக் கட்சிப் பையன்கள் எதிர்க்கட்சியினர் முதுகுகள்மேல் ஏறிக்கொண்டு, “ஹை, ஹை, என் கழுதைக் கண்ணே !” என்று ஒன்றாகக் கத்தியபடி குறித்த இடம்வரை சவாரி செய்வார்கள். அங்கே எவனாவது ஒருவன் ‘தாயிடம்’ கேட்பான்.

“சவாரியா, நடையா?”

“கீழே இருப்பது மேலே” என்று ‘தாய்’ சொன்னால் கழுதைகளும் சவாரிக்காரர்களும் இடம் மாறிக்கொள்வார்கள்...

சவாரி செய்கையில் நாங்கள் பாட்டுக்கள் பாடுவோம். அம்மாதிப் பாட்டுக்கள் எங்களிடம் ஜாஸ்தி. உதாரணமாக இதோ ஒரு பாட்டு.

“ஹும், ஹும், அதிகாரம் இருந்தால்,
ஜம்மென்று தின்று களித்திடலாம்,
ஹான், ஹான், உமர் அலி,
பேக், பேக், மாதாலி
உம் அதிகாரம் எமக்குத் தாரும்,
ஜம்மென்று உண்டு மகிழ்ந்திடுவோம்!”

இப்படி விளையாடுவோம், பாடுவோம், கத்துவோம். கடைசியில் எவளாவது கிழவி பொறுமை இழந்து சபிப்பாள்:

“நீங்கள் படக்கென்று போக, சைத்தான் மக்களா!”

...ஆம், இன்னொரு விளையாட்டு உண்டு. “அம்மணப் பந்தயம்” என்று அதற்குப் பெயர். ஆனால் இது மிகவும் சாதாரணமானது. இரண்டு குல்லாக்களை எடு்த்துப் பொருத்துக்களுடன் சேர்த்துக்கட்டுவோம். குதிரைக் காதுகள் போல் இருக்கும் அவை. சட்டை நுனியை வால்போன்று பின்னால் முறுக்கிக் கட்டுவோம். பின்பு வேவ்வேறு தூரங்களுக்கு ஓட்டப் பந்தயம் விடுவோம். வழக்கமாக நாங்கள் திக்கான்லி-மஜார், காரத்தாஷ், யலான்காரீ, அல்மாஸரா, திவான்பேகி ஆகியவற்றின் வழியாக ஓடி மறுபடி திக்கான்லி-மஜார் சேர்ந்து விடுவோம். இது சுமார் மூன்று மைல் தொலைவு. முதலாவதாக ஓடி வருபவன் கைதட்டல்களுடனும் பாராட்டுரைகளுடனும் வரவேற்கப்படுவான். பல வகையிலும் அவனுக்கு மரியாதை செய்யப்படும். அடுத்த பந்தயம் வரை அவன் எல்லாரையும்விட பலசாலியாக மதிக்கப்படுவான் என்பது முக்கியமானது...

பலசாலிகள் தவிர, பணக்கரார்களும் எங்களிலே உண்டு. ஆனால் எங்களுடைய செல்வமும் தனி வகைப்பட்டது. வர்ணம் பூசப்பட்டு, காரீயத் துண்டு நிறைத்த ஆட்டு எலும்பு—இதற்கு ஆல்ச்சிக் என்று பெயர்—எல்லாவற்றிலும் மதிப்பு உள்ளதாகக் கருதப்பட்டது. நூற்புக் கதிர் செய்யும் கம்மியர்கள் எங்களுக்காகச் செதுக்கித் தரும் எலும்பு மட்டையும் கொட்டைகளும் கூட மதிப்புள்ளவையே. வேறு ஒன்றும் இல்லாவிட்டால் ஏதேனும் பழைய கடிகாரத்தின் மூடியாவது இருக்க வேண்டும்... கோடைகாலப் பகல் நேரத்தில் வெக்கை மிகுதியாக இருக்கும், கடை வீதியிலோ பிறத்தியார் தெருக்களிலோ ஓடித்திரிய முடியாது. குளிர்காலத்திலோ சேறும் சகதியுமாக இருக்கும். அம்மாதிரி நேரங்களில் எங்கள் சொத்துக்கள் பயன்படும். ஆல்ச்சிக்குகளையும் கொட்டைகளையும் பந்தையும் கிட்டிப்புள்ளையும் வைத்துக் கொண்டு எத்தனையோ விதமான விளையட்டுக்கள் ஆடுவோம். “யோர்-யோர்” எனப்படும் முற்றுகைப் போர் விளையாட்டு, அம்பு எய்யும் விளையாட்டு, குதிரைத் திருடன் விளையாட்டு முதலியவை வேறு.

ரம்ஜான் விரத மதத்திலோ இவற்றோடு கூட இன்னும் பல சுவையான பொழுதுபோக்குகள் சேர்ந்து கொள்ளும். மாலையில் நாங்கள் வீடு வீடாகப்போய் “ரம்ஜான்” பாடுவோம். அஸ்தனத்துக்குப் பிறகு “நமாஸ்ஷமா” எனப்படும் நான்காவது தொழுகை நேரம் வந்ததும் நாங்கள் ஒவ்வொரு மசூதியாகச் சுற்றி வந்து முல்லாக்கள் அசைந்தாடியவாறு ராகத்துடன் குரான் ஓதுவதைக் கேட்போம். நள்ளிரவில் விரதம் முடிந்து எல்லோரும் பொதுவில் உணவு அருந்தும் வேளை வரை இப்படிப் பொழுதைக் கடத்துவோம்.

இதெல்லம் இருந்தாலும் எங்களுக்கு ஒழிவு நேரம் வேண்டிய அளவு இருந்தது. பள்ளிக்கூடத்தில் நாங்கள் சொற்ப நேரமே கழித்தோம். வேலையோ... எங்களுக்கு என்ன வேலை இருக்க முடியும்? சில வேளைகளில் எங்கள் பெற்றோருக்கே வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும். இந்த அழகில் சின்னப் பையன்களை வேலைக்கு அமர்த்துவது எங்கே? எங்களது போன்ற வட்டாரங்களில் வசித்தவர்கள் வழக்கமாகச் சிறு கைத்தொழிலாளர்கள். குடமுழவுகளுக்கும் தம்பட்டங்களுக்கும் தோல் பதனிட்டு இறுக்குவது, கைத்துவாலைகளும் கயிறுகளும் செய்வது முதலிய வேலைகளில் தேர்ந்த தோல் தொழிலாளர்கள், உலோக இறுக்கிகளின் உதவியால் பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களைச் செப்பனிடுபவர்கள், நீர் சுமப்பவர்கள், சுமைகாரர்கள், குதிரைக்காரர்கள், காவலாட்கள், உடம்பைத் தேய்த்துப் பிடித்து விடுபவர்கள், சுற்றுப்புற மசூதிகளின் சில்லறைப் பணியாட்கள் முதலியோர் இவர்கள். ஆனால் எங்கள் வட்டாரத்தில் பெரும்பலாக வசித்தவர்கள் அச்சுக்கூடங்களிலும் மிட்டாய்த் தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்தவர்கள். இருந்தாலும் எங்கள் வட்டாரத்தில் எத்தனை எத்தனையோ வகைத் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் என் தோழர்களின் பெற்றோர். அவர்களை எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

என் தோழன் அமன் என்பவனின் தகப்பனார் துர்ஸுன் பாய்- அகா பேனாக்கத்திகள் தயாரித்தார். அவர் மனைவி அமனின் சிறு வயதிலேயே இறந்து விட்டாள். அவர் மறு மணம் செய்து கொள்ளவில்லை. எனவே அமன் ஒரே மகனாக வளர்ந்தான். ஆபித் என்ற பெயருள்ள இரண்டு பையன்கள் எங்களிடையே இருந்தார்கள். ஒருவனை “நாய்க்குட்டி ஆபித்” என்றும் மற்றவனைச் “சீலைப் பேன் ஆபித்” என்றும் பட்டப் பெயர்களால் அழைத்தோம் நாங்கள். “நாய்க்குட்டி ஆபி்”தின் தகப்பனார் ஜாஹித்-அகா பழைய சாமான்கள் வாங்கி விற்பவர். “சீலைப் பேன் ஆபி”தின் தகப்பனார் ரஸூல்காஜி-அகா வாள் உறைகள் செய்பவர். ஹுஸ்னிபீயின் தகப்பனர் அமன்பீ தோல் சமான்கள் தயாரிப்பவர். அவர் குதிரைக் கழுத்துப்பட்டைகளும் நுகங்களும் செய்பவர்.

ஸலீஹ் என்பவரின் தகப்பனார் யூனுஸ்-அகா, பாடகர். துராபாயின் தந்தை ஜியாமத்-அகா பருத்தி வியாபாரி. அப்துல்லாவின் தகப்பன அஜீஸ்-அகா மண்ணெண்ணெய் வியாபாரி. ஒரு பெரிய பீப்பாயை வண்டியில் ஏற்றிக் கெர்ண்டு தெருத்தெருவகப் போய் மண்ணெண்ணெய் விற்றார். வண்டி, குதிரை, பீப்பாய், மண்ணெண்ணெய்—எதுவுமே அவருக்குச் சொந்தம் அல்ல என்று சொல்லவே தேவையில்லை. அவர் நொபேல் கம்பெனியின் வேலையாள், அவ்வளவுதான்.

புலாத்ஹோஜாவின் தகப்பனார் விற்பனை ஏஜெண்டு. நாட்டு எல்லையின் இரு புறங்களிலும் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு அவர் பயணம் செய்வார். சில வேளைகளில் நீண்ட காலம் கண்ணிலேயே பட மாட்டார். புலாத்ஹோஜா தாயின் வயிற்றில் ஆறு மாதக் கருவாக இருந்தபோது கருப்பையோடு இணைந்து அங்கேயே தங்கிவிட்டானாம்—காஷ்காரில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த தகப்பனார் வரும்வரை. அவர் ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்தாராம். தகப்பனார் திரும்பி மூன்று மாதங்கள் கழிந்ததும் புலாத்ஹோஜா பிறந்தானாம், ஜனங்கள் பேசிக்கொண்டார்கள்.

நாங்கள் யூல்தாஷ் என்பவன் வீட்டில் குழுமுவது வழக்கம். அவன் வீட்டில் பெரியவர்கள் யாரும் கிடையாது. தாயார் வெகு காலத்துக்கு முன்பே இறந்து போனாள். செம்மானாயிருந்த தகப்பனார் பிறகு நோய்ப்பட்டுக் காலமாகி விட்டார்.

எங்கள் வட்டாரத்தில் செம்மான் வேலை மீர் அஜீஸ்-அகா என்பவரும் செய்துவந்தார். நான் கூட வேலை பழகுவதற்காக அவரிடம் அனுப்பப்பட்டேன். அவர் குறிப்பிடத்தக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனர் ஸலீம்பாய்-ஸூபி எங்கள் வட்டரத்தில் குடியேறியது முதல் கசாப்புக் கிடங்கிலிருந்து எலும்புகளைக் கொண்டுவந்து அவற்றை வேகவைத்துக் கொழுப்பு எடுப்பார். ஆனால் ஒரு காலத்தில் அவர் யாக்கூப்பேக்கிடம் படைவீரராக இருந்தார். காஷ்கார் கிளர்ச்சியின் போது ஒரு சீனப் பெண்ணை வெற்றிச் சின்னமாகக் கவர்ந்து வந்தார். குதிரைச் சேணத்தின்மேல் ஏற்றி அவளைக் கொண்டுவந்து, இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்து, பிறகு மணந்து கொண்டார். அவளுடைய சீனப் பெயரை பஹ்தீபூவி என்று மாற்றினார். பஹ்தீபூவியின் மூன்று புதல்வர்களில் இளையவர் மீர்அஜீஸ்-அகா.

என் அண்டை அயலார் எல்லாரையும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறேன?... அடத் தூ, எல்லாரிலும் முக்கியமானவர்களை அனேகமாக மறக்கத் தெரிந்தேன். ஆனால் காலந்தான் எப்படி மாறுகிறது! அந்தக் காலத்தில் அவர்கள் முதல்வர்களாக, உண்மைப் பணக்காரகளாக இருந்தார்கள். தொழிற்சாலைச் சொந்தக்காரர் கரீம்-கோரி, மெழுகு வர்த்தகர் யாக்கூப்-கவாக், வர்ண வர்த்தகர் அப்துல்லாஹாஜி ஆகியோர் இவர்கள். மசூதியில் எல்லாருக்கும் முன்னே நிற்பார்கள் இவர்கள்! எங்கள் வட்டாரத்தின் பக்கத்தில் இரண்டு மசூதிகள் உண்டு—ஒன்று திக்கான்லி மஜாரிலும் மற்றது குர்கான் தாகியிலும். இவற்றில் எந்த எந்த மசூதிக்கு எந்த எந்தப் பிரமுகர்கள் போனர்கள் என்பதுதான் நினைவில்லை. ஒவ்வொரு மசூதியையும் சேர்ந்த பள்ளிக்கூடம் உண்டு. இமாம்களே ஆசிரியர்கள். திக்கான்லிமஜாரில் ஷம்ஸீ-தோம்லாவும் குர்கான்தாகியில் ஹஸன்பாயும். நான் குர்கான்தாகியில், ஹஸன்பாயிடம் படித்தேன். அவர் குரானிலிருந்து பொறுக்கிய பகுதிகள் கொண்ட “ஹப்தியாக்” முறைப்படி அல்ல, “உஸ்தாதி- அவ்வல்” என்ற நவீனப் பாடப் புத்தகப்படிச் சொல்லிக்கொடுத்தார். மற்றவர்களைவிட எவ்வளவோ விரைவில் எழுதப் படிக்கக் கற்றுத் தந்துவிட்டார் அவர்...

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)

Monday 6 July 2009

குறும்பன் அத்தியாயம் 9: ஆட்டு மந்தையை ஓட்டினோம்

அத்தியாயம்: 9 ஆட்டு மந்தையை ஓட்டினோம்

மறுபடி நடை!...

மீண்டும் அலைச்சல், மீண்டும் நாடோடி வாழ்க்கை!... வேற்றுப்பறவைக்கூட்டிலிருந்து விழுந்துவிட்ட குயில் குஞ்சு நான். இப்போது விதி என்னை எங்கு இட்டுச் செல்லும்? எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்?

ஜமீன்தாரை நாசமாய்ப் போகும்படி ஆயிரந்தடவை சபித்தேன். இந்த வகையில் சம்பளம் வாங்கிக்கொள்ள இசைந்த தற்காக என்னையே நொந்து கொண்டேன். ஆப்பிள்களின் சுமையால் நெளிந்தவாறு தளர்நடை நடந்தேன். “ரொக்கப் பணம், மகனே, ரொக்கப் பணம்! எடுத்துப் போவது லேசு, மறைத்து வைத்துக்கொள்ளச் சௌகரியம்...” என்று மகாபுனிதரான மௌல்வி என்னிடம் சொன்னாரே, அது சரியான வார்த்தை. இந்தச் சனியன் பிடித்த இழவை மறுபடி கண்ணிலேயே படாதபடி எங்கேனும் மறைத்து வைக்க எனக்குச் சம்மதந்தான். ஆனாலும் ஒரு மாதம் உழைத்துச் சம்பாதித்ததை இப்படி வீணாக எறிந்துவிட வருத்தமாய் இருந்தது.

இதற்குள் சாலை மலைப்பாங்கான இடம் வழியே சென்றது. மணம் வீசும் ஸ்தெப்பிப் புறகள் சுற்றிலும் எங்கும் தளதளவென்று வளர்ந்திருந்தன. தொடுவானில் அஸ்தமனச் செவ்வொளி பெருகியது. கிழக்கேயிருந்து இருள் படர்ந்தது. குன்றுகளின் பக்கத்துச் சரிவுகள் கறுப்பாய்த் தோற்றம் அளித்தன. தொலைவில், சாலையிலிருந்து ஒரு புறம் விலகி இருந்த கூடாரத்தைக் கண்டு அதை நோக்கி விரைந்தேன். கூடாரத்தின் பக்கத்தில் ஒருவரும் இல்லை. அவிந்து கறுத்த அடுப்பும் வெற்றுப் பாத்திரமும் மட்டுமே இருந்தன. நாய்களோ, கால்நடைகளோ இல்லை. கூடாரத்தின் கதவைத் தட்டினேன். “யார் அங்கே?” என்ற கம்மிய குரல் உள்ளிருந்து கேட்டது. “ஆண்டவனின் விருந்தாளி” என்றேன். வீட்டுக்கரர்கள் எட்டிப்பார்த்தார்கள். என்னையும் என் மூட்டையையும் சத்தேகத்துடன் நோக்கினர்கள். யாரோ திருடன் களவாடிய பொருள்களுடன் வந்திருக்கிறன் என்று எண்ணினார்கள் போலும். ஆயினும் உள்ளே வர அனுமதித்தார்கள். நான் என் மூட்டையை அவிழ்த்து வீட்டுக் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு பழம் கொடுத்ததும் அவர்களுடைய மனநிலை ஒரேயடியாக மாறிவிட்டது. பூச்சி வைத்த ஆப்பிள்களை எந்தத் திருடனும் மூட்டைகட்டித் தன் முதுகில் சுமந்துகொண்டு வரமாட்டானே! பாத்திரத்தில் சுட்ட பாதி ரொட்டி எனக்கு முன் வைக்கப்பட்டது. நான் அதைச்சவைத்தேன். களைப்பினால் எனக்கு உணவு செல்லவில்லை. தலையணைக்குப் பதில் ஆப்பிள் மூட்டையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு படுத்தேன். உடனே உறங்கிவிட்டேன்.

ஸரீ-அகாச் போய்ச் சுருக்கு வழி எது என்று காலையில் வீட்டுக்காரர்களிடம் கேட்டுக் கொண்டு மறுபடி மூட்டையைச் சுமந்தவாறு புறப்பட்டேன். நடுப்பகலில் அங்கு போய்ச் சேர்ந்தேன். களைப்பு மிகுதியால் நிற்கக்கூட எனக்கு வலுவில்லை. என போதாத காலம், அன்று சந்தை நாள். சுற்று வட்டாரங்களிலிந்து ஆட்கள் எல்லா வகைப் பண்டங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். எனவே நான் என்னதான் பாடுபட்டும் என் ஆப்பிள்களைச் சீத்துவார் இல்லை.

ஆப்பிள்கள் என் முதுகின் மேல் அல்ல, தரையில் கிடந்தன என்பதே எனக்கு நிதி கிடைத்தாற்போல் இருந்தது. “வாருங்கள், வருந்த மாட்டீர்கள்! சல்லிசான விலைக்குக் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன்! வாருங்கள்! இந்த ஆப்பிளைத் தின்றால் ரொட்டியே வேண்டாம்! தோட்ட விளைச்சலை மதிப்பிடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே விலைக்குக் கொடுப்பேன் வாருங்கள், வருந்த மாட்டீக்ள்!” என்று கத்தினேன்.

கொஞ்சங் கொஞ்சமாக எப்படயோ அவற்றை விற்றேன். அப்புறம் காசுகளை எண்ணிப்பார்த்தபோது ஆறு தன்காக்களும் ஐந்து கோப்பெக்குகளும் இருந்தன. இவ்வளவு பணம் கிடைக்கும் என்று நான் நினைடக்கவே இல்லை!

பணத்தோடு சந்தையில் சுற்றி வருவதே இன்பம். கண்ணில் பட்டது, நாக்கில் உதித்தது எதையும் தேவைப்பட்டால் வாங்கலம் என்று தெரியும் போது நாம் எல்லாவற்றையும் மதிப்பிடும் விதமே வேறு. எவனோ இளைஞனிடம் ஒர் இரும்புத் தொட்டியைச் சுமார் பத்து நிமிடங்கள் பேரம் பேசினேன். ஆனால் மிகமிகக் குறைந்த விலைக்கு அதைக் கேட்டேன், அவனிடம் கடுமையான திட்டு வாங்கிக் கட்டி கொண்டேன். வெல்வெட் கழுத்துப் பட்டை வைத்த மெல்கோட்டு ஒன்றை வெகு நேரம் பேரம் பேசினேன், முடிவில் போட்டுக்கொண்டுகூடப் பார்த்தேன். அது எனக்கு மட்டும் அல்ல, என் வருங்காலக் குழந்தைகளுக்கும்—அவர்கள் எத்தனை பெயராய் இருந்தாலும் சரி—சேர்த்துத் தைக்கப்பட்டது போல் அவ்வளவு விசாலமாய் இருந்தது. என் உயரமும் பருமனும் என்ன என்பதை விற்பவன் ஆரம்பத்திலிருந்தே நன்றகப் பாத்திருந்தான். மேல்கோட்டின் அளவோ அவனுக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும் அவன் என் மேல் சள்ளுப்புள்ளென்று விழுந்தான்.

அப்புறம் நான் கால்நடைச் சந்தைக்குப் போனேன். எதுவோ என்னை அங்கே ஈர்த்தது. மதப்பள்ளி மாணவனின் தலைப்பாகை போல முறுக்கிய கொம்புகளும் செங்குத்தான நெற்றியும் கொண்ட பெரிய செம்மறிக்கடா ஒன்றை விலை கேட்கத் தொடங்கினேன். அதற்குள் ஏதோ தெரிந்த முகம் என் முன்னே பளிச்சிட்டது. கவனித்துப் பார்த்தேன். ஒரே கயிற்றில் இணைத்த செம்மறிக்கடாக்களின் மந்தையின் அருகே நின்றான் ஒர் இளைஞன். கஸாஃகிய மேல் கோட்டும் உள்வெளியாகத் திருப்பட்ட மென்மயிர்த் தொப்பியும் அணிந்திருந்தான் அவன். நுனி பருத்த தடி ஒன்று அவன் கையில் இலகியது. என்ன இது, என் நண்பர்களில் எவனும் இந்த மாதிரி உடை அணிவது கிடையாதே. அப்படியும் இந்த முகம் எனக்கு மிக மிகப் பழக்கமனதாகத் தோன்றியது. புழுதியிலும் வெயிலிலும் அடிபட்டு நமுதாபோலப் பழுப்பேறிருந்தது அந்த முகம். புழுதி படிந்த இமைமயிர்களுக்கு அடியே தெரிந்த பழுப்பு விழிகளும். பழக்கமானவையாகத் தோன்றின. போதாக்குறைக்கு அவை தாமும் என்னை நம்பிக்கையோடு நோக்கின...

“அமன்!” என்று வீரிட்டு அவனிடம் தாவினேன். அவனும் என்னைவிட உரக்கக் கத்திக்கொண்டு என்னை நோக்கிப் பாய்ந்து வந்தான். நாங்கள் தழுவிக்கொண்டோம், ஒருவர் தோள்மேல் ஒருவர் தட்டிக்கொடுத்தோம். பிறகு அக்கம் பக்கமாக உட்கார்ந்து போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் விசாரிக்கலானோம். மேய்ப்பர்களிடமிருந்து தப்பி ஒடியபோது பிரிந்தவர்கள் தாம், அப்புறம் நாங்கள் சந்திக்கவே இல்லையே. மற்றவனுக்கு மேய்ப்பர்களின் வன்மத்திலிந்து தப்ப முடிந்ததா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லையே.

அமன் பிழைத்தது மறுபிழைப்புத்தானாம். மேய்ப்பர்கள் அவனை நெருங்கி விட்டார்களாம். அதற்குள் ஒரு மேய்ப்பன் புதிய குதிரைச் சாணத்தில் வழுக்கி விழுந்தானம், அவன்பின் வந்தவன் அவன்மேல் இடறி விழுந்து விட்டானாம். இருவரும் எழுந்திருப்பதற்குள் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்ற அச்சத்துடன் கிராமம் கிராமமாகச் சுற்றி அலைந்தானாம். முல்லாவின் கதி என்ன ஆயிற்று என்பதுபற்றி என்னைப் போலவே அவனும் ஒன்றும் கேள்விப்படவில்லையாம். உண்மையைச் சொன்னால் அவன் யாரையும் கேட்கவே இவ்லை. வீடு திரும்ப ஆசை உண்டாயிற்றாம், ஆனால் வெறுங்கையோடு திரும்பத் தயங்கினானாம். சீம்கந்த் நகரில் இருந்த ஒன்றுவிட்ட சித்தப்பா வீட்டுக்குப் போக முதலில் முடிவு செய்தானாம். ஆனால் அவன் துரதிர்ஷ்டம், அவர் அதற்கு ஒரு மாதம் முன்பே காலமாகிவிட்டாராம். இந்த நிலையில் பணக்காரக் கால்நடைப் பண்ணைக்காரன் ஒருவனின் மந்தையை வழியில் கண்டானாம். பிடித்ததோ பிடிக்கவில்லையோ, அந்தப் பண்ணைக்காரனிடமே வேலைக்கு அமர்ந்துவிட்டானாம். இப்போது ஒரே சந்தோஷமாய் இருக்கிறானாம். பாங்கான உடையும் வயிறார உணவும் கிடைக்கின்றனவாம். வருஷத்துக்கு இரண்டு செம்மறிகளும் ஒரு வெள்ளாடும் மேய்ப்பர்களுக்குக் கூலியாம். ஆகவே, செம்மறிகள் இரண்டிரண்டு குட்டிகள் போட்டால், நாளடைவில் அமன் தானே பெரிய மந்தைக்குச் சொந்தக்காரன் ஆகிவிடலாம். இப்போது அவர்கள் தாஷ்கந்த் சந்தைக்கு மந்தையை ஒட்டிப்போவதாகவும், அங்கே வீட்டுக்குப் போய் அப்பனிடம் விவரங்களைச் சொல்லப் போவதாகவும் அவன் மகிழ்ச்சியுடன் கூறினான். ஸரீ-அகாச்சில் இன்று சந்தை நாளாய் இருப்பதால் தக்கவிலை கிடைத்தால் ஆடுகளை இங்கேயே விற்றுவிடலாமே, தாஷ்கந்த் ஒட்டிப்போக வேண்டாமே என்ற எண்ணத்துடன் தங்கிவிட்டதாகச் சொன்னான்.

எனக்கு அமன்மேல் பொறாமையாய் இருந்தது. இவனுக்கு எவ்வளவு நல்லதிர்ஷ்டம்! என்னைப்போலவா, பூச்சி அரிந்த ஆப்பிள்களைக் கூலியாகப் பெற? ஆப்பிள்களைப் பற்றி நான் அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. என் பணத்தை மட்டுமே அவனுக்கு காட்டினேன். சம்பாத்தியத்தில் பெருந்தொகையைச் செலவிட்டுவிட்டதாகவும் இல்லாவிட்டால் நானே ஆடுகளை வாங்கியிருக்கலாம் என்றும் கதை விட்டேன். சுருங்கச் சொன்னால் அவன் என்முன் பெருமை அடித்துக் கொள்ள நான் இடம் தரவில்லை. அவனுடைய வேலை எனக்கும் பிடித்திருக்கிறது என்றும், தவிர தாஷ்கந்த் திரும்பவும் வேளை வந்து விட்டது என்றும் அப்புறம் ஜாடையாகக் கூறினேன். என்னையும் வேலைக்கு வைத்துக்கொள்ளும்படித் தன் எஜமான் காதில் அவன் ஒரு வார்த்தை போட்டு வைத்தால் நன்றாய் இருக்கும் என்றும், நான் நாணயமாகவும் தன்னலம் இன்றியும் உழைப்பேன் என்றும் சொன்னேன். அமனுக்கு என் வேண்டுகோள் பிடித்துவிட்டது என்பதைக் கண்டேன். முதலாவதாக, என்னைச் சந்தித்ததில் அவனுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி, இரண்டு பேராக இருந்தால் அதிகக்குதூகலமாய் இருக்கும். இரண்டாவதாக, முக்கியமான சிபார்சு செய்பவன் பாத்திரம் வகிப்பது அவனுக்கு உவப்பாய் இருந்தது.

புருவத்தை உயர்த்தி, “நல்லது! கோக்-தெராக் போய்ச் சேர்ந்ததும் எஜமானைக் கேட்கிறேன்” என்றான்.

ஆனால் விஷயம் இன்னும் நன்றாக முடிந்துவிட்டது. அவன் எஜமானிடம் கேட்கவே தேவைப்படவில்லை. மந்தையைப் பார்த்துக்கொள்வதில் மாலை வரை நான் அவனுக்கு ஒத்தாசை செய்தேன். அந்த வெள்ளிக்கிழமை ஸரி-அகாச்சில் வெள்ளாடுகளுக்குப் பலத்த கிராக்கி. அமனுடைய எஜமானன் தன் வெள்ளாடுகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டான். ஆனால் செம்மறியாடுகள்—ஒர் எழுபது உருப்படிகள்—எஞ்சியிருந்தன. மாலைத் தறுவாயில் மந்தைச் சொந்தக்காரன் புறப்படத் தயாராகிக் குதிரைமேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அமனிடம் சொன்னான்.

“உன் நண்பன் நல்ல பையனாகக் காண்கிறான். ஆடுகளும் அப்படி அதிகமாய் இல்லை. செம்மறிகளை ஒட்டிக்கொண்டு விடியற்காலையில் கோக்-தெராக் சந்தை வந்து சேருங்கள். நீங்கள் இரண்டு பேரும் சுலபமாகச் சமாளித்துவிடுவீர்கள். நான் முன்னே போகிறேன்.”

நாங்கள் களிப்போடு இசைந்தோம். மார்பில் கையைச் சேர்த்து வைத்து மந்தைக்காரனுக்கு வணக்கம் தெரிவித்தோம். அவன் சவுக்கைச் சொடுக்கிக் குதிதையை விரட்டிச் சென்று விட்டான். நாங்கள் செம்மறிகளைக் கொட்டடைக்கு ஓட்டிப் பட்டியில் அடைத்துவிட்டுப் பொழுதுசாயும் வரை இளைப் பாறுவதற்காகப் படுத்தோம். நிலவு எழுந்ததுமே நாங்கள் கோக்-தெராக் புறப்பட்டோம்.

சீட்டியடித்தும் கூவியும் ஆடுகளை உசுப்பிக்கொண்டும், மந்தையை அடிக்கடி சுற்றிவந்து அது சிதறிவிடமல் கண்காணித்துக் கொண்டும் நாங்கள் முன்னேறினோம். நாங்கள் சுமார் ஒரு மைல் கூடப் போயிருக்க மாட்டோம், அதற்குள்ளாகவே நாங்கள் செய்யப்போவது உல்லாச இரவு உலா அல்லா, சித்திரவதை நிறைந்த கடும் பயணம் என்பதை நான் பிரிந்துகொண்டேன். “மட்டி, ஆடு மாதிரி” என்று நான் எத்தனையோ தடவைகள் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் அப்படித் திட்டியவர்களில் எவருமே இந்தச் செங்குத்து நெற்றி அசமந்தங்களில் பாதி அளவுகூட முட்டாள் அல்ல என்பதை இப்போது தான் கண்டேன். செம்மறி ஆட்டின் மடத்தனத்துக்கு எதையாவது நிகராகச் சொல்ல முடியுமானால் அது செம்மறி ஆட்டின் மூர்க்கம்தான். இந்த மாதிரி மூளையை வைத்துக் கொண்டு இத்தகைய மூர்க்க சுபாவத்தைப் பெற உலகில் தோன்றிய முதல் செம்மறி ஆடு மிகுந்த சிரமப்பட்டு முயன்றிருக்கும். என் கருத்துப்படி, இந்த இரண்டில் ஒன்றே தாராளமாகப் போதும். செம்மறி ஆடு ஒன்று மட்டுமே இருந்தபோது—தொடக்கத்தில் ஒரே ஒரு செம்மறி தான் இருந்திருக்கும்—இந்தப் பயங்கரமான குணச் சேர்க்கை அவ்வளவாகக் கருத்தை ஈர்த்திருக்காது. இன்றுவரை நிலைமை இவ்வாறே இருந்துவருகிறது. தனிச் செம்மறியாட்டை எப்படியாவது சரிப்படுத்திச் சமாளித்துவிடலாம். நாம் தனி ஆளாக இருந்து செம்மறிகள் நிறைய இருந்தாலோ, அவை சரியான சைத்தான்களாக மாறிவிடுகின்றன. (சைத்தான் தலையில் ஆட்டுக் கொம்புகள் ஏன் இருக்கின்றன என்பது இப்போது எனக்குப் புரிகிறது.) நரகத்தில் பாவியை முழுச் செம்மறி மந்தையைத் தனியாகச் சமாளிக்கும்படி விடுவதுதான் தண்டனை போலும்.

இவற்றை உண்மையில் சமாளிக்க வல்ல ஒரே பிரகிருதி மனிதனே அல்ல, வெள்ளாடுதான். இது தெரிந்த விஷயம். இதன் காரணம், வெள்ளாடு தன் மூர்க்க குணத்தால் செம்மறிகளின் பிடிவாதத்தை முறிக்கக் கூடும் என்பதாய் இருக்கலாம். அவை அதனிடம் ஒரு வார்த்தை சொல்வதற்குள் அது அவற்றிடம் பத்து வார்த்தைகள் செல்லிவிடும் போலும். வெள்ளாட்டுக்கு அவை சொந்தத் தகப்பனுக்குப் போலக் கீழ்ப்படிகின்றன. உண்மையைச் சொன்னால் சொந்தத் தகப்பனை அவை அடையாளம் கண்டுகொண்டால் கூட ஒரு சிறிதும் மதிப்பதில்லை. வெள்ளாடு இல்லாவிட்டால் செம்மறிகள் மனம் போன திக்கில் கண்மண் தெரியாமல் நடக்கும். மேய்ப்பன் கழுதைமேல் உட்கார்ந்து, மந்தைக்கு முன்னே போய் வெள்ளாடு போல மே-ஏ-ஏ என்று கத்த வேண்டும். அப்போது செம்மறிகள் அவன் பின்னே ஒருங்காக வரும். எங்களிடமோ, வெள்ளாடும் இல்லை, கழுதையும் இல்லை. இந்த அழகில் அனுபவக் குறைவு காரணமாக நான் மே-ஏ-ஏ என்று கத்தியது, அடி முட்டாளான செம்மறியைக் கூட ஏமாறச் செய்திருக்க முடியாது.

ஆனாலும், ஆண்டவன் உதவியால் நாங்கள் எப்படியோ முன்னே நகர்ந்தோம். இரவோ, எழில் ஒவியமாய்க் காட்சி தந்தது. மலைப்பாங்கான ஸ்தெப்பி வெளி நாற்புறமும் நீண்டு பரந்திருந்தது. மலை சரிவுகள் நிலவில் வெள்ளியாக மினுமினுத்தன. கரு நிழல்கள் வெல்வெட் மென்மை உள்ளவை போலத் தோற்றம் அளித்தன. செங்குத்து நெற்றியும் பொன்னிறமும் கொண்ட நிலாகூடக் காற்றால் திரட்டிக் கூட்டப்படும் மேகங்களுக்கிடையே பிடிவாதமாக இடித்துப் புகுந்த வழி செய்துகொண்டு வானில் நீந்தியது. புற்கள் சிலு சிலுக்க, நறிய குளுமையை ஏந்தித் தரைமீதும் வீசியது காற்று. இரவின் இந்த வனப்பும் இன்பக் கவர்ச்சியும் செம்மறி ஆடுகளைக் கூடச் சொக்க வைத்து விட்டன. அவை அமைதியாக வழியோடு நடந்தன. எப்போதாவது அவை கத்தியதுகூட எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அல்ல, இசைவைக் காட்டுவதற்காகவே. விரைவில் எங்கள் சாலை இருப்புப் பாதையை நெருங்கி, பாதையோரமாக எங்களை இட்டுச் சென்றது. தந்திக் கம்பிகளின் மெல்லிசை பாதையைத் தொடர்ந்து வந்தது. எனக்கும் பாட வேண்டும் போல் இருந்தது. எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயியில் நீண்ட கார்வை கொடுத்துப் பாடினேன்.

“நன்றாகப் பாடுகிறாய். தெரிந்த பாட்டை நான் கேட்டு வெகு காலம் ஆகிவிட்டது” என்று கனவு காண்பவன்போலக் கூறினான் அமன்.

இந்தப் புகழ்ச்சியால் உற்சாகம் அடைந்து நான் மேலும் மேலும் குரலை உயர்த்திக் கொண்டு போனேன். நானே மெல்லிய ஸ்வரங்களில் ஆரோகணித்து மேலே மேலே போய், வான விதானத்தை எட்டி விட்டேன்—விண்ணவர்கள் என் பாட்டைக் கேட்கும்படியும் விளிம்புகள் வரை வானம் அதிரும் படியும். எதைப் பற்றிப் பாடினேன் என்பது நினைவில்லை. இரவையும் நிலாவையும் நெடுஞ் சாலையையும், இரண்டு வெள்ளி நூல்கள் போல வெகு தூரம் நீண்டு சென்று முன்னே எங்கோ தொலைவில் இணைந்து (எல்லாத் தரைப்பாதைகளும் ஒன்றுகலப்பது போலவே) ஒன்றாகும் தண்டவாளங்களையும் பற்றிப் பாடினேன் போலும்.

இதற்கிடையே செம்மறிகள் அடிக்கடி ரயில்வே மேட்டில் ஏறலாயின. ஒரு வெள்ளாடு இல்லாதது எங்களை மீண்டும் உறுத்தத் தொடங்கிற்று. முன்னே ஒரு சிறு கிராமம் தெரிந்தது, இருப்புப் பாதையோடு ஒட்ட வைத்தது போல. கப்பிச் சாலை கிராம வீதி வழியே வீடுகளின் முன் சுவர்களின் இடையே போயிற்று. நாங்கள் செம்மறிகளை முன்னே விரட்டினோம். அப்பால் கப்பி ரஸ்தா இருப்புப் பாதையை அடுத்துச் சொல்லலாயிற்று. அமன் இருப்புப் பாதையைத் தலைசைப்பால் சுட்டினான்.

“ரயிலில் பயணம் செய்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள்” என்று சொல்லிவிட்டு, “நாமும் ரயிலேறி உட்கார்ந்து எங்கேனும் மிக மிகத் தொலைவுக்குப் பயணம் செய்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!” என்று ஆர்வம் பொங்கக் கூறினான்.

“ஆமாம், அருமையாய் இருக்கும். கணக்கில்லாத பயணம் இருந்து இஷ்டம்போல ரயில் பயணம் செய்ய வேண்டும்! கவூன்சிக்கு, துர்க்கிஸ்தானத்துக்கு, சீனத்துக்கு அல்லது வேண்டுமானால் மாஸ்கோவுக்குப் போகலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், இதுதான் முறை போல. நாமோ மேலும் மேலும் ரயில் சவாரி செய்யலாம்...”

இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஏதோ கதையில் வருவதுபோல உண்மையாகவே காதில் பட்டது ரயிலின் ஒசை! தண்டவாளங்கள் மேல் விரைந்து வந்தன இரண்டு நெருப்புக் கண்கள். அவை வர வர எங்களை வேகமாய் நெருங்கின. அமனும் நானும் இன்னமும் எங்கள் மனக்கோட்டையின் பாதிப்பில் இருந்தோம் ஆகையால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவற்றையே நிலைக்குத்திட்டு நோக்கியவாறு இருந்தோம். எங்கள் கனவு இதோ பலித்துவிடும் என்று எங்களுக்குத் தோன்றியது. வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் இவ்வளவு பக்கமாக ஓடும் ரயிலைக் கண்ணாரக் கண்டு களிக்கலாமே. எங்களைப் போன்ற பையன்களுக்கு இந்த வாய்ப்பு ஒவ்வொரு நாளும் கிடைத்துவிடுவது இல்லையே. அது பிரயாணி வண்டியே அல்ல, சரக்கு வண்டி, என்றாலும் அதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு எஞ்சின்கள் இணைத்திருந்தன. பெட்டிகளோ—பெரிய சிவப்பு நிறப் பெட்டிகள் அவை—முடிவே கண்ணுக்கு எட்டாதபடி அத்தனை நிறையக் கோத்திருந்தன.

எஞ்சின்கள் அருகாகத் தடதடத்து விரைந்தன. திடீரென இரண்டும் காது செவிடுபடும்படிச் சங்கூதின. அவற்றுக்கு என்ன தான் நேர்ந்ததோ, இன்றளவும் எனக்கு விளங்கவில்லை. ஒரு பத்து லட்சம் எருதுகள் நடு நிசியில் தங்கள் சொந்தக்காரனை மாற்ற முடிவு செய்து எல்லோரும் கேட்கும்படி இந்த முடிவை அறிவித்தது போல் இருந்தது அந்த இரண்டு எஞ்சின்களும் செய்த முழக்கம். சுற்று வட்டாரம் முழுவதும் அந்த கர்ஜனையால் திடுக்கிட்டு அதிர்ந்தது. நானும் அமனும் கூடப் பதறிப் போய்விட்டோம். எங்கள் செம்மறிகளோ, உலகமே முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்து வேறு இடத்துக்குச் செல்லும் சாலையை உடனே தேடுவது அவசியம் என்று தீர்மானித்து விட்டன. வீடுகளின் சுற்றுச் சுவர்களோடு நெருங்கியிருந்த சில செம்மறிகள், திகிலால் சுவர்கள் மேல் பூனைகள் போலத் துள்ளி ஏறிக்கொண்டன. ஆனால் இந்தக் கலையில் பூனைகளுக்கும் அவற்றுக்கும் வெகு தூரம். எனவே அவை மறுபடி சரிந்து விழுந்தன. மடமடவென்று சரிந்து ஒன்றன்மேல் ஒன்றாக அவை விழுந்து குமைந்தது, இந்த வட்டாரத்தில் இதற்கு முன் ஒரு போதும் காணாத காட்சியாக இருக்கும். மற்ற ஆடுகள் வந்த வழியாகவே இருண்ட வீதியில் திரும்பி ஒடின. வேறு சிலவோ, மூளையை அறவே பறிகொடுத்துவிட்டு, ரயில் மேட்டின் மேல் ஏறப் போயின. நல்ல வேளையாக, தக்க சமயத்தில் அவை பின் வாங்கி ஒடி வந்துவிட்டன. சுருங்கச் சொன்னால் அவை விந்தையான ‘கண்ணா மூச்சி’ ஆடத் தொடங்கின. ரயில் வண்டி கனத்த தடதடப்புடன் எங்கள் அருகாகக் கடந்து விரைந்தது. முடிவில் சிவப்பு விளக்குகள் பொருத்திய கடைசிப் பெட்டியும் போய்விட்டது. கோபத்தால் சிவந்த சைத்தானின் கண்கள் போன்று ஒளிர்ந்தன அவ்விளக்குகள். வண்டி போய்விட்ட பிறகு பார்க்கிறோமோ, எங்கள் செம்மறி மந்தையைக் காணோம்!

செங்கல் சூளையிலிருந்து புகை வருவது போலப் புழுதி படலம் படலமாகக் கிளம்பியது. செம்மறி ஆடுகளின் பரிதாபக் கமறல் ஒலிகளும் அருகாமையில் கேட்டன. வீடுகளின் சுற்றுச்சுவர்களோடு நசுக்கப்பட்டிருந்த சில நொண்டி ஆடுகளும் சினைப்பட்டிருந்த செம்மறிகளுமே இவை. எங்கள் மந்தையில் எஞ்சி இருந்தவை இவை மட்டுமே.

சிதறிவிட்ட செம்மறிகளைக் கூவி அழைத்தவாறு நாங்கள் ஒரே கலக்கத்துடன் வெவ்வேறு புறங்களில் ஒடினோம். இருட்டில் நான் ஒர் ஆட்டுடன் மோதிக்கொண்டு அதைப் பின்னே இழுத்து வந்தேன். அமனின் நிழலுரு புழுதிக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

“எங்கேதான் ஒழிந்தீர்கள், பாழும் விலங்குகளே!” என்று அழுங்குரலில் ஓலமிட்ட அமன் என்மேல் மோதிக்கொண்டான்.

“ஆடுகள் எங்கே?” என்று இருவரும் ஏககாலத்தில் ஒருவரையொருவர் கரகரத்த குரல்களில் கேட்டோம்.

அமன் என்னை வன்மத்துடன் பார்த்து, இடையிலிருந்து கயிற்றை அவிழ்த்து, எஞ்சிய ஆடுகளை அதனால் ஒன்றாக இணைத்துக் கட்டினான். பின்பு நாங்கள் கிராம வீதியில் மறுபடி ஓடினோம். சுற்றுச் சுவர்கள் சில இடங்களில் இடிந்திருந்தன. இங்கே செம்மறிகள் மலையாடுகள் போல அவற்றைத் தாண்டியிருக்கும் என்று தோன்றியது. நாய்கள் எதிர்ப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் நாங்கள் ஒவ்வொரு சுவராக ஏறிக் குதித்தோம். கறுப்பு விரிப்பில் எறும்புகளைத் தேடுவது போன்ற வேலை இது. ஆனாலும் நாங்கள் சுமார் மூன்று மணி நேரம் வீடு வீடாகத் தாண்டிக் குதித்துத் தேடி, ஒரு வீட்டு முகப்பில் ஐந்து செம்மறிகளையும் மற்றென்றில் மூன்றையும் ஒரு பாழ் மனையின் இடிபாடுகளில் இன்னும் சிலவற்றையும் பயிர்களுக்கிடையே ஒரு பத்தையும் கண்டுபிடித்தோம்... களைப்பால் நாங்கள் செத்துச் சாவடைந்து போனோம். சற்று இளைப்பாறிய பின் ஆடுகளை மறுபடி எண்ணத் தொடங்கினேம். ஏழு செம்மறிகள் குறைந்தன. நான் அமனைப் பார்த்தேன், அவன் என்னை உறுத்து நோக்கினான். மண்சுவரில் பதித்த பாசி மணிகள் போல இருளில் புழுதிப்படிவுகளினூடே பளிச்சிட்டன அவனுடைய விழிகள்.

“இப்போது என்ன செய்வது?” என்றான்.

எனக்கோ, அழுகையே வந்துவிடும்போல் இருந்தது.

“நாம் இரண்டு பேரும் இரண்டு வருஷங்கள் வேலை செய்தாலும் ஏழு செம்மறிகளின் கணக்கைத் தீர்க்க முடியாது!”

“வா, இன்னும் தேடுவோம்.”

பலபலவென்று விடியலாயிற்று. நாங்கள் ரயில் மேட்டின் மறு பக்கம் போய், ஆட்டுப் புழுக்கைக் குவியல்களை இங்குமங்கும் கண்டு, அவற்றைத் தடம் பற்றிச் சென்று, சிறிது தூரத்தில் ஓடைக்கரையில் இன்னும் இரண்டு ஓடுகாலிகளைப் பிடித்தோம். மற்றவற்றைக் காணவில்லை, தேடவும் நேரமில்லை. கோக்-தெராக் தூரத்தில் இருந்தது. ஆட்டுக்காரன் அங்கே சந்தையில் எங்களுக்காகக் காத்திருத்தான்.

வழியில் ஒரு செம்மறி மந்தையிலிருந்து பின்தங்கத் தொடங்கிற்று, மே என்று கத்திற்று, லொக்கு லொக்கென்று இருமிற்று. அதன் விழிகள் பளிச்சிட்டன. மற்றவற்றோடு சேர்த்து ஓட்ட நாங்கள் என்னதான் முயன்றும் அது மசியவில்லை. குந்தப்போவது போல அடிக்கடி பின் கால்களை அகற்றி வைத்துக் கொண்டது.

எங்களுக்கு எதிராகப் பழுப்புக் குதிரை ஏறிவந்த ஒரு கஸாஃகியன், “டேய், தம்பிகளா! இந்த ஆட்டை விரட்டாதீர்கள். இது குட்டி போடப் போகிறது!” என்று கத்தினான்.

முதலில் நாங்கள் இதை நம்பவில்லை. ஆனால் ரயில் எஞ்சின்களின் அலறலால் மிரண்டுபோன செம்மறிக்குப் பிரசவ வேதனை உரிய நேரத்துக்கு முன்பே உண்மையில் தொடங்கிவிட்டது! இது ஒன்றுதான் எங்களுக்குக் குறையாய் இருந்தது!... வேளை வரும் முன்பே உலகில் தோன்ற அவசரப்படும் இந்தக் கலப்புசாதிக் குட்டி உருப்படாமல் போக! ஆனால் பாவம் செம்மறியின் விழிகள் பிதுங்கின. அது முனகிற்று, துடிதுடித்தது. இதைக் கண்டதும் எங்கள் வன்மம் போன சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது. மற்ற ஆடுகளை விலக்கி ஓட்டிவிட்டு நாங்கள் எங்களால் முடிந்த வகையில் பிரசவம் பார்க்கத் தொடங்கினோம். செம்மறிக்கு வலி எடுக்க ஆரம்பித்ததும் நாங்களும் அதனுடன் சேர்ந்து முக்கி முனகினோம், ஏதோ நாங்களே குட்டி போடப் போகிறவர்கள் போல உரக்கத் தொண்டையைக் கனைத்துக்கொண்டோம். முடிவில் நாங்கள் ஈன்றுவிட்டோம். தாய் ஆடு குட்டியைக் கால் முதல் தலைவரை நக்கிக் கொடுத்தது. நாங்களும் அப்படியே செய்திருப்போம். ஆனால் பொங்கிப்பெருகிய அன்பில் திளைத்த தாய் ஆடு எங்களுடன் அன்பைப்பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டது. தவிர குடும்ப பாசத்துக்கெல்லாம் நேரமும் இல்லை. நாங்கள் போய்ச் சேருமுன் சந்தையை மூடிவிடுவார்களோ என்ற ஆபத்து இருந்தது.

சினை ஆடு எங்களை வெகு நேரம் தாமதப்படுத்திவிட்டது. கூடவே இப்போது அதற்குப் பதில் நாங்கள் குட்டியை இடுப்புக் குட்டையால் சுற்றிச் சுமந்து செல்ல வேண்டியிருந்தது. ஆயினும் மந்தையைச் சமாளிப்பது இப்பொழுது எவ்வளவோ சுளுவாகிவிட்டது. அப்போதுதான் ஈன்ற ஆடு எங்களில் எவன் குட்டியை வைத்துக் கொண்டிருந்தானோ அவன் பின்னால் களைப்பின்றி ஓடியது. மந்தையின் மற்ற ஆடுகள் கும்பலாக அதைத் தொடர்ந்தன. ஆகவே, தலையாடு இல்லை என்ற குறை இப்போது தீர்ந்துவிட்டது. வெள்ளாட்டினுடைய வெற்றியின் இரகசியம் தன்னம்பிக்கையே என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். போதிய தன்னம்பிக்கை உள்ள தோற்றத்துடன் கம்பீரமாக நடக்கும் எந்த ஆட்டையும் தொடந்து செம்மறிகள் எங்கு வேண்டுமனாலும் போகும்—அதல பாதாளத்துக்குக் கூட.

புனிற்றிளங் குட்டி தாய் ஆட்டின் பார்வையிலிருந்து எப்போதேனும் மறைந்து விட்டால், அதற்குப் பதில் நாங்கள் ஆடு போலக் கத்துவோம். எங்களுக்கு இது ஒருவேளை நன்கு வாய்க்காமல் இருக்கலாம். ஆனால் ஆட்டுக் குட்டியும் இப்போது தானே பிறந்தது. அதற்கும் என்ன பிரமாத அனுபவம் இருந்தது!—இப்படியாக நாங்கள் ஆற்றை அடைந்தோம்.

ஆற்றைக் கடக்க வேண்டும் என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது, அதாவது அமனுக்குத் தெரியும், அவன் என்னிடம் சொல்லியிருந்தான். ஆனாலும் இரவில் பல்வேறு சங்கடங்களுக்கு உள்ளாக நேர்ந்ததால் நாங்கள் இதை மறந்துவிட்டோம். இப்போதோ, திகைத்துத் தடுமாறிப் போனோம். இந்த இழிபிறவிகளின் கும்பல் முழுவதையும் தாமே விரும்பித் தண்ணீரில் இறங்க வைக்க முயன்று பார்த்தால் தெரியும்! ஒவ்வொன்றாகத் தூக்கிச் சென்று அக்கரை சேர்ப்பதும் நடவாது. ஆறு ரொம்ப அகலமில்லை, பிரசண்டமானதும் இல்லைதான். என்றாலும் அதனிடம் வேடிக்கை செல்லாது என்பது நிச்சயம். நாங்கள் கலந்து ஆலோசித்து, தாயன்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தோம். அமன் உடைகளைக் களைந்துவிட்டு ஆடடுக் குட்டியைக் கைகளில் தூக்கித் தாய்க்கு அதைக் காட்டியபின் உரக்க மே என்று கத்தியவாறு ஆற்றில் இறங்கி நடக்கலானான். ஆற்றின் இரைச்சல் அவனுக்கு உதவிற்று. அவனும். மோசமில்லாமல் கத்தினன். நான் செம்மறியாய் இருந்ததால் அது நிஜ ஆட்டின் கத்தலே என்று நம்பியிருப்பேன். தாய் ஆடு கலவரத்துடன் மிரள விழித்தவாறு கரையில் தயங்கி நின்றது. ஆனால் தாய் அன்பே முடிவில் வென்றது. அது நீரில் தாவிக் குதித்து அமன் பின்னே நீந்திச் சென்றது. மற்ற ஆடுகளும் அதைத் தொடர்ந்து நீரில் குதித்தன. மிகப் பயங்கொள்ளிகளான ஆடுகளை நான் ஆற்றில் நெட்டித் தள்ளி விரட்டினேன். விரைவில் மந்தை முழுவதும் ஆற்றில் இறங்கிவிட்டது. பாலில் விழுந்த சுண்டெலிபோலத் தலையை மேலே நிமிர்த்தியவாறு நீந்தின செம்மறிகள். சில வேலைகளில் பெருக்கு அவற்றை இழுத்துப் போகும். நாங்கள் அவற்றை லாவிப் பிடிப்போம். முடிவில் அதிர்ஷ்டம் எங்கள்மீது கருணை கொண்டது. மேற்கொண்டு நஷ்டம் இல்லாமல் மந்தை மறுகரை சேர்ந்துவிட்டது.

நாங்கள் மேலே நடந்தோம். சூரியன் மேற்கே சாய்ந்தது. கோக்-தெராக்கின் அறிமுகமான வரையுருக்கள் முன்னே தென்பட்டன.

ஆடுகள் களைத்திருந்தன. பசியினால் அவற்றின் விலாக்கள் ஒட்டிப் போயிருந்தன. நாங்களும் ஓரேயடியாகச் சோர்ந்துபோயிருதோம். எங்களுக்கு ஒரே ஓநாய்ப்பசி. ஆயினும் முதலில் ஆடுகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. அவைதாமே விலை போக வேண்டும். நாங்கள் அல்லவே! அவற்றைக் கொஞ்சமாவது மேயவிடுவது அவசியமாய் இருந்தது. அப்போதுதான் அவை உப்பிய வயிறுகளுடன் சந்தை போய்ச் சேரும். இல்லாவிட்டால் வாங்குபவர்கள் எங்கள் பக்கமே அண்ட மாட்டார்கள். அப்போது நாங்கள் புல் அடர்ந்த பெரிய திடலின் அருகாக நடந்து கொண்டிருந்தோம். கலந்து ஆலோசனை செய்தபின் நாங்கள் மந்தையை நிறுத்தி ஆடுகளைப் புல்வெளியில் மேயவிட்டோம். நாங்களும் சற்று தூரத்தில் சாய்ந்துகொண்டோம். மேலங்கிகளை விரித்துப் பேசாமல் படுத்துக்கொண்டு, மேயும் மந்தையைக் கண்காணித்தவாறு, ஆடுகள் தொலைந்து போனதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்று சிந்தித்தோம். சிந்திக்க எளிதாய் இருக்கும் பொருட்டுக் கண்களை லேசாக மூடிக்கொண்டோம்... உரத்த வசவுகளைக் கேட்டு விழித்து எழுந்தோம்!

எங்கள் அருகே நின்றது மிகப் பெரிய வெளிர் மஞ்சள் குதிரை. சாட்டையை வீசி ஆட்டியபடி எங்களை வைது நொறுக்கிக்கொண்டு அதன்மேல் உட்கார்ந்திருந்தான் பருத்த ஆள் ஒருவன், அமன் தள்ளி எழுந்து நின்றன். அவன் முதுகில் விழுந்தன சில சாட்டையடிகள். நான் தாமதித்து உணர்வுக்கு வந்தேன், ஆனால் அமனின் தவற்றைக் கருத்தில் கொண்டு, அடி படாமல் விலகித் தப்பினேன். அந்த ஆள் வாய்க்கு வந்தபடித் தொடர்ந்து வசவுமாரி பொழிந்தான். அவனது நீண்ட, நரையோடிய தாடி கோபத்தால் கலைந்து பறந்தது. சப்பை மூக்கு பருத்தி மேலங்கியில் இறுகத் தைத்த பெத்தான் போல் இருந்தது. அவன்தான் சுற்றுப்புற நிலங்களின் சொந்தக்காரன் ஆன பிரபல ஜமீன்தார், சப்பைமூக்கன் அஜீஸ் என்பதைப் பிற்பாடு தெரிந்துகொண்டோம். ஆனால் அவன் இந்த நிலங்களின் சொந்தக்காரன் என்பது எங்களுக்கு அக்கம் பக்கம் கண்ணோட்டிய உடனே விளங்கிவிட்டது. எங்கள் செம்மறிகள் பருத்தி வயலில் புகுந்து பருத்திச் செடிகளை அறவே மொட்டையடித்து விட்டன... சப்பைமூக்கு ஜமீன்தாரின் திட்டல்களாலும் புகலின்மையாலும் வரப்போகும் விபத்து பற்றிய கவலை தோய்ந்த முன்னுணர்வாலும் உந்தப்பட்டு நங்கள் ஆடுகளைத் திரட்டிச் சேர்க்க விரைந்தோம். அதற்குள் அவை வருங்காலப் பயிரின் ஒரு பகுதியைச் சரியானபடித் தின்று தீர்த்திருந்தன. எங்கள் தொல்லைகொடுக்கிகளை நாங்கள் வயலிலிருந்து ஓட்டி வந்ததும் ஜமீன்தார் சற்று தூரத்தில் வேலை செய்து கெண்டிருந்த பணியாட்களைக் கூவி அழைத்து ஆடுகளைத் தன் பண்ணைவீட்டுக்கு விரட்டிச் செல்லும்படிக் கட்டளை இட்டான்.

நாங்கள் அங்கபடியைப் பற்றிக்கொண்டு அவனைக் கெஞ்சாதவண்ணம் கெஞ்சினோம்:

“ஜமீன்தார் ஐயா, நாங்கள் ஏழை அனாதைகள். எங்கள்மேல் கருணைகூருங்கள் . வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்ய விடுங்கள். எங்கள் ஆயுள் காலம் முழுவதும் உங்கள் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்...”

ஜமீன்தாரோ தன்னை மறந்த வெறியுடன் மேலும் மேலும் திட்டினான், எங்களை மாற்றிச் சாட்டையால் விளாறினான், பின்பு மந்தையின் பின்னே குதிரையை விரட்டிச் சென்றான். நாங்கள் அவனைத் தொடர்ந்து போனோம். அமன் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டிருந்தான். பண்ணை வீட்டை நெருங்கியதும் ஜமீன்தார் வேகத்தைக் குறைந்தான். நாங்கள் அவனை எட்டிப்பிடித்து மறுபடி கெஞ்சத் தொடங்கினோம்:

“ஜமீன்தார் ஐயா, இரக்கம் கட்டுங்கள். இன்று சந்தை நாள் எங்கள் எஜமானர் சந்தையில் எங்களை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்குமே. நாங்கள் ஆடுகளைக் கொண்டு சேர்க்காவிட்டால் அவர் எங்களைக் கொன்றே போடுவார்!...”

ஜமீன்தார் எங்களை ஒரக் கண்ணால் பார்த்தான் .

“யார் உங்கள் எஜமானர்?”“கராஹேஜாபாய். அல்லா உங்களுக்கு அருள்வாராக...”

ஜமீன்தாரின் மனம் கொஞ்கம் இளகிவிட்டது போலத் தோன்றியது. அவன் ஒரக் கண்ணால் எங்களை மறுபடி பார்த்தான்.

“நல்லது, நான் உங்களை எஜமானருடன் பேசுகிறேன்.” —அவன் துப்பினான். அவரிடம் சொல்லுகிறேன் — அவன் மறுபடி துப்பினான் — கயவாளிப் பயல்களான உங்களுக்குச் சரியான பாடங் கற்பிக்கும்படி! இதற்காகவே இன்று சந்தைக்குப் போகிறேன்! மதபக்தியுள்ள முஸல்மானின் சொத்தை, இவ்வளவு பாடுபட்டுச் சம்பாதித்த சொத்தை, நீங்கள் எப்படி ஆழும் பாழும் ஆக்குகிறீர்கள் என்பதை அவடம் சொல்லுகிறேன், கீழ்மக்களா! கராஹோஜாவின் செம்மறிகள் விஷயத்திலும் நீங்கள் இப்படித்தான் செய்திருப்பீர்கள்!” —இப்படி அவன் இலக்குப் பார்த்துத் தாக்கவே நாங்கள் அச்சத்தால் விலவிலத்துப் போனோம்— “ஊம்! ஆடுகளைத் திரட்டிச் சந்தைக்கு ஒட்டிப் போங்கள்! பகல் பொழுது பாதி கழிந்துவிட்டது, நாய்ப் பயல்களா, நீங்கள் என்னடா என்றால் நிழலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்! ஆ-ஆ!”. என்று பெருங் குரலில் அதட்டி மறுபடி சாட்டையை வீசினான். நாங்கள் இதை எதிர்பார்த்துத் தயாராய் இருந்தோம் ஆதலால் அடி விழும்வரை காத்திருக்கவில்லை.

அல்லாவுக்கு நன்றி செலுத்தி, மேலும் கருனை பாலிக்கும் படி வேண்டிக் கொண்டு நங்கள் ஆடுகளைச் சந்தைக்கு ஒட்டிப்போனோம்.

எஜமானன் கோபத்தால் உடல் பதற எங்களுக்காகக் காத்திருந்தான். நாங்கள் பக்கத்தில் போனதுமே அவன் எங்கள் மேல் பாய்ந்து ஆபாச வசவுகளைப் பொழியத் தொடங்கினான். நாங்கள் அவற்றை எல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொண்டோம். இன்னும் சரியாகச் சொன்னால், ஆடுகள் குறைவதைக் கராஹோஜாபாய் கண்டுகொண்டதும் என்ன நடக்கும் என்ற காட்சியைக் கற்பனைக் கண்களால் நோக்கி நாங்கள் உணர்வற்று நின்றோம். ஆடுகளைப் பத்து பத்தாகச் சேர்த்துக் கட்டும்படி அவன் உத்தரவிட்டான். நாங்கள் அவ்வாறு செய்யத் தலைப்பட்டோம். எங்கள் நெஞ்சுகளோ, பாப்ளார் இலைகள் துடிப்பதுபோலப் பதைபதைத்துக் கொண்டிருந்தன. பத்து பத்து ஆடுகளாக மூன்று கும்பல்களைக் கட்டிவிட்டி நான்காவது பத்தைக் கட்டி முடிக்கும் தறுவாயில் அமன் பதினோராவது ஆட்டை அந்தக்கும்பலில் சட்டெனச் சேர்த்துவிட்டு எனக்குக் கண் ஜாடை காட்டினான். அவன் மூளையில் ஏதோ தந்திரம் உதித்திருக்கிறது என்று நான் புரிந்துகொண்டேன். நாலாவது கும்பலை மற்ற மூன்றின் பக்கத்தில் நான் இழுத்துச் சென்றபோது அமன் திடீரென என்னை அதட்டிக் கூப்பாடு போட்டான்.

“அட வலிப்பு கண்ட மடையா, சரியாக எண்ணக்கூடத் தெரியவில்லையே உனக்கு! பாருங்கள், ஜமீன்தார் ஐயா, பத்துக்குப் பதில் பதினொரு ஆடுகளை ஒவ்வொரு கும்பலிலும் கட்டியிருக்கிறான்! அட மதிகெட்ட மூடமே, உன்னால் ஜமீன்தார் ஐயா நஷ்டப்பட்டுப் போவாரே, உலக்கைக் கழுந்து, பாழாய்ப் போகிற குறைப்பிறவிப் பயலே!”

ஜமீன்தார் உடனே இந்த வலையில் விழுந்துவிட்டான். நாலாவது கும்பலில் இருந்த ஆடுகளை மறுபடி எண்ணினான், என்னைத் திட்டினான், பின்பு மற்றக் கும்பல்களை எண்ணிச் சரி பார்ப்பதற்காகத் திரும்பினான். அப்போது அமன் என் மேலங்கிக் கையைப் பற்றி வெடுக்கென்று இழுத்தான். நாங்கள் இருவரும் ஒரு புறம் துள்ளித் தாவி, நொடிப்போதில் சந்தைக் கூட்டத்தில் மூழ்கிவிட்டோம்.

(ஆசிரியர்- கஃபூர் குல்யாம்; மொழிபெயர்ப்பாளர்- பூ. சோமசுந்தரம்; வெளியீடு- முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ)